
இந்தியாவில் கடந்த இரு மாதங்களாக கட்டுக்குள் இருந்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இரண்டாயிரத்திற்கும் கீழாக பதிவாகி வந்த தினசரி கரோனா பாதிப்பு, தற்போது இரண்டாயிரத்தைக் கடந்துள்ளது. குறிப்பாக, டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் கரோனா பரவலின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துவருகிறது.
டெல்லி, பஞ்சாப் மாநிலங்களில் முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திலும் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அரசு கவனம் செலுத்திவருகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் மீண்டும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
இந்த நிலையில், தமிழகத்தில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்க மாவட்ட நிர்வாகங்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.