Skip to main content

“இன்றளவும் ஜாதிய தீண்டாமை சம்பவங்கள் நிகழ்வது வேதனைக்குரியது” - இ.பி.எஸ்

Published on 15/06/2024 | Edited on 15/06/2024
E.P.S says Even today incidents of caste-related untouchability are painful

நெல்லை மாநகர் பகுதியில் உள்ள ரெட்டியார்பட்டியில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பாளையங்கோட்டைப் பகுதியில் வசிக்கும் இருவேறு சமூகங்களைச் சேர்ந்த ஆண், பெண் இருவர் சாதி மறுப்பு திருமணம் செய்துகொள்ள வேண்டி இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்குள் தஞ்சம் அடைந்தனர். இந்நிலையில் நேற்று முன் தினம் (13-06-24) அங்கிருந்த கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள், காதலர்கள் இருவருக்கும் சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்தனர் என்று கூறப்படுகிறது.

இதனையடுத்து, பெண்ணைப் பல இடங்களில் தேடிவந்த பெண் வீட்டார் பெண் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் இருப்பது தெரிந்து அங்கு வந்து ரகளையில் ஈடுபட்டனர். இரண்டு கார்களில் வந்த 30க்கும் மேற்பட்டோர் பெண்ணை அழைத்துச் செல்ல வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்ட போதும் பெண்ணை அனுப்ப அங்குள்ள நிர்வாகிகள் அனுமதி மறுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் கதவுகளை உடைத்து அத்துமீறி அலுவலகத்திற்குள் நுழைந்து அங்குள்ள பொருட்கள், இருக்கை உள்ளிட்டவையை அடித்துச் சேதப்படுத்தினர். இந்தச் சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தைச் சூறையாடிய குறிப்பிட்ட சாதி சங்கத்தைச் சேர்ந்த மாநில இளைஞரணி அமைப்பு செயலாளர் பந்தல்ராஜா, 5 பெண்கள் உள்பட 13 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

E.P.S says Even today incidents of caste-related untouchability are painful

இதனிடையே, கம்யூனிஸ்ட் அலுவலகத்தை சூறையாடிய சம்பவத்திற்கு அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ‘ஜாதி மறுப்பு திருமணம் நடத்தியதற்காக திருநெல்வேலி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் சூறையாடப்பட்டுள்ள சம்பவத்திற்கு எனது கடும் கண்டனம். தேசிய கட்சி அங்கீகாரம் பெற்ற ஒரு கட்சியின் அலுவலகம் தாக்கப்படுவது என்பதே இந்தத் திமுக ஆட்சியில் சீர்கெட்ட சட்டம் ஒழுங்கிற்கு அத்தாட்சி. சுயமரியாதை இயக்கம் தழைத்தோங்கிய தமிழ்நாட்டில், இன்றளவும் ஜாதிய தீண்டாமையால் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வது வேதனைக்குரியது. நெல்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தைத் தாக்கியவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தி.மு.க அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

''இதையெல்லாம் என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை'-'நடிகை கஸ்தூரி பேட்டி

Published on 15/06/2024 | Edited on 15/06/2024
"I can't digest all this" - Actress Kasthuri interview

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவிப்பதில் தீவிரம் காட்டி வரும் நிலையில் அதிமுக இந்த இடைத்தேர்தலை புறக்கணிக்க முடிவெடுத்துள்ளது. இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் 'அராஜகம் என்றால் திமுக... திமுக என்றால் அராஜகம்...' திமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு கெட்டுள்ளது. விக்கிரவாண்டி தேர்தல் ஜனநாயக முறைப்படி முழு சுதந்திரமாக நடக்குமா என கேள்வி எழுந்துள்ளது. எனவே இந்த தேர்தலை புறக்கணிக்கிறோம். 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மக்களின் பேராதரவுடன் அதிமுக ஆட்சி மலர்வது உறுதி' எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகை கஸ்தூரியிடம் அதிமுக இடைத்தேர்தலில் புறக்கணித்திருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து அவர் பேசுகையில், ''எப்போதுமே தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் வந்தால் வரலாற்றுப்பூர்வமாக பார்த்தால் ஆளுங்கட்சிக்கு சார்பான ரிசல்ட் தான் வரும். அதில் யார் போட்டியிட்டாலும், எவ்வளவு வேலை செய்தாலும் அது ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் வரும். ஒருவேளை அதை மனதில் வைத்துக்கொண்டு அதிமுக இப்படி அறிவித்திருக்கிறார்களா என்பது தெரியவில்லை.

என்னைப் பொறுத்தவரை என்னுடைய தனிப்பட்ட கருத்து ஜனநாயக நாட்டில் தேர்தலை மக்கள் புறக்கணிக்கவே கூடாது. அதை நாம் ஒவ்வொரு முறையும் விழிப்புணர்வாக எல்லாருக்கும் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது ஒரு ஆகச்சிறந்த, தமிழ்நாட்டின் இரண்டாம் பெரிய கட்சியான அதிமுகவே தேர்தலை புறக்கணிப்பதில் எனக்கு ஏற்ப அல்ல. தொண்டர்கள் மட்டுமல்ல என்னைப் போன்ற ஜெயலலிதா விசுவாசிகளுக்கு இது வருத்தமாக தான் இருக்கிறது. இதை அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பது தான் என்னைப் போன்றவர்களின் கருத்து. அதிமுக ஒதுங்கிப்போவதன் மூலமாக பாஜக மட்டும் தான் திமுகவிற்கு எதிரான ஒரு கட்சி எனும் ஒரு பிம்பம் உருவாகிறது. திமுக இடத்தில் அதை அதிமுக எதிர்க்க வேண்டும் அப்பொழுது தான் அது எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் உருவாக்கிய அதிமுகவாக இருக்கும். அவர்கள் ஒதுங்கி போவது, பாஜக தான் பிரதான எதிர்க்கட்சி நாங்கள் மூன்றாவது இடத்திற்கு வந்துட்டோம் என அவர்களே வாக்குமூலம் கொடுப்பது போல உள்ளது. இதையெல்லாம் என்னால் ஜீரணிக்க முடியவில்லை'' என்றார்.

Next Story

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; அதிமுக எடுத்த அதிர்ச்சி முடிவு

Published on 15/06/2024 | Edited on 15/06/2024
 Vikravandi by-election; Shocking decision taken by AIADMK

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவிப்பதில் தீவிரம் காட்டி வரும் நிலையில் அதிரடி முடிவொன்றை எடுத்துள்ளது அதிமுக.

திமுக எம்எல்ஏ புகழேந்தி மறைந்ததைத் தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்க இருக்கும் சூழலில் தற்போது இடைத்தேர்தலுக்கான தேர்தல் தேதி வெளியிடப்பட்டது. இது தொடர்பான தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பில், 'ஜூன் 14ஆம் தேதி விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கும் எனவும், ஜூன் 21 வேட்புமனு தாக்கல் செய்ய கடைசிநாள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும். தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 13ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து இந்த இடைத்தேர்தலில் திமுக அன்னியூர் சிவாவை வேட்பாளராக அறிவித்துள்ளது. அதேபோல் நாம் தமிழர் கட்சி அபிநயா என்பவரை வேட்பாளராக அறிவித்துள்ளது. இடைத்தேர்தலை எப்போதும் புறக்கணிக்கும் பாமக கூட அன்புமணி என்பவரை வேட்பாளராக அறிவித்துள்ளது. இந்நிலையில் அதிமுக விக்கிரவாண்டி இடைத்தேர்தலைப் புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பொதுவாக தேர்தல் என்றால் உடனேயே முன்னதாக களத்தில் இறங்குவது அதிமுக தான். தேர்தலைக் கண்டு அஞ்சுகின்ற, பயப்படுகின்ற, அச்சப்படுகின்ற இயக்கம் அதிமுக அல்ல என்பதை அனைவரும் நன்கு அறிவர். தமிழகத்தில் அலங்கோல ஆட்சி நடத்திவரும் திமுகவினர் ஆளும் கட்சி என்ற அதிகார தோரணையோடு அரசு எந்திரங்களை முழுமையாக பயன்படுத்தி நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலில் பல்வேறு அராஜகங்களையும், தில்லுமுல்லுகளையும் செய்து பெற்றுள்ள வெற்றி என்பது மக்களின் ஏகோபித்த எண்ணங்களை முழுமையாக பிரதிபலிக்கும் முடிவல்ல என்பதை நான் ஏற்கனவே தெரிவித்திருக்கிறேன்.

'அராஜகம் என்றால் திமுக... திமுக என்றால் அராஜகம்...' திமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு கெட்டுள்ளது. விக்கிரவாண்டி தேர்தல் ஜனநாயக முறைப்படி முழு சுதந்திரமாக நடக்குமா என கேள்வி எழுந்துள்ளது. எனவே இந்த தேர்தலை புறக்கணிக்கிறோம். 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மக்களின் பேராதரவுடன் அதிமுக ஆட்சி மலர்வது உறுதி' என தெரிவித்துள்ளார்.