Skip to main content

அலுவலகத்தினுள் புகுந்து பைனான்சியர் கொலை; நள்ளிரவில் உறவினர்கள் போராட்டம்

Published on 18/08/2022 | Edited on 18/08/2022

 

Financier passed away police investigation a

 

வேளாங்கண்ணியில் முன்விரோதம் காரணமாக பிரபல பைனான்சியர் ஒருவரை வெட்டிப் படுகொலை செய்துவிட்டுத் தப்பிச்சென்ற குற்றவாளிகளைக் கைது செய்யக்கோரி உறவினர்கள் நள்ளிரவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

 

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி அடுத்துள்ள தெற்குபொய்கைநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகர். டி.வி.ஆர் மனோகர் என்று அழைக்கப்படும் இவர், அப்பகுதியில் பைனான்சியராகவும், வேளாங்கண்ணியில் தங்கும் விடுதி ஒன்றும் நடத்தி வருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வேறு சிலருக்கும் தொழில்ரீதியாக முன் விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது.

 

இந்நிலையில் வழக்கம் போல் டி.வி.ஆர் மனோகர், வேளாங்கண்ணி முச்சந்தி அருகே உள்ள அவருக்குச் சொந்தமான அலுவலகத்தில் அவரது நண்பர் மணிவேலுடன் பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று மர்ம நபர்கள் கடையின் உள்ளே புகுந்து அங்கிருந்த டி.வி.ஆர். மனோகரை, கொண்டுவந்த கொடூர ஆயுதங்களைக் கொண்டு சரமாரியாக வெட்டிச் சாய்த்துள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்த மணிவேல் தடுக்க முயன்றபோது அவரது கையையும் அரிவாளால் வெட்டியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் டி.வி.ஆர் மனோகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 


இந்தப் படுகொலை சம்பவத்தை அறிந்து நாகை எஸ்.பி. ஜவகர் விரைந்துவந்து நேரில் விசாரணை மேற்கொண்டார். மேலும் பைனான்சியரை படுகொலை செய்து விட்டு சாவகாசமாக தப்பிச் சென்ற குற்றவாளிகளை அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை கொண்டு போலீசார் தேடி வருகின்றனர். படுகொலை செய்யப்பட்ட பைனான்சியர் டி.வி.ஆர் மனோகரின் உடல் நாகை அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இந்தச் சம்பவத்தில் படுகாயம் அடைந்த மணிவேல் நாகை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.


பைனான்சியரை படுகொலைசெய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உறவினர்கள் மற்றும் தெற்குபொய்கைநல்லூர் கிராம மக்கள் நள்ளிரவில் நாகை அரசு மருத்துவமனை முன்பு திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என உத்தரவாதம் அளித்ததைத் தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.


வேளாங்கண்ணியில் பிரபல பைனான்சியரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பதற்றம் கலந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தீ பற்றி எரிந்த குடிசை வீடுகள்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
nagai cottages incident Case against BJP

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இத்தகைய சூழலில் நாகையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பாஜக வேட்பாளர் ரமேஷை வரவேற்பதற்காக கோட்டாட்சியர் அலுவலகத்தின் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பாஜகவினரால் பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பட்டாசு பொறிகள் அருகில் இருந்த குடிசை வீடுகளில் பட்டு இரண்டு வீடுகள் பற்றி எரிந்தது. இதில் பக்கிரிசாமி, சுப்பிரமணியன் ஆகிய இருவரின் குடிசை வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இதனை அறிந்து அந்தப் பகுதியில் இருந்த மக்கள் குடிசை வீட்டை இழந்தவர்களுக்கு ஆதரவாக பாஜக நிர்வாகிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், பாஜக மாவட்டத் தலைவர் கார்த்திகேயனை முற்றுகையிட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இழப்பீடு வழங்கப்படும் என எழுத்துப்பூர்வமாக தெரிவித்தால் மட்டுமே பாஜக மாவட்டத் தலைவரை விடுவிப்போம் எனக்கூறி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலர் வீரமணி ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் பாஜகவினர் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தடைசெய்யப்பட்ட வெடியை விற்பனை செய்த, தம்பிதுரை பூங்கா அருகே உள்ள வெடி கடைக்கும் வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.  

Next Story

பாஜக வெடித்த பட்டாசு; இரண்டு குடிசைகள் எரிந்து நாசம்; மக்கள் போராட்டம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
BJP burst firecrackers; Two huts were destroyed by fire; People's struggle

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில் நாகையில் பாஜக வேட்பாளர் பிரச்சாரத்தின்போது வெடிக்கப்பட்ட பட்டாசு இரண்டு குடிசைகள் மீது பட்டு, பற்றி எரிந்துள்ளது. இதனால் குடிசை வீடுகள் இரண்டு முற்றிலும் சேதமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்தப் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பாஜக வேட்பாளர் ரமேஷை வரவேற்பதற்காக கோட்டாட்சியர் அலுவலகத்தின் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பாஜகவினரால் பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது பட்டாசு பொறிகள் அருகில் இருந்த குடிசை வீடுகளில் பட்டு இரண்டு வீடுகள் பற்றி எரிந்தது. இதில் பக்கிரிசாமி, சுப்பிரமணியன் ஆகிய இருவரின் குடிசை வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இந்நிலையில் அந்தப் பகுதியில் இருந்த மக்கள் குடிசை வீட்டை இழந்தவர்களுக்கு ஆதரவாக பாஜக நிர்வாகிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பாஜக மாவட்டத் தலைவர் கார்த்திகேயனை முற்றுகையிட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இழப்பீடு வழங்கப்படும் என எழுத்துபூர்வமாக தெரிவித்தால் மட்டுமே பாஜக மாவட்டத் தலைவரை விடுவிப்போம் எனக்கூறி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.