Skip to main content

புதிய அரசுக்கு பெரும் சவால்.. உடனடி நிதி தேவையில் மருத்துவமனைகள்! 

Published on 07/05/2021 | Edited on 08/05/2021

 

pudukottai

 

தமிழ்நாட்டில் கரோனா தொற்று வேகமாகப் பரவிவரும் நிலையில, கரோனா சிறப்பு சிகிச்சை மையங்களுக்குத் தேவையான மருந்து, ஆக்சிஜன், உணவு ஆகியவற்றில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆனாலும் இருப்பதை வைத்து சமாளித்து வருகிறார்கள். இப்படி ஒரு பேச்சு இருக்கும் நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்த போது...

 

கடந்த ஆண்டு புதுக்கோட்டை ராணியார் மருத்துவமனை, முத்துலெட்சுமி ரெட்டி நினைவு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் கரோனா சிகிச்சை அளிக்கப்பட்டது. அதேபோல அறந்தாங்கி, ஆலங்குடி, இலுப்பூர் போன்ற பல ஊர்களிலும் கவனிப்பு மையங்கள் அமைக்கப்பட்டு பரிசோதனைகளும் சிகிச்சைகளும் வழங்கப்பட்டு தீவிரச் சிகிச்சைக்கு மட்டும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சிகிச்சை மையங்களிலும் கரோனா தொற்றுள்ள நோயாளிகளுக்கு சிக்கன், சூப், புரோட்டின் உணவுகள் மற்றும் தானிய உணவுகள் வழங்கப்பட்டதுடன் அவர்கள் பயன்படுத்த தனித்தனி வாளிகள், குவளைகள், சோப்பு, மாஸ்குகளும் வழங்கப்பட்டது. அதேபோல அரசு மகளிர் கல்லூரியில் சித்தா பிரிவு ஏற்படுத்தி சிறப்பு சிகிச்சையும் சத்தான உணவுகளும் வழங்கப்பட்டது. 

 

இதனால் விரைவிலேயே குணமடைந்து வீடு திரும்பினார்கள். உயி்ரிழப்பும் குறைவாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டில் வேகமாகப் பரவல் இருந்தாலும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு முந்தைய அரசு தேவையான உணவுக்கான நிதி ஒதுக்கீடு செய்யாததால் மருத்துவக் கல்லூரியில் உள்ள உள்நோயாளிகளுக்குத் தயாரிக்கப்படும் உணவுகளை வழங்கி சமாளித்து வருகிறார்கள். இதனால் இவர்களுக்கு சத்தான உணவுகள் கிடைக்கவில்லை. இதனால் கரோனா நோயாளிகளின் உறவினர்கள் நாள்தோறும் 3 நேரத்திற்கும் உணவு வாங்கி வந்து கொடுக்கிறார்கள். இதனால் பலருக்கும் தொற்று ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. புதிய அரசு போர்க்கால அடிப்படையில் உணவுக்கான நிதி ஒதுக்கீடு செய்தால் நல்லது.

 

pudukottai

 

அதேபோல இங்கு 6 ஆயிரம் கி.லி கொள்ளளவு கொண்ட 2 டேங்க்கள் ஆக்ஸிஜனுக்காக உள்ளது. ஆனால் முழுமையாக நிரப்பப்படுவதில்லை. அதாவது சுமார் 450 தீவிர சிகிச்சை பிரிவு படுக்கை இருந்தாலும் 320 படுக்கைகள் ஆக்சிஜன் வசதி செய்யப்பட்டு தயாராக உள்ளது. ஆனால் நேற்று முன்தினம் வரை 85 பேருக்கு ஆக்ஸிஜன் அதிகமாக தேவைப்பட்டுள்ளது. ஒரே நாளில் 3,200 கி.லி தேவைப்பட்டிருந்தது. இதேபோல தினசரி தேவை ஏற்பட்டால் மிகப்பெரிய தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. அதாவது வல்லத்தில் வழக்கமான அளவே தயாரிக்கப்படும் ஆக்சிஜன் திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர் மாவட்ட மருத்துவக் கல்லூரிகளுக்கு தினசரி கொண்டுபோய் நிரப்பப்படுகிறது. ஆனால் கடந்த ஆண்டை விட இப்போது வரும் கரோனா நோயாளிகள் அதிகமானோர் மூச்சுத் திணறலோடு வருகிறார்கள். அதனால் கூடுதல் ஆக்சிஜன் தேவை ஏற்பட்டுள்ளது. அதற்கு ஏற்ப உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.

 

அதேபோல உயிர்காக்கும் மருந்துகளும் 3 நாளைக்கு ஒருமுறை வருகிறது. அதுவும் தற்போது போதுமானதாக உள்ளது. இருப்பு வைத்திருக்க முடியாது. ஆனால் தற்போதைய நிலையில் ஒரே நாளில் கூடுதலாகக் கரோனா தொற்று நோயாளிகள் வந்தால் மருந்துகளும் தட்டுப்பாடு ஏற்படும். அதனால் சராசரி உற்பத்தியை விட கூடுதல் உற்பத்தி செய்ய புதிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவமனையில் உள்ள விபரமறிந்தவர்கள். இதே நிலை தான் தமிழகம் முழுவதும் உள்ளது.

 

புதிய அரசு இந்தப் பெரிய சவாலை சமாளித்தால் தான் உயிர்ப் பலிகளைத் தடுக்க முடியும்.


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இன்னைக்கு ஒரு புடி' தாத்தா மருத்துவமனையில் அனுமதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
nn

வில்லேஜ் குக்கிங் சேனல் என்ற யூடியூப் சேனல் மூலம் பிரபலமான தாத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

'வில்லேஜ் குக்கிங் சேனல்' என்ற யூடியூப் சேனல் சமையலுக்கு மிகவும் பிரபலமானது. ஒரு குழுவாகச் சேர்ந்து உணவை சுவாரசியமாக சமைத்து சாப்பிடும் இந்த யூடியூப் சேனல் இந்திய அளவில் அதிக சப்ஸ்கிரைபர்களைக் கொண்ட சேனல்களில் ஒன்றாகும்.

அண்மையில் ராகுல்காந்தி உள்ளிட்ட பலர் இந்த சேனலில் உணவு சமைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலப்படுத்தி இருந்தனர். இந்த யூடியூப் சேனலில் அனைவரும் இளைஞர்கள் என்ற நிலையில், மிகவும் குறிப்பிடத்தகுந்த முதியவர் பெரியதம்பி தாத்தா. 'இன்னைக்கு ஒரு புடி' என்ற வசனம் மற்றும் உடல் மொழியால் பலர் மனதில் இடம் பிடித்தவர்.

இந்நிலையில், முதியவர் பெரியதம்பி தாத்தா தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புகைப்படங்கள் ஒன்று இணையத்தில் வெளியாகி இருந்தது. சேனலை நடத்தும் சுப்பிரமணியன் வேலுசாமி இது குறித்து வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் 'தாத்தா இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நல்ல நிலையில் உள்ளார். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி' எனத் தெரிவித்துள்ளார்.

Next Story

கடத்தி செல்லப்பட்ட அரசுப் பேருந்து விபத்து

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Hijacked government bus accident

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசுப் பேருந்து பணிமனையில் உள்ள அரசுப் பேருந்துகள் அனைத்தும் இரவு நேரங்களில் பணிமனைக்குள் நிறுத்த முடியாததால் அருகே உள்ள பட்டுக்கோட்டை சாலையில் வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கும். அதிகாலை முதல் ஒவ்வொரு பேருந்தும் அந்தந்த பயண நேரத்திற்கு ஓட்டுநர்கள் ஓட்டிச் செல்வார்கள்.

வழக்கம்போல் நேற்று இரவு பேருந்துகள் சாலை ஓரத்தில் நிறுத்தி வைத்துவிட்டு ஓட்டுநர், நடத்துநர்கள் பணிமனையில் ஓய்வெடுக்கச் சென்று விட்டார். இந்நிலையில் இன்று அதிகாலை திருவாடானை செல்லும் வழியில் ஓரியூர் அருகே வண்டாத்தூர் கிராமத்தில் பிரதானச் சாலையில் ஒரு அரசுப் பேருந்து ஒரு லாரியில் மோதி விபத்துக்குள்ளாகி நின்றது. சத்தம் கேட்டு கிராம மக்கள் ஓடி வந்து பார்த்தபோது லாரி ஓட்டுநர் காலில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தார். அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் சிக்கியிருந்த அந்த பேருந்து அறந்தாங்கி பணிமனையைச் சேர்ந்த அறந்தாங்கியில் இருந்து திருவாடானை செல்லும் TN 55 N 0690 என்பது தெரிய வந்தது. ஆனால் யார் இந்த பேருந்தை ஓட்டி வந்தது என்பது தெரியவில்லை. உடனே அறந்தாங்கி டெப்போவிற்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் பிறகே சாலை ஓரம் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகளில் திருவாடானை செல்லும் பேருந்து காணாமல் போனது தெரிய வந்தது.

பணிமனையில் நிறுத்தி இருந்த பேருந்தை யார் கடத்திச் சென்றது என்று போக்குவரத்து கழக அதிகாரிகளும் ஊழியர்களும் விசாரணையில் உள்ளனர். பாதுகாப்பு மற்றும் கவனக்குறைவால் ஒரு பேருந்து கடத்தப்பட்டு விபத்து ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.