ஊரடங்கு உத்தரவு காரணமாக சிரமத்துக்குள்ளாகியுள்ள மக்களுக்கு உணவு, அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களை நேரடியாக வழங்க அரசியல் கட்சிகளுக்கு தடை விதித்த உத்தரவை எதிர்த்து தி.மு.க. சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுவில், கரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக, பாதிக்கப்பட்டுள்ள விளிம்பு நிலை மக்களுக்கும், தினக்கூலிகளுக்கும் உதவும் வகையில், அவர்களுக்கு உணவு மற்றும் மளிகை பொருட்களையும், மருந்துப் பொருட்களையும் திமுக சார்பில் வழங்கி வருவதாகவும், அப்போது சமூக விலகல் பின்பற்றப்படுவதாகவும், முககவசம், கையுறை போன்ற பாதுகாப்பு உபகரணங்களை அணிந்தே உதவிகள் வழங்கப்பட்டு வந்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும், ஒரு புறம் வசதியான மக்களுக்கு ஆன்லைன் மூலம் பொருட்கள் கிடைக்க அனுமதியளித்துள்ள அரசு, ஏழை மக்களுக்கு நேரடியாக உணவுப் பொருட்கள் வழங்குவதைத் தடுக்கும் வகையில், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக மனுவில் குற்றம் சாட்டியுள்ளார். ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருட்கள், மளிகை பொருட்கள், மருந்து பொருட்கள் வழங்கும் தி.மு.க.வினரை தடை செய்யக் கூடாது என அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும், இதுசம்பந்தமாக அரசு பிறப்பித்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.