Skip to main content

ரம்பத்தால் அறுத்து குடும்பமே தற்கொலை... நீடிக்கும் மர்மத்தால் பொழிச்சலூரில் பதற்றம்!

Published on 28/05/2022 | Edited on 28/05/2022

 

சென்னை அருகே பொழிச்சலூரில் ஐ.டி நிறுவன ஊழியர் மனைவி, இரு குழந்தைகளை எலெக்ட்ரிக் ரம்பத்தால் அறுத்துக் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சென்னை பொழிச்சலூரை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி காயத்ரி பாஜகவின் பொழிச்சலூர் மண்டல மகளிர் அணி செயலாளராக உள்ளார். இவர்களுக்கு ஹரி கிருஷ்ணன், நித்திய ஸ்ரீ என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். நேற்று மே 27 ஆம் தேதி பிரகாஷ்- காயத்ரி தம்பதியினருக்கு திருமணநாள் என்பதால் காயத்திரியின் தந்தை திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு பிரசாதத்தைத் தனது மகளுக்கு கொடுக்க வீட்டுக்கு சென்றுள்ளார். வீடு உள்பக்கமாக தாழிப்பட்டிருந்த நிலையில் உள்ளே ஏதோ மெஷின் இயங்கும் சத்தம் மட்டும் கேட்டுள்ளது. பலமுறை அழைத்தும் கதவு திறக்கப்படாததால் அச்சமடைந்த தந்தை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றபோது மகள் காயத்ரி, மருமகன் பிரகாஷ், பேரக்குழந்தைகள் ஹரி கிருஷ்ணன், நித்திய ஸ்ரீ ஆகிய நான்கு பேரும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர். பிரகாஷ் கையில் எலெக்ட்ரிக் ரம்பம் ஒன்று இயங்கி கொண்டிருந்த நிலையில் கிடந்தது. அந்த சத்தம்தான் வெளியே கேட்டுள்ளது.

 

இந்த சம்பவம் அக்கம்பக்கத்தில் இருப்போருக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. அமேசான் எனும் பிரபல ஆன்லைன் நிறுவனத்தில் எலெக்ட்ரிக் ரம்பத்தை ஆர்டர் செய்த பிரகாஷ் இந்த கொலை செயலில் ஈடுபட்டது பின்னர் தெரியவந்தது. போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் கொலை நிகழ்ந்த வீட்டிற்கு வந்த தாம்பரம் காவல் ஆணையர் ரவி விசாரணை மேற்கொண்டார். விசாரணையில், கடன் தொல்லையால் இந்த கொலை நிகழ்ந்திருக்கலாம். ஆனால் எங்களின் முடிவுக்கு யாரும் காரணமல்ல என்ற கடிதத்தையும் கைப்பற்றியுள்ளோம். மனைவி குழந்தைகளை பேட்டரியால் இயங்கக்கூடிய ரம்பத்தால் அறுத்து கொலை செய்துவிட்டு வலது கையால் ரம்பத்தை இயக்கி தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார் பிரகாஷ் என காவல் ஆணையர் ரவி தெரிவித்துள்ளார்.

 

பிரகாஷ் வீட்டுக்கு அருகிலேயே நாட்டு மருந்து கடை ஒன்றை வைத்திருந்ததாகவும், கரோனா காலத்தில் நன்றாக வருமானம் வந்த கடை தற்பொழுது இழப்பில் கொண்டுபோய் விட்டதாகவும் கூறப்படுகிறது. அதுபோல் அவர் ஆரம்பித்த நெய் விற்பனை கடையும் இழப்பில் சென்றதால் குடும்பம் கடனில் சிக்கியதாகக் கூறப்படுகிறது. பாஜகவில் இருக்கும் மனைவியும் பல்வேறு தரப்புகளில் உதவியை நாடிய போதிலும் கடனை அடைக்க முடியாத சூழல் இருந்ததாக கூறப்படுகிறது. 3 லட்சம் ரூபாய்க்கான கடன் பத்திரத்தை போலீசார் வீட்டில் கண்டெடுத்ததாகவும் கூறப்படுகிறது. கடன் தொல்லையால் தற்கொலை என்றாலும் ஆன்லைனில் ரம்பத்தை வாங்கி கொடூர முறையில் தற்கொலை செய்ய என்ன காரணம்? என போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த கொடூர தற்கொலை சம்பவம் பொழிச்சலூரில் அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி; பகீர் கிளப்பும் பின்னணி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
wife who incident her husband along with her boyfriend

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே வசிப்பவர்கள் ஸ்ரீகாந்த் - ஆர்த்தி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் ஆர்த்திக்கு ஸ்ரீகாந்தின் நண்பர் இளையராஜாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்த பழக்கம் திருமணத்தை மீறிய உறவாக மாறி உள்ளது.

இது குறித்த தகவல் ஸ்ரீகாந்துக்கு தெரிய வர இருவரையும் அழைத்து கடுமையாக எச்சரித்துள்ளார். இந்த நிலையில் திருமணத்தை மீறிய உறவிற்கு இடையூறாக இருக்கும் கணவன் ஸ்ரீகாந்தை கொல்ல இளையராஜாவுடன் ஆர்த்தி திட்டமிட்டுள்ளார்.  அதன் படி கடந்த 2021 ஆம் ஆண்டு தேவகோட்டை அருகே உள்ள அருகே உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத காட்டு பகுதிக்கு இளையராஜா ஸ்ரீகாந்தை அழைத்துச் சென்று மது குடிக்க வைத்து அவரை வெட்டிக்கொன்று புதைத்துள்ளார். ஆனால் மனைவி ஆர்த்தி தனது கணவர் குடும்ப பிரச்சனை காரணமாக கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதாக குடும்பத்தாரிடமும் அக்கம்பக்கத்தினரிடமும் நாடகமாடி உள்ளார்.

இந்த நிலையில் இரண்டரை வருடம் கழித்து ஸ்ரீகாந்த் கொலை செய்யப்பட்டது குறித்த தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதன் பெயரில் விசாரணையை தொடங்கிய போலீஸ் மனைவி ஆர்த்தியையும், இளையராஜாவையும் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் இளையராஜாவின் நண்பர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவரையும் கைது செய்தனர். மேலும் இந்தக் கொலை தொடர்பாக தலைமறைவாக இருக்கும் இருவரை போலீஸ் தேடி வருகின்றனர்.

Next Story

ஷர்மிளா தற்கொலை விவகாரம்; ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Sharmila incident RdO Order for investigation

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடையான் பேட்டையைச் சேர்ந்த ஷர்மிளா (வயது 22) என்ற பெண்ணை கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவீன் - சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், எதிர்ப்பையும் மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது. இந்த காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் இவர்கள் இருவரும் வசித்து வந்தனர்.

இத்தகைய சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால் ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு (22.04.2024) உயிரிழந்தார். மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியுள்ளதோடு கொலைக்கு காரணமானவர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம் தொடர்பாக கோட்டாட்சியர் (RDO - ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஷர்மிளாவின் உடற்கூராய்வு சற்று நேரத்தில் நடைபெற உள்ளது எனவும், உடற்கூராய்வு வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.