
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரை பூர்வீகமாகக் கொண்டவர் பிரபல யூடியூப் சமையல் கலைஞர் டாடி ஆறுமுகம். இவர் அவரது மகன் கோபிநாத் ஆலோசனையில் துவங்கப்பட்ட வில்லேஜ் ஃபுட் ஃபேக்டரி என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். 46 லட்சத்திற்கும் அதிகமான சந்தாதாரர்களை கொண்டுள்ள இவர்களின் யூடியூப் சேனலின் மூலம் இன்று மாதம் பல லட்சங்களில் சம்பாதித்து கொண்டிருக்கின்றனர். அதே போல் டாடி ஆறுமுகம் என்ற பெயரில் புதுச்சேரியில் மட்டும் மூன்று இடங்களில் உணவகங்களை நடத்தி வருகிறார் கோபிநாத்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுகிழமை அன்று கோபிநாத் அவரது நண்பர்கள் சிலருடன் புதுச்சேரி முத்தியால்பேட்டையில் உள்ள மதுக்கூடத்துடன் கூடிய ஹோட்டலுக்கு சென்றுள்ளார். இரவு 8 மணி அளவில் பப்புக்குள் நுழைந்தவர்கள் 11 மணி வரை மது அருந்தியுள்ளனர். அப்போது ஜார்ஜ் என்ற ஊழியரிடம் மேலும் மது கேட்டுள்ளனர். அதற்கு ஜார்ஜ் என்ற ஊழியர் 11 மணிக்கு மேல் மது விற்பதற்கு அனுமதி இல்லை என்று தெரிவித்து இருக்கிறார். போதையின் உச்சத்தில் இருந்த கோபிநாத், நான் யார் தெரியுமா? டாடி ஆறுமுகத்தின் மகன், எனக்கே சரக்கு இல்லையா? என்று கேட்டுள்ளார்.

அதிகமாக மது அருந்திய அவர்கள் உணவக ஊழியர்களிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகாத வார்த்தையால் பேசியும் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கோபிநாத்துக்கும் ஹோட்டல் ஊழியருக்கும் கடுமையான தகராறு ஏற்பட்டது. இந்த தகராறை அக்கம்பக்கம் இருந்தவர்கள் விலக்கியும் சிறிதும் அடங்காமல் கோபிநாத், ஜெயராம் மற்றும் தாமு ஆகிய மூவரும் கடுமையான ரகளையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஓட்டலில் உள்ள அனைத்து பொருட்களையும் சூறையாடி உள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முத்தியால்பேட்டை போலீசார் தகராறில் ஈடுபட்ட கோபிநாத், ஜெயராம் மற்றும் தாமு ஆகியோரை கைது செய்தனர்.