Skip to main content

கலைஞர் பிறந்தநாள்- முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!

Published on 03/06/2021 | Edited on 03/06/2021



 

FORMER CM KALAIGNAR BIRTHDAY TAMILNADU GOVERNMENT ANNOUNCEMENT

முன்னாள் தமிழக முதல்வர் கலைஞரின் 98- வது பிறந்தநாளையொட்டி தமிழக அரசு இன்று (03/06/2021) முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 

தமிழக அரசு இன்று (03/06/2021) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தென்சென்னையில் ரூபாய் 250 கோடியில் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும். கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் சிறப்பு மருத்துவமனை 500 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்படும். தென் சென்னை மக்கள் பயன்பெறும் வகையில் கிண்டி கிங் மருத்துவமனை பன்னோக்கு மருத்துவமனையாக மாற்றப்படும். 

 

மதுரையில் ரூபாய் 70 கோடியில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படும். திருவாரூரில் ரூபாய் 30 கோடியில் புதிய நெல் கொள்முதல் கிடங்குகள், உலர்களங்கள் அமைக்கப்படும். திருவாரூரில் உள்ள 10 வட்டாரத்தில் 16,000 டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும். 50 சூரிய ஒளி உலர் கிடங்கு, 2 மறுசுழற்சி தொகுப்பு, 2 தொடர் ஓட்ட உலர்விப்பான்களும் அமைக்கப்படும்.  

 

தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில், 'இலக்கிய மாமணி' என்ற விருது உருவாக்கப்படும். தமிழின் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் எழுத்தாளர்கள் மூன்று பேருக்கு ஆண்டுதோறும் 'இலக்கிய மாமணி' விருது வழங்கப்படும். 'இலக்கிய மாமணி' விருதாளர்களுக்கு பாராட்டு பத்திரம் மற்றும் ரூபாய் 5 லட்சம் ரொக்க பரிசும் வழங்கப்படும்.  

 

புகழ்பெற்ற விருதுகளைப் பெற்ற தமிழக எழுத்தாளர்களை ஊக்குவிக்க கனவு இல்லம் கட்டித்தரப்படும். எழுத்தாளர்கள் வசிக்கும் அல்லது விரும்பும் மாவட்டத்தில் தமிழக அரசின் மூலமாக வீடு வழங்கப்படும். திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் நகர்ப்புற அரசு பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம். ஊரடங்கு முழுமையாக விலக்கிக் கொண்ட பின் உரிய உத்தரவு நடைமுறைக்கு வரும்." இவ்வாறு அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.