Skip to main content

"அனைத்து முதியோருக்கும் உதவித்தொகை வீடு தேடிச் சென்று வழங்கப்படும்" - அமைச்சர் ஐ. பெரியசாமி

Published on 30/01/2023 | Edited on 30/01/2023

 

doorstep delivery for old age pension i periyasamy 

 

கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்ட ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் அடங்கிய ஆய்வுக் கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது.

 

இந்த நிகழ்ச்சியில் தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, உயர்கல்வி அமைச்சர் பொன்முடி, உழவர் நலன் மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சிறுபான்மையினர் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் தொழிலாளர் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், மாவட்ட ஆட்சியர் மோகன், சட்டமன்ற உறுப்பினர்களான புகழேந்தி, லட்சுமணன், சிவக்குமார், மணிகண்டன், சபா ராஜேந்திரன், ஐயப்பன் மற்றும் இவ்விரு மாவட்டங்களைச் சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

 

இந்தக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் பெரியசாமி, "தமிழக முதல்வர் கிராமங்கள் வளர்ச்சி அடைந்தால் தான் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேம்படும் என்ற திட்டத்தின் அடிப்படையில் வருவாயில் ஊராட்சிகளுக்கு தேவையான நிதி கூடுதலாக ஒதுக்கீடு செய்து வழங்கியுள்ளார். குறைவான மக்கள் தொகை கொண்ட ஊராட்சியாக இருந்தாலும் அந்த ஊராட்சியின் வளர்ச்சிக்கு கூடுதல் நிதி வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக நிதி ஒதுக்கீட்டில் 51 சதவீதம் ஊராட்சிகளுக்கும் 49 சதவீதம் நகராட்சிகளுக்கும் ஒதுக்கீடு செய்துள்ளார். ஊரக உள்ளாட்சித் துறை  சார்பில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் வழியாக விவசாயத்திற்கு பயன்படுகின்ற கால்வாய்கள் உட்பட அனைத்து சிறிய கால்வாய்களும் வேளாண்துறையின் சார்பில் விரிவுபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் 80 ஆயிரம் கிராமங்கள் உள்ளன. அவற்றில் 70 ஆயிரம் கிராமங்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வருகின்றன. தற்போது வரும் 15 நாட்களுக்குள் அதை 40 ஆயிரம் கிராமங்கள் பயன்படும் வகையில் உயர்த்தி பணிகள் நடைபெற ஊராட்சி மன்றத் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

ஊராட்சிகளின் எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள பகுதிகளில் ஜல்ஜீவன், மெசர் திட்டத்திற்கு அப்பகுதி வீடுகளுக்கு குடிநீர் வழங்கப்படும் குடிநீர் தேவைக்காக கட்டப்பட உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் உயரத்தை 12 மீட்டர் அளவில் உயர்த்திக் கட்ட வேண்டும்.  பழுதடைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்குப் பதிலாக புதிதாக மேல்நிலை நீர் சேர்க்கை தொட்டிகள் கட்டித் தர தேவையான நிதியை வழங்கி அதற்கான பணிகள் விரைந்து மேற்கொள்ளப்பட வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் திருவிழா ஏற்படுத்திட வேண்டும். அதற்கான ஆய்வு கூட்டங்களை நடத்திட வேண்டும். ஊராட்சி மன்றத் தலைவர்கள் அவர்கள் பணியை சிறப்பாக செய்து முடிக்க அரசு அனைத்து உதவிகளும் செய்து தரும். மேலும் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள் தங்கள் பணியைத் திறம்படச் செய்து ஊராட்சிகளின் வளர்ச்சிக்கு வழி வகுக்க வேண்டும். கிராமப்புறங்களில் உள்ள 60 வயதைத் தாண்டிய அனைத்து முதியோருக்கும் முதியோர் உதவித்தொகை வீடு தேடிச் சென்று வழங்கப்படும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

 

கூட்டுறவு வங்கிகளின் 5 சவரனுக்கு குறைவாக நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றவர்களின் கடன் தொகை 5,000 கோடி ரூபாய் அரசு தள்ளுபடி செய்தது. மேலும் 12,41 கோடி ரூபாய் அளவுக்கு அனைத்து விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டி அதற்கான விதியை தமிழக முதல்வர் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறார். எனவே கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் உயர்ந்து விவசாயிகள் பொதுமக்கள் துயரத்தை துடைத்து வருகிறார் தமிழக முதல்வர்" என்று அமைச்சர் பேசினார். ஆய்வுக் கூட்ட நிகழ்ச்சியின் இறுதியில்  காணை ஊராட்சி ஒன்றியம் பனைமலை பேட்டை ஊராட்சியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் ஐ.பெரியசாமி 12 லட்சம் அளவில் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நூதன முறையில் வாக்கு சேகரித்த அமைச்சர் ஐ. பெரியசாமி!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Minister I.Periyasamy who collected votes in the traditional manner

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் திண்டுக்கல் ஒன்றியப் பகுதிகளில் சி.பி.எம். வேட்பாளர் சச்சிதானந்தத்திற்கு வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தையொட்டி புறாவை பறக்க விட்டு தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய நிதியை பெற்று வா என நூதன முறையில் அமைச்சர் ஐ. பெரியசாமி வாக்கு சேகரித்தார். திண்டுக்கல் ஒன்றியம் பள்ளபட்டி ஊராட்சியில் முருகபவனம் பகுதியில் வாக்கு சேகரிப்பு பிரச்சாரம் துவங்கியது. அப்போது அமைச்சர் ஐ. பெரியசாமி பிரச்சாரத்தில் பேசும் போது, “மக்கள் பணியே மகேசன் பணி என செயல்படுபவர் தான் சச்சிதானந்தம். நாம் மகத்தான வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைப்போம். அதில் எந்த வித சந்தேகமும் இல்லை. சச்சிதானந்தம் எம்.பி. ஆகிறார்” என்று அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.

அதை தொடர்ந்து சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் பேசுகையில், “இது புறாவிடு தூது அல்ல... இந்த புறா டெல்லி வரை பறந்து சென்று வரும். புறாவை டெல்லிக்கு அனுப்பி நமது மாநிலத்திற்கான நிதியை பெற்று வருமா? என்பது சந்தேகமே. இருந்தாலும் இந்த புறாவை பறக்க விட்டு நமது பிரச்சாரத்தை துவக்கி வைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி” எனக் கூறினார். 

Next Story

தேனியில் வேட்புமனு தாக்கல் செய்த தங்க தமிழ்செல்வனுக்கு அமைச்சர் ஐ. பெரியசாமி வாழ்த்து

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Minister I. Periyasamy congratulated Thanga Tamilselvan who filed his nomination

தேனி பாராளுமன்றத் தொகுதியில் ஆளுங்கட்சியான திமுக சார்பில் முன்னாள் மாவட்டச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன். அதிமுக சார்பில் தேனி கிழக்கு ஒன்றியச் செயலாளர் நாராயணசாமி மற்றும் பிஜேபி கூட்டணி சார்பில் அமமுக வேட்பாளர் டி.டி.வி. தினகரன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மதன் உள்பட சில சுயேச்சைகளும் தேர்தல் களத்தில் குதித்துள்ளனர்.

இந்த நிலையில், ஆளுங்கட்சியான திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் தேனி ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்வதையொட்டி தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம், ஆண்டிபட்டி, உசிலம்பட்டி, சோழவந்தான், போடி உள்பட ஆறு சட்டமன்றத் தொகுதியிலிருந்து 5000க்கும் மேற்பட்ட பொதுமக்களும் கட்சிக்காரர்களும் பெருந்திரளாக தேனி பழைய பேருந்து நிலையத்துக்கு வந்தனர். அப்பொழுது வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனுடன்  அமைச்சர்களான ஐ. பெரியசாமி மற்றும் மூர்த்தி உள்பட கட்சி பொறுப்பாளர்கள் வந்தனர். அவர்களை மக்கள் மலர் தூவியும் வாழ்த்தியும் மேளதாளத்துடன்  வரவேற்றனர்.

Minister I. Periyasamy congratulated Thanga Tamilselvan who filed his nomination

அதைத் தொடர்ந்து தேனி ஆட்சியர் அலுவலகத்திற்குள் வந்த வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் மாவட்ட ஆட்சியர் சஜிவனாவிடம் தனது வேட்பு மனுவை அமைச்சர்களான ஐ. பெரியசாமி, மூர்த்தி ஆகியோர் முன்னிலையில் மனுத்தாக்கல் செய்தார். அதன்பின் வெளியே வந்த திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி பட்டு வேஷ்டி போத்தி வாழ்த்து தெரிவித்தார். அதைத் தொடர்ந்து பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி உள்பட கட்சி பொறுப்பாளர்கள் சிலர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.