Skip to main content

"விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தத் தயாரா?"- உதயநிதி ஸ்டாலின் கேள்வி...

Published on 22/12/2020 | Edited on 22/12/2020

 

 

dmk udhaya nidhi stalin speech at cuddalore

 

"விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்" என்ற தேர்தல் பிரச்சார பயணத்திற்காக தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து மூன்று நாட்கள் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார். 

 

அதன் ஒரு பகுதியாக கடலூர் அருகே உள்ள குறிஞ்சிப்பாடி ஒன்றிய பகுதியில் தி.மு.க. ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டு அ.தி.மு.க. ஆட்சியில் முடக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிக்கான இடத்தை பார்வையிட்டுப் பேசிய உதயநிதி ஸ்டாலின், "மீண்டும் மருத்துவக் கல்லூரி வருமா முடக்கப்பட்ட திட்டம் முழுமை பெறுமா?" என கேள்வி எழுப்பியவர், "கண்டிப்பாக தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றவுடன் மருத்துவக் கல்லூரி திட்டம் கடலூரில் முழுமை பெறும் வகையில் முடிக்கப்படும்" என்றார்.

 

அதைத் தொடர்ந்து ராமாபுரத்தில் நடந்த கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்ற உதயநிதி, "மூன்று வேளாண் மசோதா கொண்டு வந்த பா.ஜ.க. அரசு போராடும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் உள்ளது. விமான நிலையங்கள் தனியார்மயம், ரயில்வே தனியார்மயம் போன்று விவசாயத்தையும் புதிய வேளாண் சட்டங்களால் தனியார்மயக் கொள்கையாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் வேளாண்மைத் துறை கார்ப்பரேட்டுகள் கையில் என்ற நிலைப்பாட்டில் மத்திய அரசு உள்ளது. முதலில், இதற்கு எதிராகப் பேசிய அ.தி.மு.க. தற்போது ஆதரவளிக்கிறது. டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு மேல் போராடி வரும் நிலையில் புதிய வேளாண்மை சட்டங்களால் எந்த பாதிப்பும் இல்லை எனக் கூறும் முதல்வர் பழனிசாமி டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தத் தயாரா?" எனக் கேள்வி எழுப்பினார்.

 

இந்த நிகழ்ச்சிகளின்போது கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். தொடர்ந்து இன்றும், நாளையும் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், குறிஞ்சிப்பாடி, வடலூர், நெய்வேலி, விருத்தாச்சலம் ஆகிய பகுதிகளில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

Next Story

காணொளியில் ஆஜர்படுத்தப்பட்ட செந்தில் பாலாஜி; 33வது முறையாக நீட்டித்த நீதிமன்றம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Senthil Balaji featured in the video; Court extended for the 33rd time

போக்குவரத்துத்துறையில் சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். மேலும் செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாவான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு.முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், செந்தில் பாலாஜி இன்று காணொளி மூலம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 22ஆம் தேதி வரை செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார். தற்பொழுது வரை 33வது முறையாக அவருடைய நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.