gas attack; Tragedy in Villupuram

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தில் கழிவுநீர் தொட்டிக்குப் பூச்சு வேலை மேற்கொள்ளச் சென்ற இருவர் விஷவாயு தாக்கி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அடுத்துள்ள கோண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர். மளிகைக் கடை நடத்தி வந்த சேகர் நான்கு மாதங்களுக்கு முன்பு கழிவுநீர் தொட்டி ஒன்றைக் கட்டியுள்ளார். சரிவரப் பூச்சு வேலைகள் மேற்கொள்ளப்படாமல் தொட்டியானது 4 மாதமாக மூடி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன், ஐயப்பன், அறிவழகன் ஆகிய மூவரும் மீதமுள்ள பூச்சு வேலையை மேற்கொள்ளச் சென்றுள்ளனர். நான்கு மாதங்களுக்குப் பிறகு தொட்டியின் மேல்மூடி அகற்றப்பட்டு மூவரும் உள்ளே இறங்கிப் பணி செய்து கொண்டிருந்தபோது திடீரென விஷவாயு தாக்கி மூவரும் மயக்கமடைந்தனர்.

Advertisment

இதில் மணிகண்டன், ஐயப்பன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மீட்கப்பட்ட அறிவழகன் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கண்டமங்கலம் போலீசார் உயிரிழந்த மணிகண்டன், ஐயப்பன் ஆகிய இருவரின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணைநடைபெற்று வருகிறது.