Skip to main content

உரிமைத் தொகை அறிவிப்பு - உற்சாகத்தில் இல்லத்தரசிகள்! சொன்னதை செய்த தமிழ்நாடு அரசு

Published on 20/03/2023 | Edited on 20/03/2023

 

- தெ.சு.கவுதமன் 

 

Entitlement Notice - Housewives in Excitement! The Tamil Nadu government did what it said

 

தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் வெளியான இல்லத்தரசிகளுக்கான உரிமைத்தொகை அறிவிப்பு தான் இன்றைக்கு பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. சட்டமன்றத் தேர்தலின்போது பெண்களுக்கான உரிமைத் தொகையாக மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பு, பெண்கள் மத்தியில் பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. வெற்றிபெற்று ஆட்சிப் பொறுப்பேற்றதுமே உரிமைத்தொகை குறித்த அறிவிப்பு வெளியாகுமென்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மகளிர் இலவசப் பேருந்து திட்டத்துக்கு முதல் கையெழுத்திட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், உரிமைத்தொகை குறித்து எதுவும் குறிப்பிடவில்லை.  

 

தி.மு.க. அரசு பொறுப்பேற்ற தருணத்தில் கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் இருந்தது. அதனைக் கட்டுப்படுத்துவதற்கான தீவிர முயற்சியில் இருந்த சூழலில், முன்னர் இருந்த எடப்பாடி பழனிசாமியின் அ.தி.மு.க.வும் பெருத்த கடன்சுமையை வைத்துவிட்டுச் சென்றதன் காரணமாக, நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்தது. எனவே உரிமைத்தொகை குறித்து எதுவும் அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், இது ஒன்றை மட்டுமே பிடித்துக்கொண்ட எதிர்க்கட்சிகள், தேர்தல் அறிக்கையில் எதையுமே நிறைவேற்றவில்லை என்று ஒட்டுமொத்தமாகக் குற்றம் சுமத்தின.

 

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் இந்த உரிமைத்தொகை குறித்துதான், தி.மு.க. அரசுமீது கடுமையாகக் குற்றம்சாட்டினார்கள். ஒருபுறம் சொத்து வரி உயர்வு, இன்னொருபுறம், பால் மின்கட்டண உயர்வு என அதிகம் பாதிக்காத வகையில் வருவாயைப் பெருக்கும் நடவடிக்கையில் இறங்கியது தமிழக அரசு. இன்னொருபுறம், உரிமைத்தொகை வழங்குவது தொடர்பான ஆரம்பகட்ட வேலைகளில் அரசு இறங்கியுள்ளதாக செய்திகள் கசியத் தொடங்கியது. இந்நிலையில் ஈரோடு இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானது. இந்த இடைத்தேர்தல் பிரச்சாரத்திலும் உரிமைத் தொகை வழங்காமல் இழுத்தடிப்பதை எதிர்க்கட்சிகள் பிரச்சனையாக்க முயல, பிரச்சாரத்துக்கு வந்த அமைச்சர் உதயநிதி, இன்னும் சில மாதங்களில் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரச்சாரத்தின் போது பேசினார்.

 

nn

 

இறுதி நாளில் பிரச்சாரத்துக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், "திமுக தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்றுள்ள பெண்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ. 1000 உரிமைத் தொகையை, நிதிநிலைமை சரியாக இருந்திருந்தால் உடனே வழங்கி இருப்போம். இருப்பினும், மார்ச் மாதம் நிதி நிலை அறிக்கையில் பெண்களுக்கான உரிமைத் தொகை ரூ. 1000 எப்போது வழங்கப்படும் என அறிவிக்கவுள்ளோம்" என்று தெரிவித்தார். இதையடுத்து, விரைவில் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுவது உறுதியானது. ஸ்டாலினின் இந்த அறிவிப்பு தேர்தல் நடத்தை விதிமுறைக்கு எதிரானதென்று கூறி அ.தி.மு.க. தேர்தல் ஆணையத்தில் முறையிட்டது. அதற்கு தி.மு.க. சார்பில் பதிலளிக்கப்பட்டது.

 

இந்நிலையில் தான் பட்ஜெட் உரையில், அனைவரும் பெரிதும் எதிர்பார்த்த மகளிர் உரிமைத்தொகை குறித்த அறிவிப்பினை நிதியமைச்சர் வெளியிட்டுள்ளார். "ஒன்றிய அரசால், பெருமளவு உயர்த்தப்பட்டுள்ள சமையல் எரிவாயு விலை, விலைவாசி உயர்வால் அதிகரிக்கும் குடும்பச் செலவுகள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் என்பது அவர்களது அன்றாட வாழ்க்கைக்குப் பேருதவியாக இருக்கும். சிறப்புமிக்க இந்தத் திட்டம், கலைஞரின் நூற்றாண்டான இந்த ஆண்டில், திராவிட இயக்க மாதம் என சொல்லத்தக்க செப்டம்பர் மாதத்தில், பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் மாதம் 15ம் நாள் முதல் இத்திட்டம் முதல்வரால் தொடங்கி வைக்கப்பட இருக்கிறது. இத்திட்டத்தின் கீழ் மகளிர் பயன்பெறுவதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டு விரைவில் வெளியிடப்படும். தமிழ்நாடு மகளிரின் சமூக பொருளாதார வாழ்வில் ஒரு புரட்சியை ஏற்படுத்தக்கூடிய இத்திட்டத்திற்காக இந்த வரவு செலவுத் திட்டத்தில் 7,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என்று அறிவித்துள்ளார். இதற்காக இந்த பட்ஜெட்டில் 7000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பணிக்குச் செல்லாமல் இல்லத்தரசிகளாக இருக்கும் பெண்களுக்கு உதவிகரமாகவும், வீட்டை நிர்வகிப்பதற்கான அங்கீகாரமாகவும் இந்த உரிமைத்தொகை அமையும். சுமாராக 70 -80 லட்சம் குடும்பத்தலைவிகள் வரை இந்த உரிமைத்தொகையைப் பெறக்கூடுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்த உரிமைத்தொகை இல்லத்தை நிர்வகிக்கும் பெண்கள், "வீட்டில் சும்மாதான் இருக்கிறேன்" என்று சொல்லாதபடி, "வீட்டை நிர்வகிப்பதற்கான உரிமைத்தொகையாக 1000 ரூபாயைச் சம்பாதிக்கிறேன்" என்ற மன தைரியத்தை உருவாக்க உதவும்! இதற்காக இன்னொருவரை எதிர்நோக்கியிருக்கும் நிலை மாறும்! இந்த அறிவிப்புக்கு பொதுமக்கள் மத்தியில், குறிப்பாக பெண்கள் மத்தியில் பலத்த வரவேற்பு நிலவுகிறது! கூட்டணிக் கட்சியினரும் வெகுவாகப் பாராட்டுகின்றனர். எடப்பாடி பழனிசாமி மட்டும், அனைவருக்கும் உரிமைத்தொகை என்று அறிவித்து விட்டு, தற்போது தகுதி வாய்ந்தவர்களுக்கு மட்டும் என்று சொல்வது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசு மரியாதையுடன் ஆர்.எம்.வீரப்பன் உடல் தகனம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Cremation of RM Veerappan with state honors

எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் (வயது 98) வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த இவர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர் ஆவார். தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் உதவியாளராக சேர்ந்து, அதன் பின்னர் கணக்காளராக பணியாற்றிவர். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜானகி ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக தனி அணி உருவாகக் காராணமாக இருந்தவர். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன் ஆவார்.

திரைப்படத் தயாரிப்பாளர் ஆகவும் இருந்துள்ளார். அதன்படி எம்.ஜி.ஆர்., நடித்த காவல்காரன், இதயக்கனி, தெய்வத்தாய், நான் ஆணையிட்டால், ரிக்சாக்காரன் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, மூன்று முகம், தங்கமகன், ராணுவ வீரன், பணக்காரன் போன்ற படங்களையும் தயாரித்துள்ளார். மேலும் சிவாஜி நடித்த புதிய வானம், கமல் நடித்த காக்கிச்சட்டை மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த படங்களையும் இவரின் சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நேற்று மாலை சென்னை தி நகரில் உள்ள அவருடைய வீட்டில் உடலானது பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள் எனப் பல தரப்பினரும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில், நுங்கம்பாக்கம் மின் மயானத்திற்கு அவரது உடல் தற்பொழுது கொண்டுவரப்பட்டுள்ளது. 78 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவருடைய உடல் தகனம் செய்யப்பட இருக்கிறது.

Next Story

நீதிமன்றம் போட்ட போடு - பதவி விலகும் ஆளுநர்?

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
the governor to resign?

நேற்று உச்சநீதிமன்றம் தமிழக ஆளுநருக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், திடீர் முடிவு ஒன்றை ஆளுநர் எடுக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தில் தண்டனை பெற்றிருந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி, தண்டனையை எதிர்த்து செய்த மேல்முறையீட்டு வழக்கில் அவரது தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்திருந்தது. இதன் காரணமாக மீண்டும் பொன்முடி அமைச்சர் பதவி ஏற்பதாகத் தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் பொன்முடி பதவி ஏற்பதாக இருந்த 14 ஆம் தேதி ஆளுநர் திடீரென டெல்லி புறப்பட்டார்.

இதனால் பதவியேற்பு காலதாமதம் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த 17 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு ஆளுநர் எழுதிய கடிதத்தில், “பொன்முடி வழக்கில் உச்சநீதிமன்றம் தண்டனையைத்தான் நிறுத்தி வைத்துள்ளது. அவரை குற்றவாளி இல்லை என்று தீர்ப்பளிக்கவில்லை. திருக்கோவிலூர் தொகுதிக்கு சட்டமன்ற உறுப்பினர் இல்லாமல் இருக்கக் கூடாது என்பதற்காக இந்த தீர்ப்பை வழங்கியிருக்கலாம்” எனத் தெரிவித்திருந்தார். இச்சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

பொன்முடி அமைச்சராக மீண்டும் பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ரவி மறுத்ததால், அவருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. அந்த மனுவில், ‘அரசியல் சாசனத்தில் 164(1) பிரிவை ஆளுநர் ஆர்.என். ரவி அப்பட்டமாக மீறுகிறார். தமிழ்நாட்டின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இணையாக ஆட்சி நடத்த ஆளுநர் ஆர்.என். ரவி முயற்சிக்கிறார். எனவே, பொன்முடிக்கு அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

ஆளுநருக்கு எதிரான இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய். சந்திர சூட் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. ‘பொன்முடியை அமைச்சராக்க முடியாது என ஆளுநர் கூறுவது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. பத்து மசோதாக்களை சட்டமன்றம் மீண்டும் நிறைவேற்றி அனுப்பிய பிறகும் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை’ உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை தமிழக அரசு நீதிமன்றத்தில் வாதங்களாக வைத்தது.

அதனைத் தொடர்ந்து, 'தான் என்ன செய்கிறோம் என்று ஆளுநருக்கு தெரியாதா?' என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி காட்டமாகத் தெரிவித்ததோடு, தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்த பிறகும் பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் மறுப்பது ஏன்? இது நீதிமன்ற அவமதிப்பாகும். உச்சநீதிமன்றத்துடன் ஆளுநர் விளையாட வேண்டாம். ஆளுநருக்கு பதவியேற்பை நிறுத்தி வைக்க அதிகாரம் இல்லை. ஆளுநர் மறுத்தால் நீதிமன்றம் உத்தரவிடும்' எனக் காட்டமாகத் தெரிவித்திருந்தார்.

மேலும், ஆளுநர் மீது நடவடிக்கை எடுக்க நேரிடும் என ஒன்றிய அரசின் அட்டர்னி ஜெனரலுக்கு உச்சநீதிமன்றம் தனது கண்டிப்பை தெரிவித்தது. 'உங்கள் ஆளுநர் என்ன செய்து கொண்டிருக்கிறார்' என்று ஒன்றிய அரசு தரப்பு வழக்கறிஞரிடமும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளதோடு, இந்த விவகாரத்தில் நாளைக்குள் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என கெடு விதித்தது உச்சநீதிமன்றம்.

இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தமிழக ஆளுநர் பதவி விலகுவது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே திமுக அரசுக்கும் ஆளுநருக்கும் ஏழாம் பொருத்தமாக சென்று கொண்டிருந்தது. சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காதது, ஆளுநர் உரை, திருக்குறள், சனாதனம் எனப் பல்வேறு சர்ச்சைகளில் ஆளுநர் சிக்கி வந்த நிலையில், ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.