மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் குழந்தைக்கு நாக்கிற்கு பதில் பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அஜித்குமார், கார்த்திகா தம்பதிக்கு கடந்தாண்டு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு நாக்கு சரியாக வளராததால் மதுரையில் ராஜாஜி மருத்துவமனைக்கு குழந்தையை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து குழந்தைக்கு நாக்கில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஓராண்டு கழித்து மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளனர். இதனால் சில தினங்கள் முன்பு மீண்டும் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் நாக்கிற்கு பதிலாக குழந்தையின் பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை செய்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பெற்றோர் மருத்துவமனை நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர். இதனையடுத்து மீண்டும் குழந்தைக்கு நாவில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து குழந்தையின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது குறித்து விளக்கமளித்துள்ள மருத்துவமனை நிர்வாகம், “குழந்தை பிறந்த 3 ஆம் நாளில் வாயில் நீர்க்கட்டியுடன் மூச்சுத்திணறல் இருந்தது. அதை அப்போது ஆபரேசன் செய்து அகற்றினோம். வெற்றிகரமான சிகிச்சைக்குப் பின் குழந்தை வீடு திரும்பினான்.
ஓராண்டு கடந்து மீண்டும் ஒரு ஆபரேசன் செய்ய வேண்டுமென்பதால் செய்தோம். அப்போது குழந்தைக்கு சிறுநீரக பிரச்சனை இருப்பது தெரிந்தது. மீண்டும் ஒரு அனஸ்தீசியா கொடுக்க வேண்டாம் என்பதற்காகவே ஒரே நேரத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்த பின் குழந்தை சாதாரணமாக உள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.