நீலகிரி மாவட்டம் கூடலூரில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட பாஜக தலைவர் அண்ணாமலை பேசுகையில், ''டேன் டீ நிறுவனத்தை மத்திய அரசு எடுத்து நடத்துவதற்கு பாஜக உறுதியாக இருக்கும். உறுதியை நாங்கள் கொடுக்கிறோம். எங்களுக்கும் அதுக்கும் சம்பந்தமில்லை என எழுதிக் கொடுத்துடுங்க. தமிழகத்தில் இருக்கக்கூடிய 60 பொதுத்துறை நிறுவனத்தில் தினக்கூலி கொடுக்க கூடிய ஒரே நிறுவனம் டேன் டீ. தினக்கூலி கொடுக்கிறார்கள் என்றால் எப்போது வேண்டுமானாலும் வேலையிலிருந்து கழட்டி விட்டு விடலாம், எப்போது வேண்டுமானாலும் வீட்டுக்கு துரத்தி விட்டு விடலாம், எப்போது வேண்டுமானாலும் குடியிருப்பில் காலி செய்ய சொல்லலாம். லேபர் கோர்ட்டுக்கு போக முடியாது எங்கேயும் போக முடியாது. உடனடியாக அதை மாற்ற வேண்டும்.
நிதி அமைச்சர் சொல்கிறார் கூட்டுறவுத்துறை அமைச்சர் சரியில்லை என்கிறார். கூட்டுறவுத்துறை அமைச்சர் சரியாக வேலை பார்க்கவில்லை என்கிறார். ரேஷன் கடையில் வரக்கூடிய எந்த பொருள்களும் தரமாக இல்லை என்று தமிழக அரசு நிதி அமைச்சர் சொல்கிறார். அதற்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் என்ன சொல்கிறார் என்றால், அதெல்லாம் ரேஷன் கடைக்கு போகிறவர்களுக்கு தானே தெரியும் மிட்டா மிராசு, மூணு தலைமுறையா வீட்டிலேயே படுத்து தூங்கிக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறவருக்கு எப்படி தெரியும் என்கிறார். நிதி அமைச்சர் சொல்கிறார் சாராய வருமானம் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அரசுக்கு வருமானத்தை காணோமே என்கிறார். யார் யாரோ சம்பாதிக்கிறார்கள் எனக்கு கஜானாவிற்கு பணம் வரவில்லையே என்கிறார். அடுத்தமுறை அறிவாலயத்தில் அமைச்சர்கள் கூட்டம் நடந்தால் அமைச்சர்கள் சட்டையைக் கிழித்துக்கொண்டு வெளியே வரப் போகிறார்கள். காரணம் எந்தக் கட்சியில் சுயமரியாதை இல்லையோ அந்த கட்சி நிறைய நாட்கள் நீடிக்காது. திமுகவின் முடிவுரை ஒவ்வொரு நாளும் எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது'' என்றார்.