
அந்தக் காலத்திலிருந்தே, இலவசங்கள் அவ்வப்போது கலைத்துறையிலும் கண்சிமிட்டி வருகின்றன. 1987 காலக்கட்டத்தில் பாரீஸில், ஏ.அன்டோயின் இலவச தியேட்டர் இயக்கம் உருவாக்கப்பட்டது. பிறகு, இலவச நாடக இயக்கம் ஒவ்வொரு நாட்டிலும் பரவியது. தியாகி விஸ்வநாததாஸ் நாடகத்துறையில் தன்னை வளர்த்துக்கொண்ட காலத்தில், இலவச நாடகங்கள், தெருக்கூத்துகளெல்லாம் மக்களின் ரசனைக்கேற்ப தாராளமாக நடத்தப்பட்டன.
அப்போதெல்லாம் நாடகங்களை நடத்துவதற்கு அதிகார வர்க்கத்தின் தயவு தேவைப்பட்டது. அதனால், நடிகவேள் எம்.ஆர்.ராதாவும்கூட தனது நாடகங்களைப் பார்ப்பதற்கு இலவச பாஸ் தந்துள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் இந்திய வீரர்கள், வாழ்நாள் முழுவதும் தங்களின் தியேட்டர்களில் இலவசமாக சினிமா பார்க்கலாம் என்று ஐநாக்ஸ் நிறுவனம் அறிவித்ததெல்லாம் நாமறிந்ததே!
இந்த வரலாற்றை நாம் திரும்பி பார்க்க காரணம் மதுரையில் பரபரக்கும் ஒரு போஸ்டர் தான்.
என்ன போஸ்டர்?
‘நெஞ்சுக்கு நீதி’ என்ற திரைப்படம் சமூக அக்கறையுடன் உருவாகியுள்ளதாகவும், கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்களுக்கு இலவசக் காட்சிகளை ஏற்பாடு செய்துள்ளதாகவும், திமுக பிரமுகர் ஒருவரது பெயரில், மதுரையில் சுவரொட்டிகள் அச்சிட்டு ஒட்டப்பட்டுள்ளன. தங்களது இயக்கத்தின் நாளையத் தலைவரை நல்லமுறையில் இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக, அக்கட்சியினர் இதுபோல் தீயாய் வேலை செய்வதும்கூட கட்சிப்பணியாகவே பார்க்கப்படுகிறதாம்.