Skip to main content

"கலைஞர் பிறந்தநாளை எளிமையாகக் கொண்டாடுவோம்"- தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை!

Published on 30/05/2021 | Edited on 30/05/2021

 

 

dmk party kalaignar birthday chief minister mkstalin

 

கலைஞர் பிறந்தநாளை அமைதியாக, எளிமையாகக் கொண்டாடுவோம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களை அறிவுறுத்தியுள்ளார்.

 

இது தொடர்பாக தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று (30/05/2021) கட்சியின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், "ஜூன் 3 ஆம் தேதி நம் தாய்மொழியாம் தமிழுக்குச் செம்மொழித் தகுதியினைப் பெற்றுத் தந்த முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் பிறந்தநாள். தி.மு.க.வினருக்கு அது சிறந்த நாள். நவீனத் தமிழ்நாட்டின் நன்மை பயக்கும் உயர்வுக்கெல்லாம் காரணமான நம் உயிர்நிகர் தலைவர் அவர்களை, அய்யா முத்துவேலரின் வாழ்விணையரான அன்னை அஞ்சுகம் அம்மையார் ஈன்ற நாள்.

 

அந்த மாபெரும் தலைவர்  இன்று நம்மிடையே இல்லை என்கிற ஏக்கம் ஒருபுறமிருந்தாலும், அவர் கட்டிக் காத்த இந்த இயக்கம் இன்று தனிப்பெரும்பான்மையுடன் தமிழ்நாட்டை ஆளும் வாய்ப்பினைப் பெற்றிருக்கிறது. ஐந்து முறை மொத்தம் 19 ஆண்டுகள் தமிழகத்தின் தகுதிமிக்க முதலமைச்சராக இருந்து ஒவ்வொரு முறையும் உயர்தனிச் செம்மொழியாம்  தமிழையும், உயிரனைய தமிழர்களையும் உயர்த்திய தலைவருக்கு ஆறாவது முறையாக முதலமைச்சராகும் வாய்ப்பு அமையாமல் போனாலும், ஆறாவது முறையாக தி.மு.க. ஆட்சிப் பொறுப்புக்கு வந்திருக்கும் இன்றைய நிலையில், உடன்பிறப்புகளாம் உங்கள் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஊற்றெடுக்கும்  மகிழ்ச்சியை, மனநிறைவை உங்களில் ஒருவனான நான் நன்கறிவேன். 

 

கட்சியினர் மட்டுமல்ல, இந்த ஆட்சி மாற்றத்திற்குக் காரணமான தமிழக மக்களின் நெஞ்சத்திலும் ஒரு நிம்மதி ஏற்பட்டிருக்கிறது. இருண்டக் காலத்தை விரட்டியடித்து, சூரியன் உதித்திருப்பதால் நாளைய பொழுதுகள் எல்லாம்  நல்லதாகவே விடியும் என்கிற நம்பிக்கை பிறந்திருக்கிறது. அனைவருக்குமான ஆற்றல்மிகு அரசு இது என்பதை அவர்கள் ஒவ்வொரு நாளும் உணர்கிறார்கள். இது தலைவர் கலைஞர் வடித்துத் தந்த வழியில் மக்கள் நலன் காக்கும் அரசு என்பதைக் கட்சி அரசின் ஒவ்வொரு செயல்பாட்டின் வாயிலாகவும் அறிந்து கொள்கிறார்கள்.

 

முத்தமிழறிஞர் கலைஞர் முதலமைச்சர் பொறுப்பில் இல்லை என்றாலும், அவர்தான் ஆட்சி செய்கிறார் என்பதை, “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்” எனப் பதவியேற்பு உறுதிமொழி ஏற்ற நான், என் உள்ளத்தில்  ஆழப் பதியவைத்துள்ளேன். தலைவர் கலைஞரின் பெயருக்கும், புகழுக்கும் அணிச் சேர்க்கும் வகையில், இந்தப் பேரிடர் காலத்தில் இணையிலாப் பணியாற்றி, மக்கள் நலன் போற்றிக் காத்திட வேண்டும் என்ற உறுதியுடன் ஒவ்வொரு நாளும் ஊழியம் செய்து வருகின்றேன். நமது அமைச்சர் பெருமக்களும், கட்சியின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும்  உறுதுணையாக நிற்கின்றனர். தி.மு.க.வின் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளைக்கழக நிர்வாகிகள், செயல் வீரர்கள், அனைவரும் மக்கள் நலன் காக்கும் பணியில் தங்களை ஒப்படைத்துக் கொண்டு அரும்பணியாற்றுகின்றனர்.

 

மகத்தான வெற்றியையும், மக்களின் நம்பிக்கையையும் பெற்று தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைந்துள்ள நிலையில், இந்த வெற்றிக்கான அரசியல் பாதையை நமக்கு வகுத்தளித்தவரும், நம் நெஞ்சில் எந்நாளும் நிலைத்திருப்பவருமான தலைவர் கலைஞரின் பிறந்தநாளைக் கோலாகலமாகக் கொண்டாட முடியவில்லையே என்ற ஏக்கம் ஒவ்வொரு உடன்பிறப்பின் நெஞ்சிலும் இருக்கத்தானே செய்யும்! 

 

கடந்த ஆண்டு நாம் எதிர்க்கட்சியாக இருந்தபோதும், இதேபோல கரோனா கால ஊரடங்கு காரணமாகத் தலைவர் கலைஞரின் பிறந்தநாளை மிக எளிய முறையிலே தான் கொண்டாடினோம். ஓராண்டுக்குள் நிலைமை மாறும் என எதிர்பார்த்தோம். அதனால், தி.மு.க. ஆட்சி அமைந்த முதல் ஆண்டில் தலைவர் கலைஞரின் பிறந்தநாளை எப்படியெல்லாம் கொண்டாடுவது என்று மனதளவில் நீங்கள் திட்டமிட்டிருப்பீர்கள் என்பதை உங்களில் ஒருவனான என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது.

 

என் மனதிலும்கூட, தலைவர் கலைஞரின் பிறந்தநாளான ஜூன் 3- ஆம் நாள் எப்படி அமைய வேண்டும் என்பதற்கான திட்டங்கள் உண்டு. எல்லாவற்றையும் இந்தப் பேரிடர் காலம் ஒத்தி வைத்திருக்கிறது. மக்களின் உயிரைக் காப்பது ஒன்றே நம் முன் உள்ள தலையாய பணி. அதற்காக நம்மை முழுமையாக அர்ப்பணித்துச் செயலாற்றுவதே தலைவர் கலைஞரின் பிறந்தநாள் விழாவுக்கு சிறப்பு சேர்ப்பதாகும். தலைவர் கலைஞர் இன்று ஆட்சிப்பொறுப்பில் இருந்திருந்தால், இதைத்தான் நம்மிடம் எதிர்பார்த்து  அறிவுறுத்தியிருப்பார்.

 

ஊரடங்கு காலம் என்பதால் பொதுவெளியில் தலைவர் கலைஞரின் பிறந்தநாள் விழா நிகழ்வு எதுவும் நடத்திட வேண்டாம். கட்சியை நிறுவிய பேரறிஞர் அண்ணா நமக்கு வழங்கிய முத்தான மூன்று அன்புக் கட்டளைகள், ‘கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு’ ஆகியவையாகும். இந்த மூன்றில் மிக முக்கியமானது, ‘கட்டுப்பாடு’ என்பதைத் தலைவர் கலைஞர் பல முறை நமக்கு வலியுறுத்தியிருக்கிறார்.

 

நம் உள்ளமெல்லாம் நீக்கமற நிறைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாளில் கட்டுப்பாடு காத்து, அவரவர் இல்லங்களில் கலைஞரின் திருஉருவப் படத்திற்கு மரியாதை செலுத்திக் கொண்டாடுங்கள். அவர்  கொள்கைகளை நெஞ்சில் ஏந்தி, ஊரடங்கில் உணவு உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை எதிர்பார்த்திருக்கும் ஏழை, எளிய மக்களுக்கு அவர்களின் இருப்பிடம் சென்று உதவிகளை வழங்கிடுங்கள்.

 

நலன் காக்கும் உதவிகளைச்  செய்வதற்கேற்ப, அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெற்று, முகக் கவசம், தனி மனித இடைவெளி உள்ளிட்ட கரோனா  பேரிடர் கால நெறிமுறைகளைச் சரியாகக் கடைப்பிடித்து, எவ்வகையிலும் கூட்டம் சேர்ந்திடாதவாறு கவனமாகச் செயலாற்றுங்கள். ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பதே பேரறிஞர் அண்ணாவின் தம்பியான முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாள் விழாவுக்கான செயல்திட்டமாக அமையட்டும்.

 

தி.மு.க. ஆட்சி அமைந்த முதல் ஆண்டில், நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரின் பிறந்தநாளைக் கோலாகலமாகக் கொண்டாட இயலவில்லையே என வருந்த வேண்டாம். ஐந்தாண்டுகளும் நம் கழக ஆட்சியின் ஆண்டுகள்தான். அதனை அடுத்து  வரும் ஆண்டுகளும் தி.மு.க.யே ஆட்சி செய்ய வேண்டும் என, தமிழக மக்கள் மனமுவந்து தீர்ப்பளிக்கும் நல்வாய்ப்பு அமைந்திடத்தான் போகிறது. எனவே, பேரிடர் கால நெறிமுறைகளைக் கடைப்பிடித்து, தலைவர் கலைஞர் பிறந்தநாளை அமைதியாக, எளிமையாகக் கொண்டாடுவோம்.

 

மக்கள் நலன் காத்து பேரிடரை  வெல்வோம். அடுத்து வரும் ஆண்டுகளில், பேரறிஞர் அண்ணாவின் இதயத்தை இரவலாகப் பெற்ற அவரது  அருமைத் தம்பியாம் முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாளைப் பெருமகிழ்ச்சியுடன் விழா எடுத்துக் கொண்டாடுவோம்!." இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

Next Story

காணொளியில் ஆஜர்படுத்தப்பட்ட செந்தில் பாலாஜி; 33வது முறையாக நீட்டித்த நீதிமன்றம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Senthil Balaji featured in the video; Court extended for the 33rd time

போக்குவரத்துத்துறையில் சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். மேலும் செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாவான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு.முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், செந்தில் பாலாஜி இன்று காணொளி மூலம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 22ஆம் தேதி வரை செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார். தற்பொழுது வரை 33வது முறையாக அவருடைய நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.