Skip to main content

பொதுவெளியில் அவமானப்படுத்தியதால் வந்த வினை! விவசாயி அடித்து கொலை!

Published on 18/04/2022 | Edited on 18/04/2022

 

Farmer passed away police arrested one

 

கிருஷ்ணகிரி அருகே, பலர் முன்னிலையில் அடித்து அவமானப் படுத்தியதால் விவசாயியை அடித்துக் கொலை செய்த டேங்கர் லாரி ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்தனர்.


கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அருகே உள்ள நாரணிகுப்பத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மனைவி சுமித்ரா (37). இதே ஊரைச் சேர்ந்தவர் நரசிம்மன் (40). டேங்கர் லாரி ஓட்டுநர். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு நரசிம்மன், சுமித்ராவிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதையறிந்த சுமித்ராவின் உறவினர்கள் அவரை கண்டித்துள்ளனர். குடிசாதனப்பள்ளியைச் சேர்ந்த அவருடைய உறவினரான விவசாயி திம்மராஜ் என்பவர் நரசிம்மனை தாக்கியுள்ளார். 


இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை (ஏப்.14) மாலை, நாரணிகுப்பத்தில் இருந்து திம்மராஜ் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அந்தப் பகுதியில் உள்ள ஜவுளி நிறுவனம் அருகே சென்று கொண்டிருந்தபோது, கார்மெண்ட் நிறுவனம் அருகே சென்று கொண்டிருந்தபோது, திம்மராஜை தடுத்த நிறுத்திய நரசிம்மன், எப்படி என்னை அடிக்கலாம் என கேட்டு தகராறில் ஈடுபட்டார். 


அப்போது அவர்கள் இருவருக்குள்ளும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த நரசிம்மன், அங்கிருந்த கட்டையை எடுத்து திம்மராஜை சரமாரியாக தாக்கினார். இதில் அவருடைய தலையின் பின்பக்கத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் அவர் மயங்கி விழுந்தார். அலறல் சத்தம் கேட்டு சிலர் ஓடிவருவதைப் பார்த்த நரசிம்மன் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார். அந்த வழியாக வந்தவர்கள் திம்மராஜை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 


இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து குருபரப்பள்ளி காவல்நிலைய ஆய்வாளர் அன்புமணி வழக்குப்பதிவு செய்து, நரசிம்மனை கைது செய்தார். விசாரணையில், ''திம்மராஜ் ஊர் மக்கள் முன்னிலையில் என்னை தாக்கி அவமானப்படுத்தினார். சம்பவத்தன்று இதுகுறித்து கேட்டபோதும் அவர் ஆபாசமாக பேசினார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் அவரை கட்டையால் தாக்கினேன். அவர் மயங்கி விழுந்ததால் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டேன். அவர் இறந்து போவார் என்று நான் நினைக்கவில்லை'' என்று நரசிம்மன் தெரிவித்துள்ளார். 


இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு, கிருஷ்ணகிரி சிறையில் அடைத்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார். 

Next Story

ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைப்பு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sharmila handed over to Praveen parent

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடையான் பேட்டையைச் சேர்ந்த ஷர்மிளா (வயது 22) என்ற பெண்ணைக் கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவீன் - சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், எதிர்ப்பையும் மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது. இந்தக் காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் இவர்கள் இருவரும் வசித்து வந்தனர்.

இத்தகைய சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால், ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு (22.04.2024) உயிரிழந்தார். மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியதோடு கொலைக்கு காரணமான தனது பெற்றோர் மற்றும் சகோதரர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம் தொடர்பாக கோட்டாட்சியர் (RDO - ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஷர்மிளாவின் உடல் உடற்கூராய்வு செய்யப்படும் போது வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இன்று (25.04.2024) வருவாய் கோட்டாட்சியர் இப்ராஹிம் நேரில் விசாரணை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து ஷர்மிளா உடலுக்கு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடைபெற்று நிறைவடைந்த நிலையில் ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.