Skip to main content

"ஏன் மாஸ்க் போடல?" - பொதுமக்களை பயமுறுத்திய 'டூப்ளிகெட்' போலீஸ்! 

Published on 13/04/2021 | Edited on 13/04/2021

 

Duplicate police who deceived people in the guise of police

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை, திருநாவலூர், திருவெண்ணைநல்லூர் ஆகிய காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக போலீஸ் உடையில் ஒருவர் சுற்றியுள்ளார். அவர் சாலை வழியே இருசக்கர வாகனங்களில் வருகின்ற சிறு சிறு வியாபாரிகள், விவசாயிகள் ஆகியோரை வழிமறித்து, 'ஏன் மாஸ்க் போடல', 'லைசன்ஸ் இல்லையா', 'ஹெல்மெட் போடலயா', 'ஓவர் லோடு வண்டியா?' என வாகன ஓட்டிகளை மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார்.

 

இவர் போலீஸ் சீருடையில் இருந்ததால், வாகன ஓட்டிகள் உண்மையான போலீஸ் என்று நம்பி பயந்துகொண்டு பணம் கொடுத்துள்ளனர். வாகன ஓட்டிகள் வைத்திருந்த லைசென்ஸ், இன்சூரன்ஸ் ஆகியவற்றை வாங்கிக்கொண்டு காவல் நிலையத்தில் வந்து வாங்கிக் கொள்ளுமாறு அவைகளை எடுத்துச் சென்று விடுவார். இந்தச் சம்பவம் தொடர்ந்து நடந்து வந்துள்ளது. இந்த டூப்ளிகேட் போலீசிடம் பணம் பறிகொடுத்தவர்கள் உளுந்தூர்பேட்டை மற்றும் திருநாவலூர் காவல் நிலையங்களுக்குச் சென்று விவரம் கேட்டுள்ளனர். அப்போதுதான் போலீஸ் எனக்கூறி டூப்ளிகேட் போலீஸ் ஒருவர் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டு வருவது போலீசாருக்கு தெரியவந்தது.

 

இதையடுத்து உளுந்தூர்பேட்டை இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் மற்றும் போலீசார் டூப்ளிகேட் போலீஸ் குறித்து தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது நேற்று மாலை உளுந்தூர்பேட்டை பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடை அருகே சந்தேகத்திற்கிடமான நிலையில், போலீஸ் சீருடையில் இருந்த நபரை மடக்கிப் பிடித்து விசாரித்தனர். அவர்தான் டூப்ளிகேட் போலீஸ் என்பதைக் கண்டுபிடித்தனர்.

 

இதேபோன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போலீஸ் சீருடையில் சென்று வழிப்பறி செய்து வந்ததாக அந்த நபர் ஒப்புக்கொண்டுள்ளார். அந்த நபர் 49 வயது நிரம்பிய கஜேந்திரன் என்றும் சென்னை அமைந்தகரை பகுதியை சேர்ந்தவர் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 35 ஆயிரம் பணம், போலீஸ் சீருடை, அவர் வைத்திருந்த இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்துள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.