Skip to main content

சட்டவிரோத மது விற்பனை; பொதுமக்கள் சாலை மறியல்

Published on 30/05/2023 | Edited on 30/05/2023

 

erode rasampalayam area old couple related incident

 

ஈரோடு மாநகராட்சி, 2வது மண்டலம், 9வது வார்டுக்கு உட்பட்ட ராசாம்பாளையம், எஸ்.எஸ்.பி நகரில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தப் பகுதியில் டாஸ்மாக் கடை இல்லை. இந்த பகுதியில் ஒரு வயதான தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்கள் பல வருடமாக அந்தப் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் வீட்டுக்கு மது அருந்த வருபவர்கள் மது அருந்திவிட்டு அக்கம் பக்கம் வீட்டு வாசலில் அலங்கோலமான நிலையில் படுத்துக் கிடக்கின்றனர். சிலர் வாந்தியும் எடுக்கின்றனர். இதனால் அக்கம் பக்கத்தில் வசிக்கும் பெண்கள், குழந்தைகள் வெளியே நடமாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

 

இதனால் மது விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்த பகுதி மக்கள் ஏற்கனவே இது குறித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. நேற்று அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு அந்த வயதான தம்பதி வீட்டுக்கு சென்று இனி மது விற்பனையில் ஈடுபடக்கூடாது என்று கூறினர். ஆனாலும் இன்றும் அவர்கள் மது விற்பனையில் ஈடுபட்டதை தொடர்ந்து ஆத்திரமடைந்த 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று காலை எஸ்.பி.பி நகரில் வந்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

 

இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் போலீசாருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்பகுதி மக்கள் கூறும் போது, "நாங்கள் இங்கு 500 குடும்பங்களுடன் பல வருடமாக வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் குடியிருப்புகள் நிறைந்த மையப்பகுதியில் வயதான தம்பதியினர் பல வருடங்களாகவே சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு மது அருந்த வரும் குடிமகன்களால் நாங்கள் பல்வேறு பிரச்சினைகளை தினமும் சந்தித்து வருகிறோம். குறிப்பாக எங்கள் பகுதி பெண்கள், குழந்தைகள் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். மது விற்பனையை தடுத்து நிறுத்த வலியுறுத்தி ஏற்கனவே பலமுறை மனு அளித்து விட்டோம். எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. எனவே உடனடியாக மது விற்பனையை தடுத்து நிறுத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

 

இதனையடுத்து வீரப்பன்சத்திரம் இன்ஸ்பெக்டர் சண்முகம் மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். எனவே நீங்கள் மறியல் போராட்டத்தை கைவிடுங்கள் என்று கூறினார். இதனை ஏற்று பொதுமக்கள் தங்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டனர். சுமார் 30 நிமிடங்களாக நீடித்த மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் அந்த வயதான தம்பதியர் வீட்டுக்கு சென்று சோதனை செய்தனர். வீட்டில் இருந்த 7 மது பாட்டில்களை பறிமுதல் செய்து அங்கிருந்த மூதாட்டியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அடர்ந்த வனப் பகுதியில் 108 ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
girl child was born in the 108 ambulance near Anthiyur in a thick forest area at night

ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுக்கா, ஓசூர் அருகே சின்ன செங்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சரசு என்கிற சரசா (27). சரசு நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு 9:45 மணியளவில் சரசுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் தேவர்மலையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் குழுவினருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று சரசை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது மணியாச்சி பள்ளம் என்ற அடர்ந்த வனப் பகுதியில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது சரசுக்கு பிரசவ வலி அதிகரித்தது. நிலைமையைப் புரிந்து கொண்ட மருத்துவ குழுவினர் ஆம்புலன்ஸை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு சரசுக்கு பிரசவம் பார்க்க தொடங்கினர். இதில் சரசுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ளனர். இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  108 மருத்துவ குழுவினருக்கு சரசு மற்றும் அவரது உறவினர்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்