
அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமாகி இருந்த சூழலில் கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி (11.07.2024) அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன், ஜெ.சி.டி. பிரபாகர், வைத்திலிங்கம் உள்ளிடோர் சார்பில் சென்னை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் அமர்வில் இன்று (26.07.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதற்கிடையே இந்த வழக்கு தொடரப்படும் போது எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளர் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்றைய விசாரணையின் போது எடப்பாடி பழனிசாமி சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில், “அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி” எனக்குறிப்பிட்டு மனு தாக்கல் செய்து இருந்தார்.

இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இளம்பாரதி, “பொதுச் செயலாளர் பதவி தொடர்பான வழக்கு இன்னும் முடிவுக்கு வரவில்லை. எனவே எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளர் என எப்படி குறிப்பிட முடியும். இது தொடர்பான மனு நிலுவையில் உள்ள போது, எப்படி பொதுச் செயலாளர் எனக் கூற முடியும்”எனக் கேள்வி எழுப்பினர்.
இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி தரப்பினர் நீதிமன்றத்தில் மன்னிப்பு கோருவதாக தெரிவித்தனர். அப்போது நீதிபதி, “பதிவுத்துறை இந்த மனுவை எப்படி ஏற்றுக்கொண்டது. இது போன்ற வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது ஆரம்பத்தில் எப்படி மனுத் தாக்கல் செய்யப்பட்டதோ அப்படி தானே இருக்க வேண்டும். எப்படி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொண்டீர்கள்” என பதிவுத்துறைக்கு கேள்வி எழுப்பினர். மேலும், ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ளபடி அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் என திருத்தம் செய்து பதில் மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கு ஆகஸ்ட் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்ப்ட்டது.