Skip to main content

குறைதீர்ப்பு கூட்டம்; கலங்கிய குடிநீருடன் ஆட்சியரை முற்றுகையிட்ட விவசாயிகள்

Published on 31/05/2023 | Edited on 31/05/2023

 

  farmers came grievance redressal meeting with disturbed drinking water District Collector

 

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி முன்னிலையில் நடந்தது. துறை சார்ந்த அதிகாரிகள், விவசாய சங்க பிரதிநிகள், நூற்றுக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர். விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளைப் பற்றி பேசினார்கள். மிசா மாரிமுத்து பேசும் போது.. திரும்ப திரும்ப பேச வருவது வெட்கமாக உள்ளது. எங்கள் கோரிக்கை நிறைவேற்றினால் ஏன் திரும்ப திரும்ப பேசுகிறோம். காவிரி குண்டாறு வரனும். ஏரி குளங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றார்.

 

விவசாயி துரைமாணிக்கம், “காப்பீடு பணம் வந்தால் தான் விதை வாங்கலாம். ஆகவே காப்பீடு தொகையை விரைந்து வழங்க வேண்டும்” என்றார். விவசாயி சுப்பையா.. தைல மரம், சீமைகருவேல மரங்களை அகற்றுவதில்லை. கேட்டால் அகற்றுவோம் என்று சொல்வதோடு அதிகாரிகளின் வேலை முடிந்துவிடுகிறது. கடவாக்கோட்டை கண்மாய் மழை வெள்ளம் வெளியேற்ற உடைக்கப்பட்டது மறுபடி சீரமைக்கவில்லை. மறுபடி மழை வெள்ளம் வந்தால் கிராமம் மூழ்கும். அதிகாரிகள் கண்கொள்ளவே இல்லை.
 

இப்படி முன்பதிவு செய்த பலர் பேசி முடித்த நிலையில் விவசாயிகளின் கேள்விகளுக்கு அதிகாரிகள் பதில் சொல்ல அழைக்கப்பட்ட போது, ஏராளமான விவசாயிகள் எழுந்து, விவசாய சங்க பிரதிநிகளுக்கு மட்டும் முன்பதிவு செய்யப்படுகிறது. ஆனால் தனி நபர்கள், விவசாயிகள் தங்கள் கோரிக்கையை சொல்ல நினைத்து வந்தால் எங்களுக்கு அனுமதி இல்லை. கோரிக்கையை எப்படிச் சொல்வது? இனிமேல் விவசாயிகள் குறைதீர் கூட்டம் என்பதை மாற்றி விவசாய சங்க பிரதிநிதிகள் குறைதீர் கூட்டம் என்று சொல்லலாம் என்றனர்.

 

இதனைக் கேட்ட மாவட்ட ஆட்சியர், அடுத்தடுத்த கூட்டங்களில் விவசாயிகளும் முன்பதிவு செய்து பேச வாய்ப்பளிக்க வேண்டும். தவிர்க்க கூடாது என்று கூறியதுடன் பேச வாய்ப்பில்லாத விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் இப்போதே நேரில் கொடுத்து விபரங்களை அறியலாம் என்றார். தொடர்ந்து அதிகாரிகள் பதில் கூறும் போது, கால்நடை அலுவலர். இலுப்பூரில் 42 கால்நடை மருந்தகத்தில் 21 மருத்துவர்களே உள்ளனர். அதனால் காலதாமதம் ஏற்படுகிறது என்றார்.

 

நீர்வளத்துறை பெண் அதிகாரி ஆக்கிரமிப்புகள் அகற்றுவது குறித்த விவசாயிகளின் கேள்விகளுக்கு பதில் கூறும் போது.. நீர்வளத்துறை ஆக்கிரமிப்பு அகற்றப் போனால் பாதுகாப்பு இல்லை. கவிநாடு கண்மாய் ஆக்கிரமிப்பு அகற்றப் போனபோது ஒரு வழக்கறிஞரே 'அன்பார்லிமெண்ட்'  வார்த்தைகளில் பேசுகிறார். அவர் பற்றி பார்கவுன்சிலில் புகார் கொடுத்திருக்கிறோம் என்றார்.

 

அப்போது எழுந்த சில விவசாயிகள் அதிகாரிகளே பாதுகாப்பு இல்லைனு சொல்லலாமா? என்றனர். நான் விவசாய செய்த நிலத்தில் விவசாயம் இல்லை என்று கூட்டுறவு சங்கம் சொல்லி விவசாயிகளை கொச்சைப்படுத்தலாமா? என்ற விவசாயி மகேந்திரனின் கேள்விக்கு கூட்டுறவுத் துறை அதிகாரி உரிய விசாரணை செய்வதாக கூறினார்.

 

காவிரி குண்டாறு பற்றிய கேள்விக்கு பதில் அளித்த மாவட்ட வருவாய் அலுவலர் (காவிரி குண்டாறு)  2023 - 24 ரூ.180 கோடி நிலமெடுப்பிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று கூறும் போது கூட்டமாக எழுந்த விராலிமலை ஒன்றியம் குன்னத்தூர் பகுதி விவசாயிகள்.. நிலமெடுப்பு பணியில் தவறு நடக்கிறது. கோரையாற்றில் குண்டாறு இணைக்க அப்பகுதியில் உள்ள சாராய ஆலைக்கு சாதகமாக செயல்படுகிறார்கள் அதிகாரிகள் என்று கூறி ஆட்சியர் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். தொடர்ந்து மது தொழிற்சாலை கழிவுகள் நிலத்தடி நீரில் கலந்து குடிநீர் கலங்கி வருகிறது என்று கலங்கிய தண்ணீர் பாட்டில்களுடன் ஆட்சியர் முன்பு முற்றுகையிட்டு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த தண்ணீரை வாங்கிப் பார்த்த மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பூச்சிக்கொல்லி மருந்தா? பயிர்க்கொல்லி மருந்தா? - போராடும் விவசாயிகள்! நடவடிக்கை எடுக்கத் தயங்கும் அதிகாரிகள்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Farmers struggle at Pudukkottai District Collectorate

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் சேர்பட்டி அருகே மறவனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் 10 ஏக்கரில் நெல் பயிர் நடவு செய்துள்ளார். கதிர் வரும் நிலையில் இலைசுருட்டுப்புழு காணப்பட்டதால் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள ஒரு தனியார் பூச்சிக்கொல்லி மருந்துக் கடையில் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கிச் சென்று 8.5 ஏக்கருக்கு தெளித்துள்ளார்.

பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து சில நாட்களில் பயிர்கள் கருகத் தொடங்கி ஒரு வாரத்தில் முழுமையாக கருகியது. சம்பந்தப்பட்ட மருந்துக் கடையில் கேட்டதற்கு சரியான பதில் இல்லாததால் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார் விவசாயி செந்தில்குமார். இதனையடுத்து வயலுக்கே வந்து ஆய்வு செய்த வேளாண்துறை அதிகாரிகள் பூச்சிக்கொல்லி மருந்தால் தான் பயிர்கள் கருகிவிட்டதாக சான்றளித்தனர்.

இதனையடுத்து விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக்கடை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வியாழக்கிழமை தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் துணைச் செயலாளர் சேகர் முன்னிலையில் ஏராளமான விவசாயிகள் கருகிய பயிர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர்.

கருகிய பயிர்களுடன் வந்த விவசாயிகளை ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்காததால் நுழைவாயிலிலேயே கருகிய பயிர்களை கொட்டியும் கையில் வைத்துக் கொண்டும் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கு வந்த போலீசாரும் வருவாய்த் துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய பிறகு ஆட்சியர் அலுவலக நுழைவாயில் போராட்டத்தை விவசாயிகள் முடித்துக் கொண்டனர்.

ஆனால் வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பிச்சத்தான்பட்டியில் திருச்சி மாவட்ட விவசாயிகள் இருவர் செல்போன் கோபுரத்தில் ஏறிவிட்டனர். அதேபோல மற்றொரு குழு விவசாயிகள் விராலிமலை வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்திற்குச் சென்ற விவசாயிகள் அலுவலகத்திற்குள் நுழைந்து நடவடிக்கை எடுக்கும் வரை போகமாட்டோம்  என்று அங்கேயே படுத்துவிட்டனர்.

அதன் பிறகே சம்பந்தப்பட்ட விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக் கடையை அதிகாரிகள் மூடினர். பூச்சிக்கொல்லி மருந்து கேட்டால் பயிர்க்கொல்லி மருந்து கொடுத்து 8.5 ஏக்கர் நெல் பயிர்களைக் கொன்ற பூச்சி மருந்துக்கடை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கீரமங்கலத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை புதிய லேபிள் ஒட்டி புதிய மருந்தாக விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 1500 மருந்துப் பாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் இப்போது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன் என்ற கேள்வி எழுப்புகின்றனர்.

Next Story

வேங்கைவயல் விவகாரம்; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
The vengaivayal Affair Court action order

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20 நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அதன்படி கடந்த ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி முதல் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் இந்த வழக்கை விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 2 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் வேங்கைவயல் விவகாரத்தில் மேலும் 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள புதுகோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.