Skip to main content

கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் விஷம் குடிப்பு... மனைவி, மகன் பலி... தந்தைக்கு தீவிர சிகிச்சை!

Published on 06/10/2021 | Edited on 06/10/2021

 

family incident police investigation namakkal district

 

நாமக்கல் அருகே, கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்தனர். இதில், மனைவி, மகன் பலியான நிலையில், தந்தைக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

 

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் சுல்தான்பேட்டையைச் சேர்ந்தவர் அக்பர் (வயது 60). உள்ளூரில், டிராக்டர்களுக்கான டிரெய்லர் பாகம் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்திவந்தார். இவருடைய மனைவி பாத்திமா (வயது 55). இவர்களுடைய மூத்த மகன் பர்கத் (வயது 30). இரண்டாவது மகன் வெளிநாட்டில் வேலை செய்துவருகிறார். 

 

இந்த தொழிற்சாலையில் தந்தைக்கு உதவியாக பர்கத்தும் வேலை செய்துவந்தார். கடந்த சில மாதங்களாக தொழிற்சாலை மூலம் சரியான லாபம் கிடைக்கவில்லை. இதனால் திடீரென்று தொழிற்கூடம் மூடப்பட்டது. 

 

இந்நிலையில், அக். 4ஆம் தேதி இரவு 11.30 மணியளவில் அக்பர், தனது உறவினர்களை செல்ஃபோனில் தொடர்புகொண்டு பேசியுள்ளார். அப்போது,  “நாங்கள் விஷத்தைக் குடித்துவிட்டோம்” என்று மட்டும் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்துவிட்டார். 

 

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், நள்ளிரவு 12.00 மணியளவில் அக்பரை தேடி அவருடைய வீட்டுக்குச் சென்றனர். அப்போது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதனால் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர். 

 

அங்கு அக்பர், பாத்திமா, பர்கத் ஆகிய மூன்று பேரும் வாயில் நுரை வழிந்த நிலையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தனர். இதையடுத்து மூன்று பேரையும் மீட்டு, பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். 

 

அங்கு மூவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் பாத்திமா, பர்கத் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். அக்பர், தொடர்ந்து தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். 

 

இதுகுறித்து தகவல் அறிந்த பரமத்தி வேலூர் காவல் நிலைய காவல்துறையினர், பாத்திமா, பர்கத் ஆகியோரின் சடலங்களை மீட்டு, உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 

 

விசாரணையில், அக்பர் நடத்திவந்த தொழில் மூலம் அவர் கடந்த ஓராண்டுக்கு மேலாக நட்டத்தை சந்தித்துவந்ததும், குடும்பத்தை நடத்த பலரிடம் கடன் பெற்றிருந்ததும் தெரியவந்தது. ஒரு கட்டத்தில் தொழிற்சாலையை நிரந்தரமாக மூடியதால் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். அந்த நேரத்தில் கடன் கொடுத்த சிலர் பணத்தைத் திருப்பிக் கேட்டு நெருக்கடி கொடுத்ததால் விரக்தி அடைந்த அவர், குடும்பத்துடன் தற்கொலை செய்ய முடிவெடுத்து, விஷம் குடித்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

 

சடலம் கிடந்த இடத்தில் காலி குளிர்பான பாட்டிலும், விஷ பாட்டிலும் கைப்பற்றப்பட்டுள்ளன. அதனால் அவர்கள் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்திருக்கலாம் எனத் தெரிகிறது. 

 

இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரியாணி கடை உரிமையாளர் வழிமறித்து கொலை; போலீஸார் விசாரணை

Published on 27/10/2023 | Edited on 27/10/2023

 

Biryani shop owner incident for police investigation

 

கடலூரில் பிரியாணி கடை நடத்தி வந்த நபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் அந்தப் பகுதியில் பிரியாணி கடை ஒன்றை நடத்தி வந்திருக்கிறார். இவர், நேற்று (26-10-23) இரவு வழக்கம் போல் வேலையை முடித்து தனது வீட்டிற்கு இருசக்கர வாகனம் மூலம் வந்து கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள், கண்ணன் வந்த கொண்டிருந்த வாகனத்தை வழிமறித்துள்ளனர். மேலும், தாங்கள் வைத்திருந்த கத்தியால் குத்திக் கொலை செய்தனர். இதில் சம்பவ இடத்திலேயே கண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்.

 

தகவல் அறிந்த நெய்வேலி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலமாகக் கிடந்த கண்ணனை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கடந்த ஆகஸ்ட் மாதம் கண்ணனுக்கும் மற்றொரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, கண்ணன் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதனால், எதிர் தரப்பினர் கண்ணனை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

 

 

Next Story

இறையூர் விவகாரம்; குழு அமைத்து விசாரணை

Published on 31/12/2022 | Edited on 31/12/2022

 

The affair of the city; Investigate by setting up a committee

 

புதுக்கோட்டை மாவட்டம் இறையூரில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் குழு அமைத்து காவல்துறை விசாரணை செய்து வருகிறது.

 

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள இறையூர் கிராமத்தில் மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவுகள் கலந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே ஆகியோர் நேரில் சென்று ஆய்வு நடத்தினர். 

 

இந்நிலையில், குற்றவாளிகளைக் கண்டறிய 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இறையூரில் அக்குழு தங்களது முதற்கட்ட விசாரணையைத் துவக்கியுள்ளது. ஏடிஎஸ்பி கிருஷ்ணன் தலைமையில் இரண்டு டிஎஸ்பி-க்கள், நான்கு காவல் ஆய்வாளர்கள் மற்றும் நான்கு உதவி காவல் ஆய்வாளர்கள் அக்குழுவில் இடம் பெற்றுள்ளனர். 

 

இவ்விவகாரத்தில் குற்றவாளிகளைப் பிடிக்க 11 பேர் கொண்ட குழுவை அமைத்து திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் சரவண சுந்தர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.