Skip to main content

''எங்களுக்கு தனியா கொடுங்க...'' - திருச்சி மதுபானம் பாரில் ரகளையில் ஈடுபட்ட பெண்கள்!

Published on 20/04/2021 | Edited on 20/04/2021

 

ddd

 

திருச்சி மாவட்ட ஆட்சியர் சாலையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள காரைக்குடி உணவக மாடியில், கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக இயங்கி வருகிறது டியூக்ஸ் பார் (தனியார் மதுபானம் குடிக்கும் கடை). இங்கு அரசு அதிகாரிகள், பணக்காரர்கள், தொழிலதிபர்கள் ஆகியோர் வந்து வழக்கமாக மது அருந்திவிட்டுச் செல்வார்கள்.

 

அதேபோல், கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக இந்தக் கடைக்கு மூன்று பெண்கள் அரைக்கால் சட்டையுடன் வந்து மது அருந்துவது வழக்கம். மேலும் மது அருந்திவிட்டு மூன்று பெண்களும் நடனமாடிவிட்டு செல்வார்கள். அவர்கள் நடனமாடும்போது மது அருந்த வரக்கூடிய வாலிபர்கள் சிலர் அவர்களைக் கிண்டல் செய்வது, கையைப் பிடித்து இழுப்பது உள்ளிட்ட பல்வேறு அத்துமீறல்கள் நடந்தாலும் நிர்வாகமே அதை சரி செய்துவிடும்.

 

இந்நிலையில், வழக்கம்போல் நேற்று (19.04.2021) இரவு அந்த மூன்று பெண்களும் மது அருந்திவிட்டு நடனம் ஆடியபோது, இளைஞர்கள் அந்தப் பெண்களில் ஒருவரின் கையைப் பிடித்து இழுத்து அத்துமீறியுள்ளனர். இதுகுறித்து அந்தப் பெண்களில் ஒருவர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

 

தகவல் கிடைத்த சில நிமிடங்களில் கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் இருந்து பெண் காவலர்கள் மதுபான விடுதிக்கு வந்துள்ளனர். அப்போது மூன்று பெண்களும் குடிபோதையில் இருந்துள்ளனர். அவர்களைப் பெண் போலீசார் மாடியிலிருந்து கீழே அழைத்து வந்துகொண்டிருந்தனர். இதேபோல் அவர்களிடம் அத்துமீறிய இளைஞர்களையும் காவல்துறையினர் கீழே அழைத்து வந்துகொண்டிருந்தனர். இதனிடையே, இந்த விவகாரம் பற்றி அறிந்த கன்டோன்மென்ட் காவல் நிலைய காவலர் ஒருவர் சம்பவ இடத்திற்கு வந்து மதுபோதையில் இருந்த அந்த மூன்று பெண்களையும் பாதுகாப்பாக ஆட்டோவில் அனுப்பி வைத்தார். மேலும் அத்துமீறிய இளைஞர்களை எச்சரித்தும் அனுப்பியுள்ளார். 

 

அந்த மூன்று பெண்கள் மீது இதுவரை எந்த வழக்குகளும் பதிவு செய்யப்படவில்லை. மது போதையில் இருந்த அவர்களிடம் கேட்டபோது, ''ஏன் பெண்கள் குடிப்பதற்கு உரிமை இல்லையா? பெண்கள் குடிப்பதற்கு தனியாக பகுதியை ஒதுக்கிக் கொடுங்கள்'' என பெண் போலீசாரிடமும் நிர்வாகத்திடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த மூன்று பெண்கள் யார்? உதவி செய்த போலீசாருக்கும் அந்தப் பெண்களுக்கும் என்ன தொடர்பு? என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளும், சந்தேகங்களும் எழுந்துள்ளன. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஓடும் பேருந்தில் இருக்கை கழன்று வெளியே தூக்கி வீசப்பட்ட நடத்துநர்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
conductor was thrown out of the running government bus

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பேருந்து, பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த பஸ்ஸின் நடத்துநர் இருக்கை நெட்டு போல்டு கழன்று, அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த பேருந்தில் வந்த பயணிகளை பின்னால் வந்த வேறொரு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து ஓட்டுநர் சாலையில்  கிடந்த இருக்கையை எடுத்து பஸ்சில் போட்டுவிட்டு பணிமனைக்கு சென்றார். அதிர்ஷ்டவசமாக  நடத்துநர் தூக்கி வீசப்பட்ட நேரத்தில் அந்த வழியாக வேறு வாகனங்கள் வரவில்லை. அவ்வாறு வந்திருந்தால் நிலைமை மோசமாகி இருக்கும் என பயணிகள் அச்சம் தெரிவித்தனர். ஓடும்பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story

குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? - ராமதாஸ்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Ramdoss has questioned when liquor will be abolished in Tamil Nadu

குடிப்பழக்கம் உள்ள பெற்றோரின் பிள்ளைகளுக்கு சுயமரியாதை குறைவு என ஆய்வில் வெளியாகியுள்ளது; குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான  பெற்றோர்களின் பிள்ளைகள் சுயமரியாதைக் குறைவு, தாழ்வு மனப்பான்மை உள்ளிட்ட மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்று சென்னை மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவ நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குடிக்கும் பெற்றோரின் பிள்ளைகள் இளம் வயதிலேயே மதுப்பழக்கம் மற்றும் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகுதல், தீய செயல்களில் அடிக்கடி ஈடுபடுதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கும் ஆளாவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.  இந்த ஆய்வு முடிவுகள் சிறிதும் அதிர்ச்சியோ, ஆச்சரியமோ அளிக்கவில்லை. மாறாக, மதுப்பழக்கத்தின் தீமைகள் குறித்து பல பத்தாண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி கூறி வரும் குற்றச்சாட்டுகளை உறுதி செய்திருக்கிறது.

அனைத்து சமூகக் கேடுகளுக்கும் ஆணிவேர் மதுப்பழக்கம் தான்.  தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் உள்ளவர்களை கொடுமைப் படுத்தும் தந்தை உள்ள வீட்டில், அவர்களின் பிள்ளைகளால் நிம்மதியாக படிக்க முடியாது; சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்க முடியாது என்பது நடைமுறையில் நாம் கண்டு வரும் உண்மை ஆகும். தந்தை குடிப்பதைப் பார்க்கும் பிள்ளைகளும் மது எளிதாக கிடைக்கும் போது அந்தப் பழக்கத்திற்கு அடிமையாவது வழக்கம் தான். 

இந்த உண்மைகளைத் தான்  சென்னை மருத்துவக் கல்லூரியின் ஆய்வு உறுதி செய்திருக்கிறது. அதனால் தான் குடி குடியைக் கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்ற எச்சரிக்கை வாசகங்கள் மதுப்புட்டிகள் மீது எழுதப்பட்டன. மதுவே முற்றிலுமாக ஒழிக்கப்பட  வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வரும் திமுகவும், அதிமுகவும் மதுவின் தீமைகளை கருத்தில் கொள்ளாமல் சட்டப்படியாக அரசுக்கு கிடைக்கும் வருமானத்தையும், சட்டவிரோதமாக தங்களுக்கு கிடைக்கும் லாபத்தையும் மட்டுமே கருத்தில் கொண்டு  தமிழகத்தின் அனைத்து வீதிகளிலும் மதுவை வெள்ளம் போல ஓட விடுகின்றன.

அதுமட்டுமின்றி, மதுப்புட்டிகளில் மதுவின் தீமைகளை குறிக்கும் வகையிலான, 'குடி, குடியை கெடுக்கும்; குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்; மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு' என்ற, விழிப்புணர்வு வாசகங்களை நீக்கி விட்டு, 'மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு; பாதுகாப்பாக இருப்பீர். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாதீர்' என்ற மென்மையான வாசகங்களை அச்சிட்டது தான் திமுக, அதிமுக அரசின் சாதனைகள் ஆகும்.

எந்த வகையில் பார்த்தாலும் மது மிகப்பெரிய சமூகக் கேடு என்பதில் மாற்றமில்லை.  மது இல்லாத தமிழகத்தில் குடும்பங்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்; குழந்தைகள் சுயமரியாதையுடன் நல்லவர்களாக வளர்வார்கள். எனவே, குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கத்திற்கு முடிவு கட்டும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை மூடிவிட்டு முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.