Skip to main content

ஓசூரில் வேன் ஓட்டுநர் கத்தியால் குத்திக் கொலை! மனைவியைக் கண்டித்ததால் தம்பி வெறிச்செயல்!

Published on 11/01/2023 | Edited on 11/01/2023

 

family issue one passed away police investigation in Hosur

 

ஓசூரில், மனைவியைக் கண்டித்ததால் அண்ணன் என்றும் பாராமல் கத்தியால் சரமாரியாகக் குத்திக்கொலை செய்த தம்பி உள்ளிட்ட இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பேகேப்பள்ளியைச் சேர்ந்தவர் அன்னையப்பா. இவருடைய மகன் சென்னப்பா என்கிற சேகர் (37). வேன் ஓட்டுநர். அன்னையப்பாவின் தம்பி கிருஷ்ணப்பா. இவருடைய மகன் முனிராஜ் என்கிற விஜய் (25). அந்த வகையில் சென்னப்பாவும், முனிராஜும் அண்ணன், தம்பி ஆகின்றனர். இவர்கள் இருவரின் வீடுகளும் அருகருகில்தான் இருக்கின்றன. இந்நிலையில், ஜன. 8ம் தேதி இரவு முனிராஜ் மனைவி மதுவுக்கும், சென்னப்பாவின் தந்தைக்கும் இடையே ஏதோ வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் சென்னப்பா, முனிராஜின் மனைவி மதுவைக் கண்டித்துள்ளார்.

 

இந்நிலையில் வீட்டிற்கு வந்த முனிராஜிடம், நடந்த சம்பவத்தைக் கண்ணீருடன் மது கூறியுள்ளார். இதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த முனிராஜ், தான் வீட்டில் இல்லாத நேரத்தில் தன் மனைவியைக் கண்டித்தது தவறு எனக்கூறி, சென்னப்பாவிடம் தகராறு செய்தார். பக்கத்து வீட்டில் வசிக்கும் முனிராஜின் நண்பரான பசவராஜ் மகன் ரேணுகா ஆரத்யா (20) மற்றும் பேகேப்பள்ளியைச் சேர்ந்த சக்தி (22) ஆகியோரும் அவருக்கு ஆதரவாக சென்னப்பாவிடம் தகராற்றில் ஈடுபட்டனர்.

 

இதனால் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. முனிராஜும் அவருடைய நண்பர்களும் சென்னப்பாவை சரமாரியாகத் தாக்கினர். இந்நிலையில் வீட்டில் இருந்து கத்தியை எடுத்து வந்த முனிராஜ், சென்னப்பாவை சரமாரியாகக் குத்தினார். பலத்த காயம் அடைந்த அவர் அங்கேயே மயங்கி விழுந்தார். சென்னப்பாவின் குடும்பத்தினர் அவரை மீட்டு, ஓசூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி சென்னப்பா இறந்தார்.

 

இதுகுறித்து தகவல் அறிந்த ஓசூர் சிப்காட் காவல் ஆய்வாளர் சாவித்திரி மற்றும் காவலர்கள் சடலத்தை மீட்டு, உடற்கூராய்வுக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முனிராஜ் மீது காவல்துறையினர் கொலை வழக்குப் பதிவு செய்தனர். இந்தக் கொலை தொடர்பாக முனிராஜ், அவருடைய கூட்டாளி ரேணுகா ஆரத்யா ஆகிய இருவரையும் கைது செய்தனர். மற்றொருவரைத் தேடி வருகின்றனர்.

 

இது ஒருபுறம் இருக்க, உடற்கூராய்வு முடிந்த பிறகு சென்னப்பாவின் உடல் அவருடைய வீட்டுக்குக் கொண்டு வரப்பட்டது. வீட்டில் உட்கார்ந்திருந்த அவருடைய தந்தை அன்னையப்பாவை அஞ்சலி செலுத்த அழைத்தனர். அப்போது அவர் சரிந்து கீழே விழுந்தார். அவர் அமர்ந்திருந்த நிலையிலேயே மாரடைப்பில் இறந்துவிட்டது தெரிய வந்தது. மகன் கொலையுண்ட அதிர்ச்சியில் தந்தையும் மாரடைப்பில் இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.