Skip to main content

“நான் காளி மாதா, என்னை கைது செய்து தவறு செய்து விட்டீர்கள்..” - காவல் நிலையத்தில் ஆக்ரோஷமான பெண் சாமியார்! 

Published on 06/01/2022 | Edited on 06/01/2022

 

female preacher arrested by Dindigul Nilakottai police

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டையில் தவயோகி சாமியார் ஒருவர் கொடுத்த மோசடி புகாரில் பிரபல பெண் சாமியார் கைது செய்யப்பட்டார்.

 

நிலக்கோட்டை அருகே வீலி நாயக்கன்பட்டி கிராமத்தில் தவயோகி ஞானதேவபாரதி என்பவர் ஆசிரமம் நடத்தி வருகிறார். இந்த நிலையில், திண்டுக்கல்லைச் சேர்ந்த பவித்ரா (என்ற) காளிமாதா என்னும் பெண் சாமியார் ஆசிரமத்தோடு தன்னை தொடர்பில் இணைத்துக் கொண்டார். சாமியார்கள் இருவரும் தேடிவரும் பக்தர்களுக்கு ஆசிர்வாதம் மற்றும் உதவிகள் வழங்கி வந்த நிலையில், ஞான பாரதிக்கும் பவித்ராவுக்கும் திடீரென மோதல் ஏற்பட்டது. 

 

பவித்ரா, ஆசிரம சொத்துக்களை அபகரிக்க பார்க்கிறார் என ஞானதேவபாரதி குற்றம் சாட்டினார். ஞானதேவபாரதி, தன்னிடம் பணத்தை பிடுங்கிக் கொண்டார் என பவித்ரா குற்றம்சாட்டினார். இதனையடுத்து ஆசிரமத்தில் பல்வேறு சர்ச்சைகளும் அடிதடிகளும் நடைபெற்றன. இருவரும் மாறி மாறி நிலக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்த வண்ணம் இருந்தனர். 

 

இந்நிலையில் கடந்த வருடம் ஆசிரமத்தில் புலித்தோல் பதுக்கி வைத்திருப்பதாக பவித்ரா கொடுத்த புகாரில் வனத்துறையினர் ஆசிரமத்தில் சோதனையிட்டு அங்கிருந்து புலித்தோலை கைப்பற்றி ஞானதேவபாரதி மீது வழக்குப்பதிவு செய்து உதவியாளர் ஒருவரை கைது செய்தனர். இதனைத்தொடர்ந்து ஆசிரமத்தில் மேற்பார்வையாளராக இருக்கும் மற்றொரு பெண் சாமியாரான அருள்மணி, பவித்ரா ஆசிரமத்துக்குள் புகுந்து 30 பவுன் நகை, ஐந்து லட்ச ரூபாய் பணம் மற்றும் ஆவணங்களை எடுத்துச் சென்று விட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். 

 

female preacher arrested by Dindigul Nilakottai police

 

பவித்ரா, தன்னை ‘அகில இந்திய ஹிந்து யுவ மேர்ஷா தர்மாச்சார்யா’ அமைப்பை சேர்ந்தவர். எனக்கு மத்திய அரசு பாதுகாப்பு இருக்கிறது எனக் கூறி காவல்துறை தன்னை நெருங்கா வண்ணம் பார்த்துக் கொண்டார். மேலும் தமிழகம் முழுவதும் தான் காளிமாதா என கூறி தமிழக அரசியல் வி.ஐ.பி.கள் மற்றும் காவல்துறை, அரசுத்துறை அதிகாரிகள் என பலரும் தனது பக்தர்கள் என அடையாளப்படுத்திக் கொண்டார். தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிக்குச் சென்று அருள்வாக்கு கூட்டம் நடத்தி பிரபலமானார். 

 

இந்நிலையில் தொடர் புகார் எதிரொலி காரணமாக பெண் சாமியார் மீது இருந்த மோசடி வழக்கை கையில் எடுத்த போலீசார், திண்டுக்கல்லில் இருந்த பவித்ராவை திடீரென கைது செய்தனர். காவல் நிலையம் அழைத்துவரப்பட்ட பவித்ரா, விசாரணையின் போது போலீசார் மத்தியில், “நான் காளி மாதா, என்னை கைது செய்து; தவறு செய்து விட்டீர்கள். காளி உங்களைத் தண்டிப்பாள்” என ஆவேசமாக கூறி பிரார்த்தனை செய்தார். இதனைத் தொடர்ந்து பவித்ராவின் உடனிருந்த அவர் தங்கை ரூபவதியும் கைது செய்யப்பட்டார். ஆண் சாமியார் கொடுத்த மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் சாமியார் பவித்ரா நிலக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். நிலக்கோட்டையில் பிரபல பெண் சாமியார் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கல்லூரி மாணவி மரணம்; நீடிக்கும் மர்மம் - போலீஸ் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
College student mysterious passed away in Thiruvarangam

திருவரங்கம் ராஜகோபால நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் கோபி என்கிற கோவிந்தராஜன் (வயது 60). இவர் திருவரங்கம் கோவிலில் சுவாமிக்கு வரக்கூடிய துணிகளை ஏலம் எடுத்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் ஜெய்ஸ்ரீ(வயது 18). திருச்சியில் உள்ள கல்லூரியில் பி.ஏ ஆங்கில பட்டப்படிப்பு முதலாமாண்டு படித்து வந்தார். இதற்கிடையில், இவர் திருவரங்கத்தைச் சேர்ந்த கிரோஷ் என்ற வாலிபரைக் காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கீழ சித்திர வீதியில் உள்ள காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து குதித்து ஜெயஸ்ரீ தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை கோவிந்தராஜன் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவரங்கம் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெண்ணிலா மற்றும் போலீசார்  காதலன்  மற்றும் காதலனின் நண்பர்கள் உள்பட ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் இரண்டு பேர் சரித்திர பதிவேடு குற்றவாளி எனவும் தெரிய வந்துள்ளது.அதனால் இது திட்டமிட்ட கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்பது குறித்தும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் காதலனின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து கல்லூரி மாணவி குதித்து தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் திருவரங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது