Skip to main content

2,500 ரூபாய் பொங்கல் பரிசைப் பார்த்து ஏமாந்து விட வேண்டாம்!- தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு... 

Published on 05/01/2021 | Edited on 05/01/2021

 

dmk dhayanidhi maran mp speec at salem district


ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசாக கொடுக்கப்படும் 2,500 ரூபாயைக் கண்டு மக்கள் ஏமாந்து விடக்கூடாது; அது, வரியாக நீங்கள் செலுத்திய பணம்தான் என்று தயாநிதி மாறன் எம்.பி. கூறினார். சேலத்தில் நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் அவர் இவ்வாறு பேசினார்.

 

சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில், 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' இரண்டாம் கட்ட தேர்தல் பரப்புரை, சேலம் வடக்கு, தெற்கு தொகுதிகளில் திங்களன்று (ஜன. 4) நடந்தது. தயாநிதிமாறன் எம்.பி. பரப்புரையில் ஈடுபட்டார்.

 

வெங்கடாசலம் காலனியில் நெசவாளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நெசவாளர்களின் குறைகளைக் கேட்டறிந்த தயாநிதி மாறன் எம்.பி., அவர்கள் மத்தியில் பேசியது: "நான் மத்திய ஜவுளித்துறை அமைச்சராக இருந்தபோது நெசவாளர்களுக்குப் பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை செய்துள்ளேன். எனக்கு உங்களின் கஷ்டங்கள் புரியும். நெசவாளர்கள் அதிகமாக வசிக்கும் சேலத்தில் கூட ஜவுளிப் பூங்கா அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது அமைச்சராக இருந்த வீரபாண்டி ஆறுமுகம், இதற்கு பெரும் முயற்சி எடுத்தார். ஆனால் ஆட்சி மாற்றத்தால் அத்திட்டம் கைவிடப்பட்டது. ஸ்டாலின் முதல்வர் ஆனவுடன் கண்டிப்பாக சேலத்தில் ஜவுளிப் பூங்கா கொண்டு வரப்படும். 

 

கரோனா ஊரடங்கால் நெசவாளர்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இந்த நேரத்தில் நூல் விலையேற்றம் மிகப்பெரும் பிரச்சனையாக உள்ளது. முன்பு, சீனாவில் இருந்து பஞ்சு இறக்குமதி செய்யப்படுவதால் நூல் விலை உயர்ந்துள்ளதாக சொன்னார்கள். இப்போது குஜராத்தில் இருந்து நூல் வந்தும் விலை குறைந்தபாடில்லை. இந்த அரசின் திட்டங்கள் அனைத்தும் முதலாளிகளுக்கு மட்டுமே லாபமாக உள்ளது. இதனைப் போக்க தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் கூட்டுறவு சங்கங்கள் மூலம் நூல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். 

dmk dhayanidhi maran mp speec at salem district

 

நமது பிள்ளைகள் படித்தால்தான் நமது குடும்பம் உயரும். நம் தலைமுறைகள் படிக்க வேண்டும் என பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் விரும்பினர். ஸ்டாலினும் அதையே விரும்புகிறார். ஆனால், தற்போது இதற்கெல்லாம் வழியில்லாமல் போய்விட்டது. இன்று, இறைவன் அருளால் முதல்வர் ஆனதாக ஒருவர் சொல்கிறார். இன்னொருவர் தியானம் செய்து நியாயம் கேட்டார். இவர்கள் இருவரும் இணைந்து நடத்தும் ஆட்சியால் தமிழகம் 10 வருடம் பின்தங்கி விட்டது. 

 

கலைஞர் ஆட்சியில், படித்தவுடன் கேம்பஸ் இண்டர்வியூ மூலம் வேலை கிடைத்தது. இப்போதுள்ள அ.தி.மு.க. ஆட்சியில் தொழிற்சாலைகள் அனைத்தும் இழுத்து மூடப்படுகிறது. இந்திரா காந்தியிடம் போராடி கலைஞர் பெற்றுத்தந்த சேலம் இரும்பாலையும், இங்குள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் தொடங்கப்பட்ட ஐடி பார்க்கும் முடங்கிக் கிடக்கின்றன. இதேபோல் நமது பிள்ளைகளின் மருத்துவ கனவும் கலைந்துவிட்டது. உயர்சாதிக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுக்கிறார் மோடி. அதற்கு ஆதரவாக இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. 

 

நீட் தேர்வு எழுதாத மாணவர்கள்தான் இன்று உலக அளவில் சிறந்த மருத்துவர்களாக உள்ளனர். அவர்கள்தான் மோடிக்கும் கூட சிகிச்சை அளித்தார்கள். தமிழகத்தின் உரிமைகளைப் பறிக்க வேண்டும் என்பதற்காகவே இதுபோன்ற தேர்வுகள் கொண்டுவரப்படுகிறது. ஆனால் இந்த உரிமைகள் அனைத்தையும் எடப்பாடி பழனிசாமி விட்டுக்கொடுக்கிறார். அவர் மீது ஏராளமான ஊழல் புகார்கள் இருக்கின்றன. அதிலிருந்து தப்பிக்கவே மோடியின் சொல்லுக்கு எல்லாம் எடப்பாடி பழனிசாமி தலையாட்டுகிறார். 

 

கரோனா காலத்தில் மக்கள் படும் கஷ்டங்களைப் போக்க 7,000 ரூபாய் நிவாரணம் கொடுக்க வேண்டும் என்றார் ஸ்டாலின். அப்போது கஜானா காலி என்று கைவிரித்தார் எடப்பாடி. இப்போது ரேஷனில் பொங்கல் பரிசாக 2,500 ரூபாய் கொடுக்கிறார். இது வரியாக நாம் செலுத்திய பணம்தான். இதைத்தான் நமக்குக் கொடுக்கிறார்கள். 10 ஆண்டுகளாக அவர்களை நம்பி ஏமாந்துவிட்டோம். எனவே உங்கள் பணத்தை வாங்கும் நீங்கள், அதில் மயங்கி ஏமாந்துவிடாதீர்கள். ஸ்டாலினுக்கு வாக்களித்து அவரை முதல்வராக்குங்கள். இல்லாவிட்டால் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் வீணாகிவிடும். 

 

கடந்த 10 ஆண்டுகளில் எந்த தொழிற்சாலைகளும் தொடங்கப்படவில்லை. படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் இல்லை. இன்னும் நான்கு மாதத்தில் நீங்கள் செலுத்தும் வாக்கால் இதற்கு விடிவுகாலம் பிறக்கும். தமிழகம் நிச்சயம் முன்னேற்றம் காணும்.” இவ்வாறு தயாநிதி மாறன் பேசினார்.

 

சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தலைமையில் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. பகுதி செயலாளர் கேபிள் ராஜா, மாவட்ட அவைத்தலைவர் கலையமுதன், பொருளாள் சுபாஷ், மாநகர செயலாளர் ஜெயக்குமார், தீர்மானக்குழு உறுப்பினர் தாமரைக்கண்ணன், நெசவாளர் அணி துணை அமைப்பாளர் 'அசோக் டெக்ஸ்' அசோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.