Skip to main content

அப்பட்டமாக கடை விரித்து கள்ள மது விற்பனை; வைரல் வீடியோ

Published on 23/11/2022 | Edited on 23/11/2022

 

 Fake liquor sold by open shop; viral video

 

'போதை மாற்றும் பாதை' ‘போதை இல்லா தமிழகம்’ என எத்தனையோ தலைப்புகளில் விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டாலும் தொடர்ந்து போதைப் பொருட்களுக்கு அடிமையாகும் சில இளைய தலைமுறையினரின் செயல் செய்திகளாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அதுவும் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்களுக்கு அருகிலேயே அவை மலிவாகக் கொட்டிக் கிடப்பதுதான் சில நேரம் சமூக வலைத்தளங்களை அதிர வைக்கிறது. அண்மையில் கள்ள மது விற்ற வழக்கில் தாய்  சிறை செல்ல, புத்தகப் பையுடன் சிறுவன் ஒருவன் கள்ள மது விற்றது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

 

இந்நிலையில் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ள காட்சிகள் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த ரெட்டிமாங்குப்பம் ஆற்றங்கரையோரம் சட்ட விரோதமாக கள்ள மது விற்பனை ஜரூராக நடைபெற்று வருகிறது. தினக்கூலிக்கு ஆட்களை வைத்து கல்லா கட்டும் அளவிற்கு விற்பனை நடைபெறுகிறது என்றால் பாருங்களேன். அந்தப் பகுதியில் கள்ள மது விற்பனை செய்பவரிடம் பேசிக்கொண்டே இளைஞர் ஒருவர் மது வாங்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. அதில், 

 

மது விற்பவர்: ''எத்தனைப்பா...”

இளைஞர்: “ஒன்னு கொடு தலைவா ஃபர்ஸ்ட்டு...”

மது விற்பவர்: “அட ரெண்டு வாங்கிக்கப்பா...”

இளைஞர்: “ஒன்னு கொடு தலைவரே...”

மது விற்பவர்: “அட ரெண்டு வாங்கி போடேன். வயசு புள்ளைங்க ரெண்டு குடிக்கிறதில்ல...”

இளைஞர்: “சரிதான்... நேத்து ரெண்டு போட்டேன் ஒன்னுமே தேரிலேயே...”

மது விற்பவர்: “சாப்பிட்டியா வயிறு நப்ப... இந்தா (என மது பாக்கெட்டை கொடுத்து) நீயே வந்து சொல்லணும் போதை ஏறிடுச்சுனு...'' என அந்த வீடியோ உரையாடல் இருக்கிறது.

 

 Fake liquor sold by open shop; viral video

 

இவர்களுக்குப் பின்புறம் நெடுஞ்சாலையில் வாகனங்கள் கடக்கும் காட்சிகள் தெரிகிறது. இப்படி அப்பட்டமாக கடை விரித்து கள்ள மது விற்பனை செய்வது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கதிர் ஆனந்த் வேட்புமனு தாக்கல் 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Kathir Anand filed nomination

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். இதற்காக அவர், அமைச்சர் துரைமுருகன், சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார், சட்டமன்ற உறுப்பினர் கார்த்தி உள்ளிட்ட 2000க்கும் மேற்பட்ட இந்தியா கூட்டணிக் கட்சித் தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்து மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலர் சுப்புலட்சுமியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

அதற்கு முன்னதாக வேலூர் அண்ணா சாலையில் உள்ள வேலூர் மாநகர் திமுக அலுவலகத்தில் கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, தொடர்ச்சியாக ஊர்வலமாகச் சென்று அண்ணா சிலை, பெரியார் சிலை, காந்தி சிலை, அம்பேத்கர் சிலை ஆகியவற்றிற்கு மாலை அணிவித்துவிட்டு சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்து தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.

அதற்கு முன்னதாக இந்தியா கூட்டணி தொண்டர்கள் ஆரவாரத்துடன் கதிர் ஆனந்த் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். வழிநெடுக பட்டாசுகள் வெடித்து கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் எனப் பல்வேறு மேள தளங்கள் இசைத்து ஊர்வலமாக வந்தனர். பின்னர் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான சுப்புலட்சுமியிடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.