Skip to main content

“மீனவர் நலவாரிய அட்டை வழங்க வேண்டும்” - மீனவத் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Published on 21/11/2022 | Edited on 21/11/2022

 

Fishermen Workers' Union struggle in Virudhunagar

 

மீனவர் நலவாரியத்தில் விண்ணப்பித்த அனைத்து தொழிலாளர்களுக்கும் உடனடியாக நலவாரிய அட்டைகளை வழங்கிட வலியுறுத்தி தமிழ்நாடு AITUC மீனவத் தொழிலாளர் சங்கத்தினர் விருதுநகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக, விருதுநகர் மாவட்ட செயலாளர் சி.செல்வம் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், பின்வரும் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.  

 

மீன் வளத்தையும் மீனவர்களையும் பாதுகாத்திட மாவட்ட ஆட்சியர் தலைமையில் மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்திட வேண்டும். இந்தியாவின் 106 நதிகளையும் கடலையும் இணைக்கும் சாகர்மாலா திட்டத்தால் நதி நீரை கடல் நீராக மாற்றக்கூடாது. இதனால் ஏற்படும் சுற்றுச்சூழல், விவசாயம்,  குடிநீர் போன்ற தேவைகளுக்கு அன்னிய கார்ப்பரேட் கம்பெனிகளிடம் கையேந்த வைத்துவிட வேண்டாம். கடல் மீனவரைப் போல் புயல் பருவகால சேமிப்பு நிதி,  மீன்பிடி தடைக்கால நிவாரணம், மீன்பிடி குறைவு கால நிவாரணம் வழங்கிட நடவடிக்கை எடுக்கவேண்டும்.

 

விருதுநகர் மாவட்ட மீனவத் தொழிலாளர்களில், நலவாரிய அட்டை இருந்தும் விடுபட்டவர்களுக்கு கொரோனா நிவாரணம் உடனே வழங்க வேண்டும். மீனவத் தொழில் புரியும் அனைவரையும் மீனவக் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக சேர்த்திட வேண்டும்.  60 வயதான மீனவத் தொழிலாளர்களுக்கு மீன் வளத்துறை மூலம் மாதம் ரூ. 5000 ஓய்வூதியம் வழங்கிட வேண்டும்.

 

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி நிர்வாகத்தில் இயக்கப்படும் மீன் மார்க்கெட்களில் கழிப்பறை வசதி, குடிதண்ணீர் வசதி மற்றும் குழந்தைகள் காப்பக வசதி போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மீனவத் தொழிலாளர்களும் மீனவர் நலவாரியத்தில் உடனே பதிவு செய்திட  மீன் வளத்துறை உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழக அரசால் மீனவர் நலவாரியத்தின் மூலமாக வழங்கப்பட்டு வரும் கல்விநிதி உதவி, திருமண நிதி உதவி, விபத்து மற்றும் இறப்பு நிதி உதவி போன்ற பணப்பயன்களை உயர்த்தி வழங்கிட வேண்டும்.

 

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு AITUC மீனவத் தொழிலாளர் சங்கத்தினர் விருதுநகர் மாவட்டம் முழுவதுமிருந்து பங்கேற்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மீனவர்களின் பிரச்சினையில் தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Decisive action should be taken on the problem of fishermen CM MK Stalin

தமிழ்நாட்டைச் சேர்ந்த 32 மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி நேற்று (21.03.2024) இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட வேண்டும். மேலும் அவர்களுக்குத் தேவையான சட்ட உதவிகளைச் செய்திடவும் வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இன்று (22.03.2024) கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் அண்மைக் காலமாக தொடர்ந்து கைது செய்யப்படுவது ஆழ்ந்த வேதனையை அளிக்கிறது. கடந்த சில வாரங்களாக பல்வேறு சம்பவங்களில் இந்திய மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது. அவர்களது குடும்பத்தினரிடையேயும், மீனவ சமூகத்தினரிடையேயும் பெருத்த மன உளைச்சலையும் நிச்சயமற்ற சூழலையும் ஏற்படுத்தியுள்ளது. 21.03.2024 அன்று (நேற்று) தமிழ்நாட்டைச் சேர்ந்த 32 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களது 5 விசைப்படகுகள் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளன.

கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 76 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, இப்பிரச்சினையில் தாமதம் ஏதுமின்றி தீர்வு காண, தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வலியுறுத்திகிறேன். இலங்கை நீதிமன்றங்களில் தண்டனை பெற்று, இலங்கை சிறைகளில் வாடும் மீனவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளை வழங்கிடவும் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

ராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேர் கைது?

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
20 Rameswaram fishermen incident

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. இத்தகைய சூழலில் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து இன்று (20.03.2024) காலை ஏராளமான விசைப் படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்றிருந்தனர். அவ்வாறு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர். மேலும் மீனவர்கள் 20 பேரை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகச் சிறைபிடித்து கைது செய்தனர். அதோடு மீனவர்களின் 3 படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

இதனையடுத்து ராமேஸ்வரம் மீனவர்களை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். ராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேர் கைது செய்யப்பட்டதுடன் இரண்டு விசைப் படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ள சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் விசாரணைக்கு பின்னர் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள்  20 பேரும் விடுவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.