Skip to main content

சதுரங்க வேட்டை பட பாணியில் மோசடி; மதுரையில் பரபரப்பு

Published on 18/03/2023 | Edited on 18/03/2023

 

 finance company in Madurai has cheated people of money

 

"எங்க பணத்த புடுங்கிட்டு எங்களுக்கே நோட்டீஸ் அனுப்புறாங்க" என பைனான்ஸ் நிறுவனத்தில் பணத்தை ஏமாந்த பொதுமக்கள் கண்ணீரோடு கமிஷனர் ஆபிசில் புகார் அளித்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

மதுரை மாநகர் பசுமலை பகுதியில் ஜே.ஆர்.ஜே மார்க்கெட்டிங் என்ற பைனான்ஸ் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. இந்த நிறுவனத்தின் தலைவராக ஜெயராஜ் என்பவர் இருந்துள்ளார். இந்நிலையில், இந்த நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என்று அப்பகுதி மக்களிடம் பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளது. அதில், தங்களது நிறுவனத்தில் 30 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால் அந்த 30 ஆயிரம் ரூபாய் பணத்தை பயன்படுத்தி ஒரு பவுன் தங்கக்காசு வாங்கிக் கொள்ளலாம் எனவும், மேலும் அதில் கிடைக்கும் லாபத்தில் மாதம் 7500 ரூபாய் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளனர்.

 

இதை உண்மை என நம்பிய பொதுமக்கள், மதுரை மாநகரைச் சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட நபர்கள் இந்த பைனான்ஸ் நிறுவனத்தில் முப்பதாயிரம் ரூபாய் முதல் பல லட்ச ரூபாய் வரைக்கும் முதலீடு செய்துள்ளனர். இதையடுத்து, முதலீடு செலுத்தியவர்களுக்கு மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக மாதம்தோறும் லாப பணமாக 7500 ரூபாய் வழங்கியுள்ளனர்.

 

இந்நிலையில், கடந்த மூன்று நான்கு மாதங்களாக முதலீட்டாளர்களுக்கு லாப பணம் கொடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் பணம் கொடுத்தவர்கள் அந்நிறுவனத்தின் தலைவரான ஜெயராஜ் என்பவரை தொடர்புகொண்டு கேட்டபோது, உங்களுடைய பணம் விரைவில் வரும் எனக் கூறியுள்ளார். ஆனால், தொடர்ச்சியாக பல மாதங்கள் ஆகியும் லாப பணம் வராத நிலையில், தங்களுக்கு லாப பணம் வேண்டாம் தாங்கள் கட்டிய டெபாசிட் தொகையை திருப்பித் தருமாறு கேட்டுள்ளனர்.

 

அந்த சமயத்தில், உங்களுடைய பணத்தை திருப்பித் தருவதாக கூறி, டெபாசிட் செலுத்தியதற்கான சீட்டுகளை பெற்றுக்கொண்ட நிலையில், தாங்கள் தான் பணத்தை திரும்ப தர வேண்டும் என டெபாசிட் செய்தவர்களின் வீட்டுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், அந்த பைனான்ஸ் நிறுவனம் மீது மதுரை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். மேலும், இச்சம்பவம் மதுரை முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.