Skip to main content

பட்டாசு ஆலையில் வெடி விபத்து; முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்

Published on 04/10/2023 | Edited on 04/10/2023

 

Fireworks Factory incident Obituary of CM MK stalin

 

மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடியில் தனியாருக்குச் சொந்தமான ராமதாஸ் பயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் வாணவெடி தயாரிக்கும் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. இந்த ஆலையில் வழக்கம் போல் தொழிலாளர்கள் வாணவெடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக நாட்டு வெடி தயாரிக்கும்போது தீப்பிடித்து வெடி விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் வாணவெடி தயாரிப்பில் ஈடுபட்டிருந்த 4 தொழிலாளர்கள் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

 

இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்புப் படை வீரர்கள், மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும் விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதே சமயம் பொறையார் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்திய பிறகு உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு சுமார் 100 மீட்டர் தூரத்திற்குச் சிதறி விழுந்துள்ளன எனத் தெரிவித்துள்ளனர்.

 

மேலும் இந்த வெடி விபத்து தொடர்பாக அந்த நிறுவனத்தின் உரிமையாளர் மோகனை பொறையார் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். மேலும் வெடி விபத்து தொடர்பாக அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாணவெடி தயாரிக்கும் இடத்தில் நிகழ்ந்த வெடி விபத்தில் சிக்கி 4 தொழிலாளர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

 

Fireworks Factory incident Obituary of CM MK stalin

 

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “எதிர்பாராத விதமாக ஏற்பட்ட இந்த விபத்தில் கிடங்கல் கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம், மயிலாடுதுறையைச் சேர்ந்த மதன், மகேஷ் மற்றும் ராகவன் ஆகிய நான்கு நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

 

மேலும், இவ்விபத்தில் காயமடைந்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 4 நபர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தலா 3 இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 


 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

“விரைவில் நிலைமை சீரடையும்” - மிக்ஜாம் புயல் பாதிப்பு குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின்

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

The situation will improve soon CM MK Stalin on the impact of Cyclone Migjam

 

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான அளவிற்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

 

அந்த வகையில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புப் பணிக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகிறனர். மேலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

 

இந்நிலையில் சென்னையில் புயல் மழையால் பாதிக்கப்பட்ட புரசைவாக்கம், கொசப்பேட்டை, ஓட்டேரி ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட மழை பாதிப்புகளைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், மாநகராட்சி ஆணையர் ஜெ. ராதாகிருஷ்ணன் எனப் பலரும் உடன் இருந்தனர். அதேபோன்று கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் புயல் மழையால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து நிவாரணப் பொருட்கள் மற்றும் உணவுகளை வழங்கினார்.

 

இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “கொளத்தூர், திரு.வி.க. நகர் மற்றும் எழும்பூர் தொகுதிகளில் மிக்ஜாம் புயல் பெருமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டேன். வெள்ள நீர் தேங்கியிருக்கும் நிலையில், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், உயிரிழப்புகளைத் தடுக்கவும்தான் சில இடங்களில் மின்சாரம் இன்னும் வழங்கப்படவில்லை.

 

மின் இணைப்புகள் வழங்கும் பணிகள் கவனத்தோடு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அமைச்சர்கள், அதிகாரிகள் முதல் கடைநிலைப் பணியாளர்கள் வரை மக்களைப் பாதுகாக்கக் களத்தில் ஓய்வின்றி உழைத்து வருகிறார்கள். விரைவில் நிலைமை சீரடையும்” எனத் தெரிவித்துள்ளார். 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

ஐஏஎஸ் அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு!

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

Promotion for IAS officers

 

5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு வழங்கி தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

 

இது குறித்து தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா வெளியிட்டுள்ள உத்தரவில், ”மணிவாசன் ஐஏஎஸ் சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார். ககன் தீப் சிங் பேடி ஐஏஎஸ் சுகாதாரத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார். தீரஜ்குமார் ஐஏஎஸ் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார். விஜயகுமார் ஐஏஎஸ் நகர்ப்புற கட்டமைப்பு நிதியத்தின் தலைமைச் செயலாளராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார். சுனில் பாலிவால் ஐஏஎஸ் சென்னை துறைமுக ஆணையத்தின் கூடுதல் தலைமைச் செயலாளராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த உத்தரவின் மூலம் 5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அவர்கள் பணியாற்றி வரும் அதே துறையில் கூடுதல் தலைமைச் செயலாளர் தகுதியில் பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்