Skip to main content

தப்பிச்சா விட்ருவோமா? - கைதியை வளைத்த மதுரை சிறைத்துறை!  

Published on 22/06/2022 | Edited on 22/06/2022

 

Escaped madurai prisoner arrested in tiruppur

 

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கைதியான ஆதி என்ற அருண்குமார், கடந்த 16-ஆம் தேதி மதுரை மத்திய சிறையின் வெளி வளாகத்தில் தோட்டப்பணியில் இருந்தபோது, சிறைக்காவலர் பழனிக்குமார் கண்ணில் மண்ணைத்தூவி விட்டு தப்பினார். சிறைக்காவலர் பழனிக்குமார் சஸ்பென்ட் செய்யப்பட்டு துறை ரீதியான நடவடிக்கைக்கு ஆளானார்.

 

கைதி ஆதி தப்பியோடியது குறித்து மதுரை கரிமேடு காவல்நிலையத்தில் புகாரளித்த சிறைத்துறை நிர்வாகம், சிறைத்துறை சார்பில் 5 பேர் கொண்ட குழுக்களை அமைத்து  ‘ஆதி எங்கே?’ எனத் தேடுதல் வேட்டை நடத்தியது. தப்பித்த ஆறாவது நாளில், திருப்பூரில் ஆதி பிடிபட்டுள்ளார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு மீண்டும் மதுரை மத்திய சிறையில் ஆதியை அடைத்துள்ளனர். 

 

கைதி ஆதி பிடிபட்டது எப்படி?


ஆதியின் மனைவி மற்றும் துணைவி என அவனுக்கு நெருக்கமான வட்டத்தைக் கண்காணித்து வந்தது சிறைத்துறை டீம். கரூரில் ரவுடி கும்பல் ஒன்று ஆதியின் நட்பு வட்டத்தில் இருந்ததால், அவர்களும் கவனிப்பில் இருந்தனர். கோயம்புத்தூர் சிறையில் ஒரே பிளாக்கில் இருந்த கொலை வழக்கு கைதியான காதர் பாய் என்பவரிடம் ஆதி நெருங்கிப் பழகியதும், அவர் விடுதலையாகி தற்போது திருப்பூரில் வசிப்பதும் தெரியவர, சிறைத்துறை டீம் அங்கும் அலர்ட்டானது. 

 

Escaped madurai prisoner arrested in tiruppur

 

‘எங்கு சுற்றினாலும் கையிலிருக்கும் பணம் செலவானபிறகு, காதர் பாயைப் பார்ப்பதற்கு ஆதி நிச்சயம் திருப்பூர் வருவான்’ என ஸ்கெட்ச் போட்டுக் காத்திருந்தனர், டீமில் இடம்பெற்ற சிறை உதவி அலுவலர் பழனி மற்றும் முதன்மைத் தலைமைக் காவலர் சரவணன் உள்ளிட்டோர். அவர்கள் நினைத்ததுபோலவே, 21-ஆம் தேதி காதர் பாயைப் பார்ப்பதற்கு ஆதி வர, சுற்றிவளைத்துக் கொத்தாக அள்ளினர்.  


ஆயுள் தண்டனைக் கைதி ஆதியைத் தப்பவிட்டு சேறு பூசிக்கொண்ட மதுரை மத்திய சிறை நிர்வாகத்தின் மீதான கறை, அவரைப் பிடித்ததன் மூலம் கழுவப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“டீ குடிப்பவன் கூட அவரைத் திரும்பி பார்க்கவில்லை” - வேட்பாளர் சரவணனை ஆதரித்து செல்லூர் ராஜு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Sellur Raju supporting candidate Saravanan and critcizing amitshah

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தி வருகின்றன.

அந்த வகையில், மதுரை மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பாக மருத்துவர் சரவணன் போட்டியிடுகிறார். இந்த நிலையில், மதுரையில் வசிக்கும் வட மாநிலத்தவர்களிடம் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வாக்கு சேகரித்தார். அப்போது, ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் அணிவிக்கும் தலைப்பாகையோடு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, வேட்பாளர் சரவணன் ஆகியோர் வாக்கு சேகரித்தனர்.

இதனைத் தொடர்ந்து, செல்லூர் ராஜு, அதிமுக வேட்பாளர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது செல்லூர் ராஜுவிடம், “அதிமுகவும், திமுகவும் மாறி மாறி ஊழல் செய்துவிட்டதாக அமித்ஷா கூறியிருக்கிறாரே? எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த செல்லூர் ராஜு, “அமித்ஷா ஏதோ பேச வேண்டும் என்பது போல் பேசுகிறார். திராவிட இயக்கங்கள் 1967-ல் ஆட்சிக்கு வந்தது. அன்றைக்கு மத்தியில் ஆளுகின்ற காங்கிரஸ் கட்சி, தமிழ்நாட்டு மக்களை எலிக்கறி சாப்பிட வேண்டும் என்றும் ஒரு வாரத்தில் ஒரு நாள் விரதம் இருக்க வேண்டும் என்றும் கூறினார்கள். மாணவர்கள் படிக்கின்ற விடுதிகளில் கூட மாணவர்களுக்கு ஒரு வேளை சாப்பாடு கிடையாது. ஏனென்றால் உணவு பற்றாக்குறை.

இந்த மாதிரி நிலைமை எல்லாம் அப்போது இருந்தது. மொழியாலும், கலாச்சாரத்தாலும் தமிழ்நாடு தனித்துவம் பெற்றதன் அடிப்படையில், பேரறிஞர் அண்ணா தான் தமிழ்நாடு என்று பெயர் வைத்தார். தமிழ்நாடு என்று பெயர் வைத்ததற்கு பிறகு திராவிட இயக்கங்கள் தான் தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறது. இந்த திராவிட இயக்கங்கள் தான் ஏழை எளிய மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் செயல்படுத்துகிற திட்டங்களைத் தான் பிற மாநிலங்களில் பின்பற்றுகிறார்கள். அம்மா உணவகம் ஆந்திரா, தெலுங்கானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது

தமிழ்நாட்டில் தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. சிறு, குறு தொழில்களில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முதல் மாநிலமாக இருக்கிறது. இங்கே வருகிற நிதியில் தான் குஜராத், பீகார் போன்ற மாநிலங்களுக்கு நிதி தருகிறார்கள். எங்கள் ஆட்சியில் ஊழல் நடக்கவில்லை. ஊழலுக்காக திமுக ஆட்சி தான் கலைக்கப்பட்டது. அவர் உண்மையாக எங்களை பற்றி குறை சொல்லவில்லை. தி.மு.க பற்றி குறை சொல்ல வேண்டும் என்பதற்காக இப்படி மாற்றி சொல்லி இருக்கிறார். மதுரையில் அமித்ஷா ரோட் ஷோ நடத்தினார். ஆனால் பாவம் அங்கு டீ குடிப்பவன் கூட அவரைத் திரும்பி பார்க்கவில்லை. அவர் மட்டுமே கை காட்டிக் கொண்டு போனார்” என்று பேசினார்.

Next Story

‘பகல் 12 முதல் 3 வரை வெளியே வர வேண்டாம்’ - மதுரை மக்களுக்கு அறிவுறுத்தல்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Advice to Madurai people Don't come out between 12 noon and 3 am

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. 

இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மதுரை மாவட்ட மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “வெயில் அதிகரிப்பு காரணமாக மதுரையில் பகல் 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம். வெயில் தாக்கம் மற்றும் அனல்காற்று அதிகமாக வீசுவதால் மக்கள் முன்னெச்சரிக்கயாக இருக்க வேண்டும்.

அதாவது, வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள் கால்நடைகளை அனுமதிக்கக் கூடாது. தாகம் எடுக்காவிட்டாலும் போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். பழச்சாறுகள் அருந்த வேண்டும். அவசர கால தேவைகளுக்கு 1077 மற்றும் 1070 ஆகிய இலவச அழைப்பு எண்களை தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவித்தார்.