![A dog helped pull the rope to plant the electric pole with the electricity workers](http://image.nakkheeran.in/cdn/farfuture/_jU6zf_0uwsvDD885WyLtdKuaMSmdujTw_DbbvgVdDc/1695145590/sites/default/files/inline-images/a1553.jpg)
நமது வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகள் நாம் சொல்வதைக் கேட்டு நடப்பதை நாமே பார்த்து ரசித்திருப்போம். இது நன்கு அறிமுகமான நபர்கள் சொல்வதைச் செல்லப் பிராணிகள் செய்யும். ஆனால் அறிமுகமே இல்லாத புதியவர்கள் அவர்களுக்குள் சொல்லிக் கொண்டிருந்ததைக் கேட்டுக் கொண்டிருந்த ஒரு நாய் செய்த செயல்தான் வியக்க வைக்கும் நெகிழ்ச்சி சம்பவமாக நடந்தேறியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் அறந்தாங்கி சாலையில் ஒரு மின்கம்பம் பழுதான நிலையில், செவ்வாய்க்கிழமை மின்வாரிய ஊழியர்கள் புதிய மின்கம்பம் நடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆழமான குழி தோண்டி கம்பம் நட ஊழியர்கள் கயிற்றை இழுத்து குழிக்குள் இறக்கிக் கொண்டிருந்தபோது, ஒரு ஊழியர் கயிற்றை விடாமல் இழு இழு என்று சொல்லிக் கொண்டே இருக்க சக மின்வாரிய ஊழியர்கள் கயிற்றை இழுத்தனர்.
அப்போது அங்கு வந்த நாய் ஒன்று மின்வாரிய ஊழியர்களுக்கு உதவுவது போலக் கயிற்றைப் பல்லால் கடித்து இழுத்துக் கொண்டிருந்தது. இறுதியாக கயிற்றை விடாமல் பிடிச்சுக்கோ என்று ஒரு ஊழியர் சொன்னதால் ஊழியர்கள் கயிற்றை விட்ட பிறகும் கடைசி வரை நாய் கயிற்றை விடாமல் கவ்விப் பிடித்திருந்த சம்பவம் மின்வாரிய ஊழியர்களைப் பிரமிக்க வைத்தது.