Skip to main content

மதுரையை உலுக்கிய சம்பவம்; ஐ.ஏ.எஸ் அதிகாரியின் முன்னாள் மனைவி தற்கொலை!

Published on 22/07/2024 | Edited on 22/07/2024
Ex-wife of IAS officer lost their life in case of child abduction

மதுரையைச் சேர்ந்தவர்கள் ராஜ்குமார் - மைதிலி தம்பதியினர். இவர்களது மகன் மதுரையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகிறார். அவர், பள்ளிக்கு ஆட்டோவில் சென்று வருவது வழக்கம். இந்த நிலையில் கடந்த 11 ஆம் தேதி பள்ளிக்கு ஆட்டோவில் சென்றுக்கொண்டிருந்த போது சிறுவன் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் பால்பாண்டி இருவரையும் மர்ம கும்பல் ஒன்று ஆயுதங்கள் கொண்டு தாக்கி கடத்தி சென்றது. 

இதனையடுத்து அந்தக் கும்பலை சேர்ந்தவர்கள் ராஜ்குமார் மைதிலி தம்பதியினரை தொடர்புக்கொண்டு, ரூ.2 கோடி பணம் கொடுத்தால் உன் மகனை உயிருடன் ஒப்படைப்பதாக மிரட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த மைதிலி உடனடியாக காவல்துறையில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுவன் மற்றும் ஆட்டோ ஓட்டுநரையும் பத்திரமாக மீட்டனர். மேலும் சிறுவனை கடத்தியது தொடர்பாக முன்னாள் காவலர் செந்தில் குமார் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். செந்தில் குமார் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்த நிலையில் அவர் உயர் அதிகாரிகளால் பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

செந்தில் குமார் போலீசாரிடம் அளித்த தகவலின்படி தென்காசியைச் சேர்ந்த வீரமணி, காளிராஜ், நெல்லையைச் சேர்ந்த அப்துல் காதர் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திய நிலையில், சிறுவன் கடத்தப்பட்டதில் தூத்துகுடியைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியின் முன்னாள் மனைவி சூர்யா மற்றும் பிரபல ரௌடி மகாராஜா ஆகிய இரண்டு பேருக்கும் தொடர்பு இருப்பதைக் கண்டுப்பிடித்தனர். 

இதனைத் தொடர்ந்து வழக்கின் முக்கிய குற்றவாளியான சூர்யா மற்றும் மகாராஜா இருவரையும் பிடிக்க 4 தனிப்படை அமைத்து தீவிரமாக தேடிவந்தனர். இந்த நிலையில் குஜராத்தில் தங்கிருந்த சூர்யா தற்கொலை செய்துக்கொண்டதாக  தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து சூர்யாவின் தாய் தனது மகள் குஜராத்தில் தற்கொலை செய்துகொண்டதை உறுதி செய்யுமாறும், மேலும் தனது மகளை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

இதனிடையே, தலைமறைவாக உள்ள ரௌடி மகாராஜா பிடிபடாத நிலையில் தனிப்படை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மதுரையை உலுக்கிய இந்தச் சமபவத்தில் முக்கிய குற்றவாளி சூர்யா தற்கொலை செய்து கொண்டதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்