Skip to main content

டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவுவதற்கு தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதிகள் இல்லாததே முக்கிய காரணம் -ஈ.ஆர். ஈஸ்வரன்

Published on 24/10/2018 | Edited on 24/10/2018
eswaran


 


தமிழக சுகாதாரத்துறை துரிதமாக செயல்பட்டு காய்ச்சல் பரவுவதை கட்டுப்படுத்த வேண்டும். மேலும் தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலால் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருவதோடு மட்டுமல்லாமல் உயிரிழப்பும் ஏற்பட தொடங்கியிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் பரவுவதை தடுப்பதற்கு தமிழக அரசும், சுகாதாரத் துறையும் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரமாக எடுக்காமல் மெத்தனமாக செயல்பட்டதால்தான் காய்ச்சல் வேகமாக பரவி பாதிப்பு அதிகமாக ஏற்படும் சூழல் உருவாகியிருக்கிறது. கடந்த ஆண்டு குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் முதியவர்கள் உள்ளிட்ட பலபேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததை நாம் அறிவோம். 
 

கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் உயிரிழப்பு நிகழ்ந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் தமிழக சுகாதாரத் துறை செயல்பட்டிருந்தால் டெங்கு காய்ச்சல் பரவுவதை ஓரளவு கட்டுப்படுத்தி உயிரிழப்பை தடுத்திருக்க முடியும். தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதிகள் இல்லாமல் காலியாக இருப்பதினால் எந்தவொரு பணியையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் தமிழக அரசால் துரிதமாக செய்ய முடியவில்லை. மாநகராட்சி முதல் ஊராட்சி வரை அனைத்து பகுதிகளிலும் குப்பைகள் மற்றும் சாக்கடைகளை சரிவர சுத்தம் செய்யாமல் மாதக்கணக்கில் அப்படியே கிடப்பதினால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டிருக்கிறது. இதனால் தமிழகத்தின் சுகாதாரம் கேள்விக்குறியாகி டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலுக்கு தமிழக மக்கள் இரையாகும் சூழ்நிலையை தமிழகத்தை ஆளும் எடப்பாடி பழனிச்சாமி அரசு உருவாக்கி தந்திருக்கிறது. வீட்டை விட்டு வெளியே போனாலே டெங்கு வந்துவிடுமோ என்ற அச்ச உணர்வு மக்கள் மத்தியில் உருவாகியிருக்கிறது. எனவே தமிழக அரசும், தமிழக சுகாதாரத் துறையும் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் பரவுவதை கட்டுப்படுத்தி உயிரிழப்பை தடுக்க முன்வர வேண்டும்." என கூறியிருக்கிறார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"பஞ்சு ஏற்றுமதியை நிறுத்தினால் மட்டும்தான் ஜவுளித்துறையை காப்பாற்ற முடியும்"- ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. கோரிக்கை! 

Published on 16/05/2022 | Edited on 16/05/2022

 

"Only by stopping cotton exports can the textile sector be saved" - ER Eswaran MLA Request!

 

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ஈ.ஆர்.ஈஸ்வரன் இன்று (16/05/2022) வெளியிட்டுள்ள அறிக்கையில், "நூல் விலை உயர்வால் தமிழகத்தில் ஜவுளித் துறையை சார்ந்த அனைவரும் செய்வதறியாமல் தடுமாறி கொண்டிருக்கிறார்கள். லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயத்தை தமிழகம் எதிர்கொண்டு இருக்கிறது. ஆறு மாதங்களுக்கு மேலாக, இதே சூழ்நிலை நீடிக்கின்ற நிலையிலும் ஒன்றிய அரசு இதைப் பற்றி சிறிதும் கவலைப்படவில்லை. 

 

உடனடியாக பஞ்சு ஏற்றுமதியை நிறுத்தினால் மட்டும்தான் ஜவுளித்துறையை காப்பாற்ற முடியும். பாதிப்பின் தீவிரத்தை உணராமல் ஒன்றிய அரசு அமைதி காப்பது வேதனையை அதிகப்படுத்துகிறது. குஜராத், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் பெருமளவில் பஞ்சு பதுக்கப்பட்டிருக்கின்ற காரணத்தினால் பயன்பாட்டுக்கு வராமல் நூல் விலை உயர்வுக்கு காரணமாக இருக்கிறது. அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து பஞ்சு எடுக்கப்பட்டது தான் இந்த கொடுமைக்கு காரணமாக இருக்கிறது. இந்த சூழ்நிலையில் அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக மேலும் தங்களை தாங்களே நஷ்டப்படுத்தி கொண்டு திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் இறங்கி இருக்கிறார்கள். 

 

தமிழக முதலமைச்சரும் தொடர்ந்து மத்திய அரசுக்கும், பிரதமருக்கும் தொடர்ந்து கடிதங்களை எழுதிக் கொண்டிருக்கிறார். தொழில் துறையை சார்ந்தவர்கள் ஒன்றிய அமைச்சரை சந்தித்து முறையீடுகளை செய்து கொண்டிருக்கிறார்கள். இவ்வளவுக்கு அப்புறமும் ஒன்றிய அரசு கண்டு கொள்வதாக இல்லை. தமிழகத்தினுடைய பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் தமிழக ஜவுளி துறையின் உண்மை நிலையை ஒன்றிய அரசுக்கு எடுத்து செல்ல வேண்டும். இது இன்றியமையாத ஆக்கப்பூர்வமான தமிழகத்தின் தேவை. நூல் விலை விஷயத்தில் கருத்துக்களை கூறாமல் அமைதி காப்பதும் ஏற்புடையதல்ல. உடனடியாக உங்கள் முயற்சிகளை தொடங்க வேண்டுமென்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்". இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

Next Story

“முதலமைச்சருக்கும் துணை முதலமைச்சருக்குமான உறவு சுமூகமாக இல்லை என்பதை காட்டுகிறது” - ஈஸ்வரன்

Published on 23/02/2021 | Edited on 23/02/2021

 

It shows that the relationship between the Chief Minister and the Deputy Chief Minister is not smooth says Eeswaran

 

"வெறும் சம்பிரதாயத்திற்கு வாசிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையாக இடைக்கால நிதிநிலை அறிக்கை இருக்கிறது" என கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில், "2011-ஆம் ஆண்டிலே 1 லட்சம் கோடியாக இருந்த தமிழக கடனை 5 லட்சத்து 70 ஆயிரம் கோடியாக உயர்த்தி தமிழக மக்களைக் கடனாளிகளாக மாற்றியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அடுத்த நிதிநிலை ஆண்டில் கடன் வாங்க தேவை இருக்காது என்று அறிவித்திருப்பது அமைய இருக்கின்ற புதிய ஆட்சியின் மீதுள்ள நம்பிக்கையா? 


தமிழகத்தின் வருமானம் 18 சதவீதம் குறையும் என்று அறிவித்துவிட்டு அரசினுடைய விளம்பரங்களுக்காக நூற்றுக்கணக்கான கோடியை தேர்தலை குறிவைத்துச் செலவு செய்திருப்பது ஏற்புடையதல்ல. பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பதற்காக தமிழக அரசின் மதிப்புக்கூட்டு வரி குறைக்கப்படும் என்ற மக்களின் நம்பிக்கையைப் பொய்யாக்கி இருக்கிறார்கள். பெட்ரோல், டீசல் மீதான வரி வருங்காலத்தில் உயரும் என்று சொல்லியிருப்பது வேதனையிலும் வேதனை.

 

காலாவதியாகப் போகிற அரசு போகிற போக்கில் 6,600 கோடியில் கோவையில் மெட்ரோ ரயில் என்று அறிவித்திருப்பது தேர்தலை குறிவைத்து நடத்தியிருக்கின்ற நாடகம். கவலையும் கஷ்டமும் வேதனையும் தவிர தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் மிஞ்சி இருப்பது எதுவுமில்லை. பலவிதமான சலுகைகள் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்திருந்த நிலையில், இடைக்கால நிதிநிலை அறிக்கையில் எதுவுமே இல்லாதது முதலமைச்சருக்கும் துணை முதலமைச்சருக்குமான உறவு சுமூகமாக இல்லை என்பதைக் காட்டுகிறது. எதிர்பார்த்த சலுகை அறிவிப்புகள் எல்லாம் 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவிப்பதற்காகக் காத்திருக்கிறதா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.