Skip to main content

கடலூரில் நடைப்பெற்ற பெண் குழந்தைகள் கருத்தரங்கம்.

Published on 22/01/2021 | Edited on 22/01/2021

 

Girl child seminar held in Cuddalore.

 

கடலூர் மாவட்ட சமூக நலத்துறை சார்பில் 'பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' என்ற திட்டம் குறித்து பல்வேறு துறை அலுவலர்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

 

மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சாகமூரி தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது, "நம் நாட்டில் பெண் குழந்தைகள் பாலின விகிதம் குறைவாக உள்ள 100 மாவட்டங்களில் ‘பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த நமது கடலூர் மாவட்டமும் ஒன்று.

 

கடந்த 24.1.2015 அன்று தேசிய பெண் குழந்தைகள் தினத்தில் பண்ருட்டி வட்டாரத்தில் உள்ள மருங்கூர் கிராமத்தில் ‘பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ என்ற திட்டம் தொடங்கப்பட்டது. 

 

இந்த திட்டத்தின் நோக்கம் பெண் குழந்தைகளைப் பாதுகாப்பது. அதன்படி கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தைக் கண்டறிந்து கூறாமல் இருத்தல், இந்தச் சட்டத்தை மீறுவோர் மீது கடுமையான தண்டனை வழங்குதல், பாலின பாகுபாடு களைதல், பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் சமுதாய பங்கேற்பதை உறுதி செய்தல் ஆகும்.

 

கடலூர் மாவட்டத்தில் சிசுவின் பாலினத்தைக் கண்டறிந்து தெரிவித்த 14 ஸ்கேன் மையங்கள் மூடப்பட்டுள்ளன. 683 ஊராட்சிகளில் உள்ள 2342 கிராமங்களில் பெண் ஆண் குழந்தைகளின் பிறப்பு எண்ணிக்கை மற்றும் கர்ப்பிணிகளின் எண்ணிக்கையை அறிய உதவும் தகவல் பலகை அமைக்கப்பட்டுள்ளது.

Girl child seminar held in Cuddalore.

 

இந்தத் திட்டம் குறித்து பரப்புரை செய்வதற்காக 322 வளரிளம் பெண்கள் திட்ட தூதுவர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 513 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. தொட்டில் குழந்தை திட்டத்தில் 158 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். 111 பெண் குழந்தைகள் மீட்கப்பட்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.

 

கடந்த 6 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் பிறப்பின் படி பெண் குழந்தைகள் பாலின விகிதம் 2015ஆம் ஆண்டு 886 ஆக இருந்தது, 2020ஆம் ஆண்டு 940 ஆக அதிகரித்துள்ளது. பெண் குழந்தைகள் பிறப்பு பாலின விகிதம் குறைவாக உள்ள வட்டாரங்களில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களுக்கும், ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கும் 'பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' திட்டம் குறித்து ஒருநாள் பயிற்சி நடத்தப்பட்டது.

Girl child seminar held in Cuddalore.

 

பெண் குழந்தைகளின் கல்வியில் முன்னேற்றம் ஏற்படுத்துவது தனிமனித, ஒட்டுமொத்த சமூக பொறுப்பாக கொண்டு, அனைவரும் நம் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் செயல்பட வேண்டும். ஆணும் பெண்ணும் சமம்தான் என்பதைப் புரிய வைக்க வேண்டும். இதை கடமையாகச் செய்யாமல் உணர்வுபூர்வமாக எடுத்துச் செல்ல வேண்டும் " என்றார்.

 

முன்னதாக பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த உறுதிமொழியை மாவட்ட ஆட்சியர் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி எடுத்தனர். கருத்தரங்கில் கலந்துகொண்ட பல்வேறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சான்றிதழ் வழங்கினார்.

 

கருத்தரங்கில் சமூக நலப்பணிகள் இணை இயக்குனர் ரமேஷ் பாபு, மக்கள் தொடர்பு அலுவலர் சிவக்குமார், மாவட்ட சமூக நல அலுவலர் அன்பழகி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பழனி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமாவளவன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

Next Story

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு?

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Cuddalore Dt Kullanjavadi Near Ambedkar statue incident

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சித்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று அதிகாலை வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அபப்குதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.