Skip to main content

கூலித்தொழிலாளி கொலை வழக்கில் மர்மம் விலகியது; போலி சாமியார் தம்பியுடன் சேர்ந்து கழுத்து அறுத்து கொன்றது அம்பலம்!

Published on 09/10/2022 | Edited on 09/10/2022

 

 

employee incident namakkal police investigation court order



மோகனூர் அருகே வாய்க்காலில் சடலமாகக் கைப்பற்றப்பட்ட நபர், திருச்சியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி என்பதும், அவரை போலி சாமியார் தம்பியுடன் சேர்ந்து கழுத்தை அறுத்துக் கொலை செய்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

 

நாமக்கல் மாவட்டம், மோகனூரில் இருந்து திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூர் செல்லும் சாலையில் உள்ள சுண்டக்கா செல்லாண்டியம்மன் கோயில் அருகே உள்ள வாய்க்காலில், கடந்த செப். 10- ஆம் தேதி ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. 

 

மோகனூர் காவல்துறையினர் நிகழ்விடத்திற்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். சடலத்தின் முகம், தலையில் பலத்த வெட்டுக்காயங்கள் இருந்தன. அவரை மர்ம நபர்கள் கொலை செய்துவிட்டு, சடலத்தை வாய்க்காலில் வீசிவிட்டுச் சென்றிருப்பது தெரிய வந்தது. 

 

எனினும், கொலையுண்ட நபர் யார்? என்ற விவரம் உடனடியாக தெரியாததால் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறையினர் திணறினர். 

 

தீவிர விசாரணையில், கொலையான நபர், திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அருகே உள்ள நாகை நல்லூரைச் சேர்ந்த சின்னையன் மகன் மணிவண்ணன் (வயது 44) என்பதும், கூலித்தொழிலாளி என்பதும் தெரிய வந்தது. இவருக்கு திருச்செல்வி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். 

 

கருத்து வேறுபாடு காரணமாக அவருடைய மனைவி பத்து ஆண்டுக்கு முன்பே பிரிந்து சென்று விட்டார். இதையடுத்து மணிவண்ணன் தனது தாயாருடன் வசித்து வந்தார். 

 

கொலையான நபர் யாரென்று தெரிய வந்ததை அடுத்து, மோகனூர் காவல் ஆய்வாளர் தங்கவேல் தலைமையில் காவல்துறையினர் விசாரணையை மேலும் வேகப்படுத்தினர்.  

 

இதற்கிடையே மணிவண்ணனுக்கும், அதே ஊரைச் சேர்ந்த அருள்வாக்கு சொல்லும் வாலிபர் ஒருவருக்கும் தகராறு இருந்து வந்தது குறித்து தகவல் கிடைத்தது. சந்தேகத்தின்பேரில், அருள் வாக்கு சொல்லி வரும் தொட்டியம் அருகே உள்ள தொட்டியப்பட்டியைச் சேர்ந்த ரங்கசாமி மகன் சீனிவாசன் என்பவரை பிடித்து வந்து விசாரித்தனர். 

 

இவர் அருள்வாக்கு சொல்வதுடன், மாந்திரீகமும் செய்து வந்துள்ளார். சீனிவாசனும், அவருடைய தம்பியும் சேர்ந்துதான் மணிவண்ணனை கழுத்து அறுத்துக் கொலை செய்தோம் என்று ஒப்புக்கொண்டு உள்ளனர். முக்கிய குற்றவாளியான சீனிவாசன் காவல்துறையில் அளித்துள்ள வாக்குமூலம்: 

 

மணிவண்ணன் தன் மனைவியை மீண்டும் தன்னுடன் சேர்ந்து வாழ வைக்கும்படி என்னிடம் குறி கேட்க வந்தார். மாந்திரீகத்தின் மூலம் மனைவியை சேர்த்துக் வைக்கச் சொன்னார். இதற்காக அவர் என்னைப் பார்க்க வந்தபோதெல்லம் சிறுக சிறுக காணிக்கையாக சில ஆயிரங்களைக் கொடுத்துள்ளார். 

 

ஆனாலும் அவருடைய மனைவியை சேர்ப்பது கால தாமதம் ஆனது. இதனால் கோபம் அடைந்த அவர் ஒருமுறை என் வீட்டிற்கு வந்து, ஆபாசமாகப் பேசியதுடன், நான் பூஜையில் வைத்திருந்த கடவுள் படங்களையும் எட்டி உதைத்து நாசப்படுத்திவிட்டார். 

 

இதனால் ஆத்திரம் அடைந்த நான், என்னுடைய தம்பி சரத்குமாரை (வயது 30) அழைத்துக்கொண்டு நாகைநல்லூர் ஏரிக்கரையில் வைத்து அவரைச் சந்தித்தேன். அப்போது அவரை உருட்டுக் கட்டையால் சரமாரியாகத் தாக்கினோம். மயங்கிக் கீழே விழுந்த மணிவண்ணனை கழுத்தை கத்தியார் அறுத்து கொலை செய்தோம். சடலத்தை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு, மோகனூருக்கு வந்து அங்குள்ள ஒரு வாய்க்காலில் வீசிவிட்டுச் சென்று விட்டோம். இவ்வாறு வாக்குமூலம் அளித்துள்ளனர். 

 

இதையடுத்து அவர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்து, நாமக்கல் ஜேஎம்.2-வது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர்களை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். 

 

கூலித்தொழிலாளி கொலை வழக்கில் ஒரு மாதமாக நீடித்து வந்த மர்மம் விலகியது. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.