Skip to main content

கீழ்பவானி வாய்க்காலுக்குள் இறங்கி விவசாயிகள் போராட்டம்

Published on 01/08/2023 | Edited on 01/08/2023

 

nn

 

கீழ்பவானி வாய்க்காலில் கான்க்ரீட் அமைக்க, பாசனதாரர்கள், குடிநீர் ஆதாரம் பெறும் கிராம மக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நீர்வளத் துறை சார்பில் வாய்க்காலில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

அரசு உத்தரவுக்கு மாறாக மண் கரைகளைச் சேதப்படுத்தியும், மரங்களை வெட்டியும், அரசு அதிகாரிகளும், ஒப்பந்ததாரர்களும் செயல்பட்டு வருவதைக் கண்டித்து ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தினர் கடந்த 21 ஆம் தேதி முதல் கீழ்பவானி வாய்க்கால் வழித்தடத்தில், வாய்க்காலில் இறங்கி தொடர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி இன்று காலை ஈரோடு மாவட்டம் நம்பியூர் அடுத்த எலத்தூர், செட்டிப்பாளையம் பிரிவு கீழ்பவானி வாய்க்காலின் 19வது மைலில் விவசாயிகள், கிராம மக்கள் வாய்க்காலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

அப்போது ஆகஸ்ட் 15 ஆம் தேதி அன்று கீழ்பவானி வாய்க்காலில், பாசன நீர் திறந்துவிட வேண்டும். முடிக்கப்படாத கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். கான்க்ரீட் திட்டம் கோரும் அரசாணை எண்: 276ஐ அரசு உறுதியாக ரத்து செய்ய வேண்டும். 68 ஆண்டுகளாக உள்ள மக்களுக்கான மண் கரை மற்றும் மண் அணையைப் பாதுகாக்க வேண்டும். கரைகளில் உள்ள 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்களைப் பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில், கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ரவி மற்றும் கசிவு நீர் பாசனதாரர்கள், குடிநீர் ஆதாரம் பெறும், சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்