Skip to main content

உண்மையைச் சொன்ன ஒன்றிய அமைச்சர்.. ஆளுநருக்கு துரை வைகோ கண்டனம்

Published on 22/03/2023 | Edited on 22/03/2023

 

Durai Vaiko condemn to Governor RN Ravi

 

ஆன்லைன் சூதாட்ட தடை செய்யும் சட்டம் இயற்ற மாநில அரசுகளுக்கே அதிகாரம் உள்ளது என ஒன்றிய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். 

 

இந்நிலையில், இதுகுறித்து மதிமுக தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “நேற்று (21.3.2023) நாடாளுமன்றத்தில் ஆன்லைன் ரம்மி சூதாட்ட தடைச் சட்டம் குறித்து தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் எழுப்பிய கேள்விக்கு செய்தி மற்றும் ஒளிபரப்புத் துறை ஒன்றிய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், ‘ரம்மி ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் சட்டம் இயற்றும் அதிகாரம் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் அட்டவணை 7 இல், பட்டியல் 2 இல், 34ன் படி  மாநில அரசுக்கு உண்டு’ என்று  தெரிவித்துள்ளார்.

 

'மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை' என்று கூறிய தமிழ்நாடு ஆளுநர், ரம்மி ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை திருப்பி அனுப்பிய நிலையில், ஒன்றிய அரசின் இந்த பதில் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு எடுத்துள்ள நிலையை நியாயப்படுத்தும் வகையில் உள்ளது.  

 

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டில் பணத்தை இழந்து, கடனாளியாகி மன உளைச்சலுக்கு உள்ளாகி இதுவரை 44 பேர் தற்கொலை செய்துள்ளனர். எனவே இந்த சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று மனநல மருத்துவர்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்தனர்.

 

ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிப்பது மற்றும் முறைப்படுத்துவது குறித்து முன்னாள் நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அந்த குழுவின் பரிந்துரையின் பேரில் ஆன்லைன் சூதாட்ட தடை அவசர சட்டம் இயற்றப்பட்டு, செப்டம்பர் 26 அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதற்கு ஆளுநரும் ஒப்புதல் அளித்தார்.

 

இந்த அவசர சட்டத்தை நிரந்தரமாக்கும் வகையில் கடந்த அக்டோபர் 17 ஆம் நாள் மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு அக்டோபர் 19 ஆம் நாள் ஆளுநர் இசைவுக்காக அனுப்பப்பட்டது. இதில் சில சந்தேகங்கள் இருப்பதாகக் கூறி விளக்கம் கேட்டு திருப்பி அனுப்பினார் ஆளுநர்.

 

'Public Order, Public Health, Theaters and Dramatic performances என்ற பிரிவுகளின்படிதான்  இந்த சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது' என்று கடந்த நவம்பர் 24 ஆம் நாள் தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்த பின்னரும் ஆளுநர் 'கிடப்பில்' போட்டிருந்தார். ஏற்கனவே 03.08.2022 அன்று நாடாளுமன்ற உறுப்பினர் மகாபாலி சிங்கின் ஆன்லைன் சூதாட்ட தடை குறித்த கேள்விக்கு, அப்போதைய ஒன்றிய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர், 'எல்லா  வகையான சூதாட்டங்களும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் அட்டவணை 7 உட்பிரிவு 2ன் கீழ் மாநில அரசுகளின் அதிகாரத்தின் கீழ் வருகிறது. ‘Information and Technology (IT) Act 2000’ சட்டத்தில் இந்த சூதாட்ட விளையாட்டுகள் குறித்து விளக்கப்பட்டிருக்கிறது. சூதாட்ட விளையாட்டுகள் அனைத்தும் சட்டத்துக்குப் புறம்பானவை. இவை Police and Public Order என்பதன் கீழ் வருவதால் அவை மாநில அரசுகளின் அதிகாரத்திற்கு உட்பட்டது' என்று மிகத் தெளிவாகக் கூறியுள்ளார்.

 

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு உரிய விளக்கம் கொடுத்த பின்பும், ஒன்றிய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதமே தெளிவான விளக்கத்தை நாடாளுமன்றத்தில் அளித்த பின்பும், இப்போது 5 மாதங்களுக்குப் பிறகு 'மத்திய அரசின் கீழ்வரும் விவகாரத்தில் மாநில அரசு எப்படி சட்டம் இயற்றலாம்' என்று கேள்வி எழுப்பி மீண்டும் திருப்பி அனுப்பியுள்ளார் ஆளுநர்.

 

நமது தலைவர் வைகோவும் இந்த ஆன்லைன் சட்டம் குறித்த கேள்விகளை ஒன்றிய அரசுக்கு அனுப்பி அதற்கான விடை பெறும் முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். இப்போது செய்தி மற்றும் ஒளிபரப்புத் துறை ஒன்றிய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் கூறியுள்ள விளக்கத்தின் அடிப்படையில் தமிழ்நாடு ஆளுநர், மக்களின் எண்ணத்திற்கு விரோதமாக, மத சக்திகளுக்கு துணை போகும் வகையில் செயல்பட்டு அந்த பதவிக்கு இழிவை ஏற்படுத்தியுடன் அந்த பதவியில் நீடிக்க தகுதி இழந்தவராகிறார்.

 

இது போன்று தெலுங்கானா மாநில ஆளுநர், மாநில அரசு இயற்றிய சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டுள்ளது குறித்து, தெலுங்கானா அரசு உச்சநீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. உச்சநீதிமன்றமும் இது குறித்து ஒன்றிய அரசுக்கு விளக்கம் கேட்பதாக கூறியுள்ளது. இதே போன்று தமிழ்நாடு அரசும் உச்சநீதிமன்றத்திற்கு சென்று, தமிழ்நாடு ஆளுநரின் தமிழ்நாட்டு மக்கள் விரோதப் போக்கிற்கும், தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போடும் முயற்சிகளுக்கும் முடிவு கட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.

Next Story

துரை வைகோவை ஆதரித்து அமைச்சர்கள் தீவிர ஓட்டு வேட்டை!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Ministers are actively gain for votes by supporting MDMK candidate Durai Vaiko

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் ம.தி.மு.க வேட்பாளர் துரை வைகோ தொகுதி முழுவதும் பம்பரமாக சுழன்று தி.மு.க அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி தீவிரமாக வாக்கு சேகரிப்பில்  ஈடுபட்டார்.

திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவரங்கம், திருவெறும்பூர், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, துரை வைகோவுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து நேற்று (16-04-24) தீவிர இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நேற்று (16-04-24) காலையில் புதுக்கோட்டையில் துரை வைகோவை ஆதரித்து பிரம்மாண்ட வாகன பேரணி நடந்தது. இதில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், மாவட்ட செயலாளர் செல்ல பாண்டியன் மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாகக் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, நேற்று மதியம் ஒரு மணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு வெளியே பெரியார் சிலை அருகில் பிரச்சார பேரணி தொடங்கியது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு துரை வைகோவை ஆதரித்து பிரச்சாரம் செய்தனர். அப்போது, தமிழ்நாட்டு மக்களுக்கு அனைத்து உரிமைகளும், திட்டங்களும் கிடைத்திட, மத்தியில் நல்லாட்சி மலர்ந்திட நம்முடைய வேட்பாளர் துரைவைகோவுக்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். இறுதிக்கட்ட பிரச்சார பேரணி நகர் முழுவதும் சென்று காந்தி மார்க்கெட்டில் முடிவடைந்தது .

இந்தப் பிரச்சார பயணத்தில் மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர்கள் மேயர் அன்பழகன், மண்டல குழு தலைவர் மதிவாணன், இனிகோ இருதயராஜ், எம்.எல்.ஏ, ம.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொகையா, ம.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, தமிழ் மாணிக்கம், திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரெக்ஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன், மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் வக்கீல் கிஷோர் குமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.