Skip to main content

'ஆதாரத்தோடு வந்திருக்கிறோம்'-ஸ்ரீமதியின் தாயார் போலீசில் பரபரப்பு புகார்

Published on 22/05/2024 | Edited on 22/05/2024
 'Evidence has been found'- Smt.'s mother complains about savukku sankar

கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம்-செல்வி தம்பதியரின் மகள் ஸ்ரீமதி கள்ளக்குறிச்சி அருகே கனியாமூரிலுள்ள சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12ஆம் தேதி மர்மமான முறையில் மாடியில் இருந்து விழுந்து மரணம் அடைந்தார். ஸ்ரீமதி வழக்கு என தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்ட இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில், இந்த வழக்கில் ஸ்ரீமதியின் தாயார் தரப்பில் வழக்கறிஞர் ப.பா.மோகன் ஆஜராகியுள்ளார்.

இந்நிலையில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள யூடியூபர் சவுக்கு சங்கர் தன்னுடைய மகளின் மரணம் குறித்து அவதூறாக பேசியதாக ஸ்ரீமதியின் தாயார் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் அளித்துள்ளார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த செல்வி, ''சவுக்கு சங்கர் மேல புகார் கொடுக்க வந்திருக்கிறோம். எதற்கு என்றால் ஆரம்பத்தில் எல்லாருக்குமே தெரியும் பாப்பாவை (ஸ்ரீமதி) பள்ளி தரப்புதான் கொலை செய்திருந்தார்கள். அந்த பள்ளிக்கூடத்தில் பிரின்ஸ்பால் ரூமில் எவ்வளவோ காண்டம்ஸ் இருந்தது. எல்லாம் வெளிநாட்டு காண்டம். அதற்கு இதுவரைக்கும் காவல்துறை எந்தவித விசாரணையும் பண்ணவில்லை. ஒரு பள்ளிக்கு வெளிநாட்டு காண்டம் ஏன் வந்தது? எதற்கு வந்தது? என்ற காரணம் இந்த நாள் வரைக்கும் தெரியவில்லை.

ஸ்ரீமதியை பாலியல் வன்கொடுமை செய்துதான் கொலை செய்தார்கள் என்பது எங்களுடைய குற்றச்சாட்டாக இருக்கிறது. ஸ்ரீமதி 17 வயதுக்கு உட்பட்டவர். அதற்கு போக்சோ வழக்குதான் பதிவு செய்ய வேண்டும். ஆனால் காவல்துறை போக்சோ வழக்கும் பதிவு செய்யாமல் ஒருதலைபட்சமாக நடந்து கொண்டார்கள். இப்பொழுது பள்ளிக்கூடத்தில் இருந்த காண்டம்ஸ், இவங்க மேல் இருக்கக்கூடிய தப்பையெல்லாம் மறைக்க வேண்டும் என்பதற்காக சவுக்கு சங்கரை விலை கொடுத்து வாங்கி பள்ளி நிர்வாகம் என்னை பற்றியும், என் பொண்ணைப் பற்றியும் பல அவதூறுகளை பரப்பி எத்தனையோ சேனலில் சவுக்கு சங்கர் பேட்டி கொடுத்திருந்தார்.

மக்கள் யாருமே சவுக்கு சங்கரை  நம்பவில்லை. ஸ்ரீ மதியை பற்றி அவதூறாக பேசும்போதும் சரி, என்னை பற்றி அவதூறாக பேசும்போதும் சரி நீ பணம் வாங்கிக் கொண்டுதான் பேசுற என்கின்ற குற்றச்சாட்டை சவுக்கு சங்கர் மேல் வைத்தார்கள். ஆனால் அதற்கான ஆதாரம் இருக்கா என்று பார்த்தால் நம்மிடம் இவ்வளவு நாள் ஆதாரம் இல்லாமல் இருந்தது. சமீபத்தில் தனியார் தொலைக்காட்சியில் சவுக்கு சங்கருடைய உதவியாளராக இருந்த பிரதீப் என்ற நபர் பேட்டி கொடுத்திருக்கிறார். அந்த பேட்டியில் சவுக்கு சங்கர் கள்ளக்குறிச்சி வழக்கில் பணம் வாங்கிக் கொண்டுதான் பேசினார் என்ற உண்மையை சமீபத்தில் வெளியிட்டு இருக்கிறார். காவல்துறை ஸ்ரீமதி வழக்கு என்றாலே ஒருதலைப்பட்சமான விசாரணை செய்கிறார்கள். யாராவது ஒரு சில யூடியூபர்கள் தனக்கு தெரிந்த உண்மையை இப்படி எல்லாம் இருக்கலாம் என்று சொல்கின்ற ஒவ்வொரு வீடியோவும் தேடிப் போய் டெலிட் செய்கிறார்கள்'' என்றார்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

கள்ளக்குறிச்சி விவகாரம்; முக்கிய குற்றவாளி கைது!

Published on 21/06/2024 | Edited on 21/06/2024
kallakurichu issue; The main culprit arrested!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது. இதுவரையில் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 27 பேரும், சேலம் மருத்துவமனையில் 15 பேரும், விழுப்புரம் மருத்துவமனையில் 4 பேரும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 3 பேர் என மொத்தம் 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 4 பெண்களும் அடங்குவர். மேலும் 89 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே தமிழகம் முழுவதும் காவல்துறையினர் கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், “கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 3 பேர் செயற்கை சுவாச சிகிச்சையிலிருந்து மீண்டு நலம் பெற்றுள்ளனர். மேலும் 18 பேர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவிலும், 14 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவிலும் உள்ளனர். கண் பாதிப்பு ஏற்பட்டவர்களை கண்காணிக்கத் தனி மருத்துவக்குழு அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்திருந்தார். 

kallakurichu issue; The main culprit arrested!

இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் மாதேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கள்ளச்சாராயத்தில் கலக்கப்பட்ட மெத்தனால் விநியோகித்ததாகக் கூறப்படுகிறது. மாதேஷிடம் இருந்து மெத்தனால் வாங்கிய சின்னத்துரை அதனை கோவிந்த ராஜுக்கு விற்பனை செய்துள்ளார். அதே சமயம் இந்தக் கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரத்தில் தொடர்புடைய ஜோசஃப் ராஜா என்பவரும் கைது செய்யபட்டுள்ளார். புதுச்சேரியில் இருந்து சாராயம் மற்றும் மூலப்பொருட்களை ஜோசப் ராஜா வாங்கி விநியோகம் செய்பவர் என போலீஸ் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்ட ஜோசப் ராஜா அளிக்கும் தகவலின் அடிப்படையில் இந்த வழக்கில் மேலும் பலர் கைதாக வாய்ப்பு உள்ளதாக காவல்துறை தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

Next Story

கள்ளக்குறிச்சி விவகாரம்; சட்டப்பேரவையில் கடும் அமளி! 

Published on 21/06/2024 | Edited on 21/06/2024
There is a lot of tension in the Legislative Assembly

சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் தமிழக சட்டசபை பேரவைக் கூட்டம் நேற்று (20.06.2024) தொடங்கியது. கூட்டத் தொடரின் முதல் நாளான நேற்று, மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அப்போது பேசிய சபாநாயகர் அப்பாவு, “துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல். கள்ளச்சாராய விவகாரத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்குவதாகத் தமிழ்நாடு முதல்வர் தெரிவித்திருக்கிறார். உடல்நலம் பாதிக்கப்பட்டோருக்கு உடனே சிகிச்சை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்” எனத் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து சட்டப்பேரவை கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான இன்று (21.06.2024) காலை இயற்கை வளங்கள் துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் மீதான மானியக் கோரிக்கைகளின் மீது விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து மாலையில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை (உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை) (சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை), மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை ஆகிய துறையின் மீதான மானியக் கோரிக்கைகளின் மீது விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெற உள்ளது. 

There is a lot of tension in the Legislative Assembly

இந்நிலையில் கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாகச் சட்டப்பேரவையில் அதிமுக, பாமக மற்றும் பாஜக ஆகிய எதிர்க்கட்சிகள் எம்.எல்.ஏ.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். பேரவைத் தலைவர் இருக்கை முன்பு அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குண்டுக்கட்டாகச் சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். தர்ணாவில் ஈடுபட்டவர்கள் ‘பதவி விலகுங்கள் ஸ்டாலின்’ என்று எழுதப்பட்ட காகிதத்தைக் காண்பித்து முழக்கமிட்டனர்.

முன்னதாகக் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்திற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் அதிமுக எம்எல்ஏக்கள் கருப்புச் சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வருகை தந்தனர். அதன்படி சட்டமன்றத்திற்கு கருப்புச் சட்டை அணிந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, துனைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் வருகை தந்தது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் பாமக சட்டமன்ற உறுப்பினர்களும் கருப்பு சட்டை அணிந்து வந்ததும் கவனிக்கத்தக்கது.