
பேச மறுத்த காதலியை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்ற காதலனை போலீசார் தேடி வருகின்றனர்.
காரைக்குடி அருகே உள்ள மாத்தூர் கிராமத்தில் வசித்து வந்த கண்ணன் என்ற நபரும் அழகப்பா கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவி ஒருவரும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அண்மையில் இளைஞர் கண்ணன் அந்த பெண் வீட்டிற்கு திருமணம் செய்துகொள்ள அனுமதிகேட்க சென்றதாகக் கூறப்படுகிறது. மூத்த மகளுக்கு திருமணமான பிறகே இளைய மகளுக்கு திருமணம் செய்ய முடியும் என அப்பெண்ணின் பெற்றோர் கூறியுள்ளனர். அப்பொழுது ஏற்பட்ட வாய் தகராறில் மாணவியின் தாத்தாவை கண்ணன் கீழே தள்ளிவிட, மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனால் பிரச்சனை ஏற்பட்டதால் கண்ணனிடம் அந்த இளம் பெண் பேச மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கண்ணன் அவரை கொல்ல திட்டமிட்டுள்ளார். அதன்படி மாத்தூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த மாணவியை பின்தொடர்ந்து வந்த கண்ணன் கம்பியால் தாக்கி கொலை செய்துவிட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கண்ணனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.