Skip to main content

கோடிகளை குவித்த சேலம் மாநகராட்சி மாஜி பொறியாளர்; ஓய்வுக்கு முதல் நாளில் அதிரடி பணியிடை நீக்கம்!  

Published on 09/02/2023 | Edited on 09/02/2023

 

Ex-engineer Salem Corporation suspended for adding crore assets excess income

 

வருமானத்துக்கு அதிகமாக கோடிக்கணக்கில் சொத்துகளை வாரிச் சுருட்டிய புகாரின் பேரில், சேலம் மாநகராட்சி முன்னாள் பொறியாளர் அசோகன், ஓய்வு பெறுவதற்கு முதல் நாள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.     

 

சேலம் பொன்னம்மாபேட்டையைச் சேர்ந்தவர் அசோகன் (60). இவர், சேலம் மாநகராட்சியில் கடந்த 2021ம் ஆண்டு மாநகர பொறியாளராகப்  பணியாற்றி வந்தார். திடீரென்று அவர் மீது ஊழல் புகார் கிளம்பியது. இதையடுத்து, அவரை உடனடியாக பணியில் இருந்து விடுவித்த அப்போதைய நகராட்சி நிர்வாக ஆணையர் ஷிவ்தாஸ் மீனா, ஆறு மாத காலமாக வேறு இடத்தில் பணியில் சேர விடாமல் காத்திருப்போர் பட்டியலில் வைத்திருந்தார்.     

 

இந்த நிலையில் அசோகன், அவருடைய மனைவியும் மாநகராட்சி முன்னாள் கவுன்சிலருமான பரிவாதினி, தாயார் பாக்கியம் ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளை குவித்தகாக, சேலம் மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் அவர்கள் மீது வழக்குப்பதிவு  செய்தனர்.     அதாவது, கடந்த 2013ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை செக் பீரியடு ஆக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்தக் காலகட்டத்தில்  அசோகன் மற்றும் குடும்பத்தாரின் வருமானம் 3.30 கோடி ரூபாய் வரை அதிகரித்துள்ளது. இதில் மாதச் சம்பளம், சொத்துகள் விற்பனை, வாடகை  வருமானம் மற்றும் இதர இனங்கள் மூலமாக 1.22 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.  

 

இதே காலகட்டத்தில் உணவு, வீட்டு பராமரிப்பு, மருத்துவம் மற்றும் கல்விச் செலவு, இதர இனங்கள் மூலமாக 27.80 லட்சம் ரூபாய் செலவுகள் ஆகியிருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அசோகன் மற்றும் அவருடைய குடும்பத்தார் வருமானத்துக்கு அதிகமாக 2.20 கோடி ரூபாய்  சேர்த்துள்ளது ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இதற்கிடையே, கடந்த 2022ம் ஆண்டு, சேலம் நகர கூட்டுறவு வங்கியில் அசோகனுக்குச் சொந்தமான லாக்கரை திறந்தும் சோதனை  நடத்தப்பட்டது. அதில் 45 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 130 பவுன் நகைகள் இருப்பது தெரிய வந்தது. இது தவிர அசோகன் அவருடைய உறவினர்கள், பினாமிகள் பெயரில் நீச்சல் பயிற்சி மையம், உடற்பயிற்சிக்கூடம், 100க்கும் மேற்பட்ட வீடுகள்,  ஏற்காட்டில் நிலங்களை வாங்கிப் போட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.    

 

இந்நிலையில், ஆறு மாத காத்திருப்புக்குப் பிறகு நெல்லை மாநகராட்சியில் மாநகர பொறியாளராகப் பணியில் சேர்ந்தார். அதன்பிறகு கடந்த ஆண்டு இறுதியில் தூத்துக்குடி மாநகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.  பொறியாளர் அசோகன், 2023ம் ஆண்டு ஜன. 31ம் தேதி ஓய்வு பெற இருந்த நிலையில், அவர் மீதான வழக்கு விசாரணை முடிவடையாமல் இருந்ததால் அவரை பணியில் இருந்து ஓய்வுபெற அனுமதிக்கக் கூடாது என்றும், துறை ரீதியாக என்.ஓ.சி. சான்றிதழ் வழங்கக்கூடாது என்றும் ஊழல் தடுப்புப்பிரிவு தரப்பில் அரசிடம் முறையிடப்பட்டது.  

 

இதையடுத்து அசோகனை கடந்த ஜன. 30ம் தேதி அதிரடியாக பணியிடைநீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது, பணி  ஓய்வுபெற ஒரு நாள் இருந்த நிலையில் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக சேலம் மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு காவல்துறை தரப்பில் கேட்டபோது, ''பொறியாளர் அசோகன் மீதான வழக்கு  விசாரணை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. அவருடைய சொத்துகளை மதிப்பீடு செய்யும் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது.  விரைவில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். அவர் மீதான வழக்கு விசாரணை முடிவடையாததால் அவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்'' என்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காதலன் முகத்தில் ஆசிட் அடித்த காதலி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Girlfriend threw toilet cleaning liquid on her boyfriend face

உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில் சிகிடாவுனி கிராமத்தை சேர்ந்தவர்  ராகேஷ் பிந்த்(26). இவரும் அதைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண்ணும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ராகேஷ் பிந்துக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அப்போது  கழிவறை சுத்தம் செய்யும் திரவத்தோடு(ஆசிட்)  நிச்சயதார்த்தம் நடக்கும் இடத்திற்கு வந்த லட்சுமி தனது கையில் வைத்திருந்த திரவத்தை ராகேஷ் பிந்து முகத்தில் வீசினார். இதில் அவர் முகம் மற்றும் உடலில் உள்ள சில இடங்களில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதனிடையே அங்கிருந்தவர்கள் லட்சுமியைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தன்னைக் காதலித்து விட்டு வேறொரு பெண்ணை நிச்சயதார்த்தம் செய்ததால் திரவத்தை வீசியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து லட்சுமியைக் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.