Skip to main content

பதினான்கு வயதில் குழந்தை பெற்ற சிறுமி! - கரோனா தனிமையில் சீரழித்தவன் கைது

Published on 28/05/2021 | Edited on 28/05/2021

 

The girl who gave birth to a child at the age of fourteen!

 

இந்தக் கொடுமையை வழக்காக எப்படி பதிவு செய்வது என்று எழுதும்போதே கலங்கிவிட்டதாம் சிவகாசி அனைத்து மகளிர் காவல் நிலையம்.

 

ஆம். அத்தனை வில்லங்கமாக இருக்கிறது, கரோனா காலத்து தனிமையில், 9ஆம் வகுப்பு மாணவியான செல்வி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கர்ப்பம் தரித்து, ஆண் குழந்தையைப் பிரசவித்துள்ள விவகாரம். 

 

செல்வியின் அம்மா தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை பார்ப்பவர். செல்வியின் அப்பா இறந்து 2 வருடங்கள் ஆகிவிட்டன. அவளது அம்மாவுடைய தங்கையின் கணவர் ராமருக்கு 29 வயதுதான் ஆகிறது. கரோனா பரவல் காரணமாக, பள்ளியின் தொடர் விடுமுறையில் வீட்டிலேயே இருந்திருக்கிறாள் செல்வி. அவளுடைய அம்மா வேலைக்குச் சென்றபிறகு, சித்தப்பா ராமர் அடிக்கடி வீட்டுக்கு வந்திருக்கிறான். ‘இதெல்லாம் தப்பே இல்லை’ என்று சிறுமியான செல்வியிடம் அத்துமீறியிருக்கிறான். அவள் சண்டையிட்டு மறுத்தபோது, ‘கணவன் இல்லாமல் தனியாக வாழும் உன் அம்மாவைக் கேவலப்படுத்துவேன். உன் சித்தியுடனும் வாழமாட்டேன்’ என்று மிரட்டி சீரழித்திருக்கிறான். முறை தவறிய இத்தகாத உறவை மீண்டும் மீண்டும் தொடர்ந்தபோது ‘உன்னையும் உன் அம்மாவையும் கொன்றுவிடுவேன்’ என்று கட்டாயப்படுத்தியிருக்கிறான்.

 

ஐந்தாவது மாதத்தில் செல்வி கர்ப்பமான நிலையில், அவளுடைய அம்மாவும் சித்தப்பா ராமரும், ஸ்ரீவில்லிபுத்தூர் மருத்துவமனைக்கு அவளை அழைத்துச் சென்றுள்ளனர். அப்போதுகூட, சித்தியின் வாழ்க்கை பாழாகிவிடக்கூடாது என்ற பயத்தில், சித்தப்பா ராமர்தான் கர்ப்பத்துக்குக் காரணம் என்பதை அம்மாவிடம்கூட செல்வி சொல்லவில்லை.

 

இரண்டு நாட்களுக்கு முன் (25ஆம் தேதி) இடுப்பு வலித்ததும், திருத்தங்கல் அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக செல்வியைச் சேர்த்துள்ளனர். அவளுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. 14 வயது சிறுமியான செல்வி, அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்றெடுத்த தகவல், சிவகாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு கிடைத்துள்ளது. மகளிர் ஏட்டு ஒருவர் விசாரித்தபோது, தான் மிரட்டப்பட்டு சித்தப்பா ராமரால் கர்ப்பமானதைச் சொல்லியிருக்கிறாள். போக்சோ சட்டத்தில் கைதாகியிருக்கிறான், மகள் உறவுள்ள சிறுமியிடம் மிருகமாக நடந்துகொண்ட ராமர்.

 

எதிர்காலமே கேள்விக்குறியாகிவிட்ட நிலையில், செல்வியும் அவளது குழந்தையும், இச்சமூகத்தை எதிர்கொண்டு, எப்படி வாழப்போகின்றனரோ?

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பட்டியலினத்தைச் சேர்ந்தவருக்கு நிலத்தை விற்கமாட்டோம்!’  - தம்பதியர் மீது வழக்கு 

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
 case was filed against a couple who sold land due to caste differences

அரசுப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர் தமிழ்ச்செல்வன். ஸ்ரீவில்லிபுத்தூரில் வசித்துவரும் இவர், நில புரோக்கர்கள்  மூலம், அதே ஊரைச் சேர்ந்த வீரமணி மற்றும் அவருடைய மனைவி சொர்ணலதா ஆகியோருக்குச் சொந்தமான 5 சென்ட் நிலத்தை ரூ.44 லட்சத்துக்கு கிரயம் பேசி முடிப்பதற்காக, ரூ.21000 முன்பணம் கொடுத்துள்ளார்.

அதன்பிறகு, கிரயப்பத்திரம் உள்ளிட்ட அனைத்துப் புதிய ஆவணங்களையும் தயார் செய்து, நில புரோக்கர்களுடன் வீரமணி தம்பதியர்  வீட்டுக்குச் சென்று, பத்திரப் பதிவு செய்துகொள்கிறோம் என்று கூறியபோது, “நீங்க என்ன ஜாதி?” என்று தமிழ்ச்செல்வனைப் பார்த்துக் கேட்டுள்ளனர். தான் இந்து பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்று தமிழ்ச்செல்வன் சொன்னதும் “நாங்க உயர்ந்த ஜாதி. தாழ்த்தப்பட்ட பட்டியலினத்தைச் சேர்ந்த உங்களுக்கு இடத்தை விற்கமாட்டோம். வெளியே போ.” என்று வீரமணி தம்பதியர் விரட்டியிருக்கின்றனர்.

இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் டவுண் காவல்நிலையம் சென்ற தமிழ்ச்செல்வன், தன்னை ஜாதியைக் குறிப்பிட்டு இழிவாகப் பேசியதாக புகாரளிக்க, வீரமணி மற்றும் சொர்ணலதா மீது  வழக்கு பதிவாகியுள்ளது.

Next Story

மாவட்ட கவுன்சிலருக்கு கொலை மிரட்டல்! அதிமுக எம்.எல்.ஏ. மீது வழக்கு! 

Published on 27/12/2023 | Edited on 27/12/2023
Case filed on ADMK Srivelliputur MLA Manraj
எம்.எல்.ஏ. மான்ராஜ்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் அதிமுகவைச் சேர்ந்த மான்ராஜ் என்பவர் எம்.எல்.ஏ.வாக உள்ளார். இதே தொகுதிக்குட்பட்ட லட்சுமியாபுரத்தைச் சேர்ந்தவர் கணேசன்(45). இவர், விருதுநகர் மாவட்ட ஊராட்சிக் குழு 3வது வார்டு உறுப்பினராக உள்ளார். எம்.எல்.ஏ. மான்ராஜின் மனைவி வசந்தி மாவட்டத்தின் ஊராட்சிக் குழுத் தலைவராக உள்ளார். 

கணேசன், நேற்று வன்னியம்பட்டி காவல்நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அந்தப் புகார் மனுவில், ‘நான் விருதுநகர் மாவட்ட ஊராட்சிக் குழு 3வது வார்டு உறுப்பினராக உள்ளேன். எனது வார்டுக்கு கடந்த 2 ஆண்டுகளாக நிதி ஒதிக்கீடு செய்யவில்லை. இதுகுறித்து மாவட்ட ஊராட்சிக் குழுக் கூட்டத்தில் தெரிவித்தேன். இதனால், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் வசந்தி மற்றும் அவரது கணவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான மான்ராஜ் ஆகியோர் எனக்கு மிரட்டல் விடுத்து வந்தனர். 

Case filed on ADMK Srivelliputur MLA Manraj
கணேசன்

கடந்த திங்கட்கிழமை என்னை செல்போனில் தொடர்புகொண்ட எம்.எல்.ஏ. மான்ராஜ், ‘டிச. 28ம் தேதி நடைபெற உள்ள மாவட்ட ஊராட்சிக் குழுக் கூட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்று பேசினால், கொலை செய்துவிடுவேன்’ என மிரட்டல் விடுத்தார். எனவே எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். எம்.எல்.ஏ. மான்ராஜ், அவரது மனைவி வசந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியுள்ளார். 

கணேசன் கொடுத்த புகாரை பெற்ற வன்னியம்பட்டி போலீஸார், எம்.எல்.ஏ. மான்ராஜ் மற்றும் அவரது மனைவி மீது கொலை மிரட்டல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில் ஆடியோ ஒன்று வெளியாகி அது ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியை பரபரக்கச் செய்துள்ளது. அந்த ஆடியோவில், “செல்வம், உன் வீட்ல ஒருத்தன் வந்திருக்கான் பாத்தியா; உன் வீடு புகுந்து.. உன் வீட்டுக்குள்ளேயே கொலை நடந்திடும். நெட்ல இருக்கிறதலாம் எடுத்து குரூப்புல போடுவதற்கு இவன் யாரு? நான் பேசின ஆடியோவை எடுத்து எல்லா ஏ.டி.எம்.கே. குரூப்புலையும் போட்டிருக்கான். நான் ஆள் அனுப்புறேன்; உன் வீட்ல கொலை நடக்கலானா.. அவன இன்னிக்கு சோலிய முடிக்கல.. இன்னிக்கு உன் வீட்ல கொலை நடக்கும்” என கொலை மிரட்டலும், மிகவும் ஆபாசமாக பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. இந்த ஆடியோ தற்போது வைரலாகி வருகிறது. இது, எம்.எல்.ஏ. மான்ராஜ், கணேசனை மிரட்டிய ஆடியோ என சொல்லப்படுகிறது.