ஆன்லைன் ரம்மி தடை செய்ய தீவிரமாக இருக்கிறேன் என்பதைபோன்று காட்டிக்கொண்டு ஆன்லைன் ரம்மி விளையாட்டை வளர்த்து விடுகின்ற வேலையை திமுக செய்யக் கூடாது என முன்னாள் ஜெயக்குமார் பேட்டி தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில்,''ஆன்லைன் ரம்மி என்பது தடை செய்யப்பட வேண்டும். இதற்கு முழுமையான முயற்சிகளை திராவிட முன்னேற்றக் கழக அரசாங்கம் எடுக்க வேண்டும். ஆளுநரை பொறுத்தவரை சில விளக்கங்கள் கேட்டுள்ளார். அதற்கான விளக்கங்களை அளித்துவிட்டதாக இவர்கள் சொல்கிறார்கள். ஆனால் எது எப்படி இருந்தாலும் சரி ஒரு முழுமூச்சுடன் செயல்பட வேண்டும். ஆனால் நானும் ஆன்லைன் ரம்மி தடை செய்ய தீவிரமாக இருக்கிறேன் என்பதைபோன்று காட்டிக்கொண்டு ஆன்லைன் ரம்மி விளையாட்டை வளர்த்து விடுகின்ற வேலையை திமுக செய்யக் கூடாது.
இப்பொழுது நடப்பது மக்களாட்சி அல்ல மன்னர் ஆட்சி. எனவே வாரிசு அரசியல் தான் முழுமையாக அரங்கேற்றம் செய்யப்படுகின்ற நேரம் இது. முன்னாள் அமைச்சர் துரைமுருகனையோ, ஐ.பெரியசாமியையோ, நேருவையோ, டி.ஆர்.பாலுவையோ தலைவர்களாக்கி ஸ்டாலினுடைய காலத்திலேயே முதல்வர் ஆக்குவோம் என்று சொன்னால் முதல்வர் ஸ்டாலினுக்கு கோபம் வருமா வராதா? கண்டிப்பா கோபம் வரும். ஸ்டாலின் தொகுதியில் உள்ள ஆஸ்பிட்டலுக்கு போன சிறுமிக்கு காலும் போயிடுச்சு, உயிரும் போயிடுச்சு. அந்த தொகுதியின் லட்சணம் எப்படி இருக்கிறது? அவருடைய மகன் தொகுதியில் என்ன நிலைமை இருக்கிறது. தேனும் பாலும் ஆறாகவா ஓடுகிறது. ஓட்டு வாங்கி விட்டு சென்றதோடு சரி, ஒருநாளும் ஆளைக் காணவில்லை, திரும்பிக் கூட மக்களை பார்ப்பது கிடையாது, மக்கள் அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்'' என்றார்.