Skip to main content

"ஓட்டுக்கு எவ்ளோ தருவீங்கன்னு கேட்டாங்க" - ஐ.டி. ரெய்டு குறித்து எ.வ.வேலு பேட்டி!

Published on 26/03/2021 | Edited on 26/03/2021

 

dmk leader velu pressmeet income tax raid

 

தி.மு.க.வின் முன்னணித் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சரும், திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதி வேட்பாளருமான எ.வ.வேலுவின் வீடு, கல்லூரி மற்றும் தொழில் நிறுவனங்கள் என சுமார் 10- க்கும் மேற்பட்ட இடங்களில் 100- க்கும் அதிகமான வருமான வரித்துறை அதிகாரிகள், கடந்த மார்ச் 25, 26 -ஆம் தேதிகளில் சோதனை செய்தனர்.

 

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் திருவண்ணாமலையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நேரத்திலேயே இந்தச் சோதனை நடைபெற்றது. இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதோடு பிரச்சாரம் முடித்துவிட்டு வந்த தி.மு.க. தலைவரின் வாகனத்திலும் சோதனை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சோதனையை மார்ச் 26- ஆம் தேதி மாலை 05.00 மணிக்கு வருமானவரித்துறை அதிகாரிகள் நிறைவுசெய்தனர்.

 

சோதனை குறித்து வருமானவரித்துறை இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் தெரிவிக்காத நிலையில், தி.மு.க. மாவட்டச் செயலாளரும், வேட்பாளருமான எ.வ.வேலு மற்றும் தி.மு.க. சட்டத்துறையின் ஆலோசகர், மூத்த வழக்கறிஞர் விடுதலை ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். 

 

dmk leader velu pressmeet income tax raid

 

அப்போது எ.வ.வேலு கூறியதாவது, "திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 தொகுதிகளில் உதயசூரியன் போட்டியிடுகிறது. நான் திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிடுகிறேன். அதோடு வடமாவட்டங்களில் உள்ள வேறு சில தொகுதிகளுக்கும் பிரச்சாரத்துக்குச் செல்கிறேன். என்னை முடக்க வேண்டும் என்பதற்காகவே இந்த ரெய்டுக்கு டெல்லி உத்தரவிட்டுள்ளது. இங்கு என்னை எதிர்த்துப் போட்டியிடுபவர் பா.ஜ.க. வேட்பாளர். அவரை வெற்றிபெற வைப்பதற்காகவும் டெல்லி இப்படியொரு ரெய்டை நடத்தியுள்ளது. எங்கள் குடும்பம் அறக்கட்டளை வைத்துள்ளது, கல்விச் சேவை செய்கிறது. அதுகுறித்து கேள்வி எழுப்பாமல் தேவையற்ற கேள்விகளை எழுப்பினார்கள். ஓட்டுக்கு எவ்வளவு தரப்போகிறீர்கள் என்றெல்லாம் கேள்வி எழுப்பினார்கள்.

 

வருமான வரித்துறை என்பது அம்பு தான், அதை ஏவியவர்கள் டெல்லியில் இருக்கிறார்கள். இந்த திருவண்ணாமலை மண் திராவிட மண், இது ஆன்மிகமும், திராவிடமும் இணைந்தது. அதனால் தான் அண்ணாமலையார் கோயிலை தி.மு.க. தலைவர் மீட்டார், பா.ஜ.க. அதனை முடக்க திட்டமிட்டது. இந்தச் சோதனை மூலம் என்னை இரண்டு நாள் முடக்கிவிட்டார்கள். இந்த இரண்டு நாளை ஈடுகட்டும் விதமாக இரவு, பகல் ஓய்வு இல்லாமல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு 8 தொகுதிகளிலும் உதயசூரியன் வெற்றிபெற உழைப்பேன்" என்றார்.

 

dmk leader velu pressmeet income tax raid

 

அதன் பின்னர் மூத்த வழக்கறிஞர் விடுதலை கூறியதாவது, "தேர்தல் காலகட்டத்தில் இதுபோன்ற ரெய்டுகள் நடத்துவது சட்ட விரோதமானது. மத்தியில் ஆளும் கட்சியாக உள்ள பா.ஜ.க.வை சேர்ந்தவர் தான் திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். அவருக்குச் சாதகமாகச் செயல்படவே மத்திய அரசு, தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி வருமான வரித்துறையை ஏவியுள்ளது.

 

வருமானவரித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ரெய்டு செய்வதற்குப் வெவ்வேறு காரணங்களைக் கூறுகின்றனர். ஆடியோவில் ஒருவர் பேசினார், அதனை அடிப்படையாகக் கொண்டு சோதனைக்கு வந்தோம் என்றார்கள். அது நடந்தது பிப்ரவரி 2- ஆம் தேதி. அன்று முதல் இன்று வரை என்ன செய்துகொண்டு இருந்தார்கள். அல்லது தேர்தல் முடிந்த பிறகு நடத்தியிருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் இப்படிச் செய்வது சட்ட விதிகளுக்கு முரணானது என ஆடியோ குறித்துக் கேள்வி எழுப்பியதும், எங்களுக்குப் பணம் இருப்பதாக தகவல் வந்தது எனக் குறிப்பிட்டார்கள். ஆனால், அதற்கான எந்த ஆவணமும் அவர்களிடம் இல்லை.

 

dmk leader velu pressmeet income tax raid

 

ஆக மத்தியில், ஆளும் அரசு தங்களது அதிகாரத்தைத் தவறான முறையில் பயன்படுத்தியுள்ளது. பணம் கைப்பற்றப்பட்டதாக தவறான தகவலைப் பரப்பினார்கள். இது அவரின் பெயரைத் தவறாகப் பரப்பவே செய்துள்ளனர். இதனால்தான், இதுகுறித்து இந்தியத் தேர்தல் ஆணையத்துக்குப் புகார் தெரிவித்துள்ளோம். வாக்கு எண்ணிக்கை முடிவுக்குப் பிறகு இதுகுறித்து நீதிமன்றம் நாடுவதா அல்லது கைவிடுவதா என்பதைப் பின்னர் ஆலோசித்து முடிவுசெய்வோம்" எனத் தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

''40 தொகுதிகளிலும் வெற்றி பிரகாசமாக உள்ளது''- அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

முன்னதாக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பூத் எண் 155 ல் திமுக பொதுச்செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் ஆகியோர் குடும்பத்தோடு வந்து வாக்களித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், 'காலையிலிருந்து எட்டுத்திக்கும் என்னோடு தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரும் பேசிக்கொண்டிருக்கிறார்.

அரக்கோணம் நாடாளுமன்றத்தில் எப்படி இந்திய கூட்டணிக்கு பிரகாசமாக தெரிகிறதோ அதேபோல் 40 தொகுதிகளிலும் எங்களுக்கு பிரகாசமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடைபெறுகிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

மேகதாது கட்டக் கூடாது என்பது கர்நாடகாவின் தயவு அல்ல அது தமிழகத்தின் உரிமை. 25 ஆண்டாக இந்தத் துறையை கவனிக்கிறேன் எனக்கு சாதாரணமான செய்தி சிவக்குமார் புதிதாக வந்ததால் அது அவருக்கு புதிதாக தெரியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு தமிழகத்திற்கும் உரிமை உள்ளது. கர்நாடக மக்களை தேர்தல் நேரத்தில் உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் இப்படி பேசுகிறார்.

இன்னமும் மலை கிராமங்களுக்கு ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்திதான். காரணம் இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூலை முடுக்குகள் உள்ளது. தேர்தல் ஆணையம் எப்போதும் சரியாக இருக்காது. ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். நதிநீர் இணைப்புக்கு  தமிழகம் எப்போதும் தயார். அதை நாங்கள் வரவேற்கிறோம் அதனால் தமிழகத்திற்கும் பயன் உள்ளது. வாக்குச்சீட்டு முறை வேண்டாம். இயந்திர வாக்குப்பதிவு முறையே தேவை. இன்றைய காலகட்டத்தில் இயந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை'' என கூறினார்.

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.