Skip to main content

‘நோட்டம் பார்த்து திருடுவதை வழக்கமாக வைத்துள்ள கும்பல்’ - அதிரடியாக கைது செய்த காவல்துறையினர்!     

Published on 18/10/2021 | Edited on 18/10/2021

 

Gang that has a habit of stealing, Police arrested in action

 

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ளது அரசன்குடி கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி விநாயகமூர்த்தி. இவர் விவசாய தொழில் மற்றும் அதனுடன் ஆடு வளர்ப்பு தொழிலும் செய்துவருகிறார். சமீபத்தில் இவர் தனது வயலில் ஆட்டுப்பட்டி அமைத்து அதில் ஆடுகளைச் அடைத்துவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது அதில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகளில் 15 ஆடுகளைக் காணவில்லை. இதுகுறித்து சிறுப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கமல்ஹாசன் வழக்குப் பதிவுசெய்து தீவிர விசாரணை மேற்கொண்டார்.

 

அதில் விநாயகமூர்த்தியின் வயலுக்குப் பக்கத்து வயலில் வேலை செய்தவர்கள் சிலரிடம் விசாரணை நடத்தியதில், அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதில் சந்தேகம் அடைந்த போலீசார், அதில் மூவரைக் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அவர்கள் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரசாந்த், பிரவீன்குமார், இளங்கோவன் என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் விவசாய வேலை செய்வதுபோல் வெளியூர்களுக்குச் சென்று, அப்பகுதியில் ஆடு, மாடுகள் மேய்வதையும் அவை இரவு நேரங்களில் அடைக்கப்பட்டிருக்கும் பட்டிகளையும் நோட்டம் பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.

 

பிறகு ஆட்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் டாட்டா ஏசி வாகனங்களில் ஆடு, மாடுகளைக் கடத்திச் செல்வது இவர்களது தொழிலாக இருந்துள்ளது. இதன்படி அரசன்குடி கிராமத்தில் விநாயகமூர்த்தி ஆடுகளைத் திருடிய மேற்படி மூவரும் சேலம் மாவட்டம் வெடிகாரன் புதூர் என்ற கிராமத்திற்கு கொண்டு சென்று விற்பனை செய்துள்ளனர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கமல்ஹாசன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று அங்கு அடைக்கப்பட்டிருந்த 11 ஆடுகள், நான்கு மாடுகள் அவற்றை கடத்திச் செல்வதற்குப் பயன்படுத்திய வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

 

அவற்றை ஆடு, மாடுகளைப் பறிகொடுத்தவர்களிடம் ஒப்படைத்தனர். ஆடு, மாடு கடத்தலில் ஈடுபட்ட மேற்படி மூவர் மீதும் வழக்குப் பதிவுசெய்து சிறையில் அடைத்துள்ளனர். சில ஆண்டுகளாகவே வேப்பூர், லக்கூர், தொழுதூர், சிறுபாக்கம் ஆகிய பகுதிகளில் அவ்வப்போது இரவு நேரங்களில் ஆடு, மாடுகளைப் பில்டர்கள் டாட்டா ஏசி வாகனங்களில் கடத்திச் செல்லும் சம்பவம் நடைபெற்றுவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ஆடு, மாடு திருடர்கள் சிலரை சிறுபாக்கம் போலீசார் கைதுசெய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம்;நடந்தது என்ன? - காவல்துறை விளக்கம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
womanincident What happened Police explanation

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்துள்ள பக்ரிமாணியம் கிராமத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில் குறிப்பிட்ட ஒரு சின்னத்திற்கு வாக்களித்ததாக ஒரு பெண் வெளியில் கூறியதாகவும், இதனைக் கேட்ட அதே ஊரைச் சேர்ந்த சிலர் அப்பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அதோடு இவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து அந்த பெண்ணை பலமாக தாக்கியதாகவும் கூறப்பட்டது. இதில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாகவும் கூறப்பட்டது. இது குறித்து உடனடியாக ஸ்ரீமுஷ்ணம் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், இந்த கொலை சம்பவம் குறித்து தீவிர விசாரணையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “கடந்த 19.04.2024 அன்று மாலை சுமார் 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பக்கிரிமணியம் கிராமத்தில் உள்ள ஆலமரம் முன்பு இரு தரப்பினருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. ஒருபுறம் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் (அனைவரும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்) மற்றொரு பக்கம் ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் (அனைவரும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்). ஜெயசங்கரின் மகள் ஜெயப்பிரியாவை கிண்டல் செய்ததற்காகவும். ஜெயக்குமாரை தாக்கியதாக அவர் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுமாறு கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காகவும் தன்னெழுச்சியாக வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த தகராறில், இரு தரப்பினரும் ஆயுதம் ஏந்தாமல் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ள, கோமதி (ஜெயக்குமாரின் மனைவி) தலையிட்டு பிரச்னையை தடுக்க முயலும் போது. கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு (PHC)  அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக, ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத்தில் Cr.No. 96/2024 U/s 147, 148, 294 (b), 323, 324, 506(ii), 302 IPC r/w 4 of TN பெண்கள் துன்புறுத்தல் தடைச் சட்டம் வழக்கு 20.04.2024 அன்று 01.00 மணிக்கு பதிவு செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட மொத்தம் 10 பேரில், ஐந்து பேர், 1. கலைமணி 2. தீபா (கலைமணியின் மனைவி) 3. ரவி 4. மேகநாதன் மற்றும் 5. அறிவுமணி ஆகியோர் கைது செய்யப்பட்டு 20.04.2024 அன்று நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். 

woman incident What happened Police explanation

இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், மேற்கண்ட சம்பவம் இரு தரப்பினருக்கும் இடையே இருந்த முன்விரோதம் காரணமாக நடந்துள்ளது என்பதும், சமூகவலைத்தளங்களில் பரவிய ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக வாக்களித்ததால் தாக்கியதாக குறிப்பிட்டுள்ளது முற்றிலும் தவறான கூற்றாகும். மேலும் இந்த சம்பவம் தொடர்பான காணொளி முற்றிலும் பொய்யானது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மாமியாரை துடிதுடிக்க கொன்ற மருமகன்; சென்னையில் பயங்கரம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Son-in-law incident mother-in-law in Chennai

சென்னை மாதவரம் கண்ணன் நகரில் வசித்து வருபவர்கள் புஷ்பராஜ் - ஜான்சி தம்பதியினர் புஷ்பராஜ் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். மனைவி ஜான்சி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர்களுடன் ஜான்சியின் தாய் வசந்தியும் வசித்து வந்துள்ளார். புஷ்பராஜ் தினமும் மது அருந்திவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்ததால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு புஷ்பராஜ் மீண்டும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால் மனைவி ஜான்சியுடன் வாக்குவாம் ஏற்பட்டுள்ளது. மாமியார் வசந்தி தங்களுடன் வசித்து வருத்து வருவதால்தான் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதாக கருதிய புஷ்பராஜ் மனைவி வெளியே சென்ற போது மாமியார் வசந்தியிடம் இதுகுறித்து தகராறு செய்துள்ளார்.

இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த புஷ்பராஜ் மாமியார் வசந்தியை கட்டையால் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த வசந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார். இதையடுத்து புஷ்பராஜ் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வசந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த  புஷ்பராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.