Skip to main content

''தீபாவளி என்பது பெளத்த விஞ்ஞான விழா'' -ஆம்ஸ்ட்ராங் பேச்சு

Published on 22/10/2022 | Edited on 22/10/2022

 

Diwali Buddhist Science Festival - Armstrong speech

 

தீபாவளி பண்டிகைக்கு காரணமாக சொல்லப்படும் கதைகள் ஏராளம். அதில் வால்மீகி ராமாயணத்தில் கொடியவனான ராவணனை அழித்து தன்னுடைய வனவாசம் முடிந்து சீதையுடன் அயோத்திக்கு ராமர் திரும்புவதை விளக்கேற்றிக் கொண்டாடியதாகவும், சிவபெருமான் அசுரனின் தலையில் கைவைக்க வெடித்து சிதறியதாகவும் என இப்படி எண்ணற்ற கதைகளை சொன்னாலும் தீபாவளிக்கு என்று ஒரு வரலாற்று உண்மை இருப்பதாக தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் பேசியுள்ளார்.

 

தீபாவளி பண்டிகை குறித்து அவர் பேசியுள்ளதாவது, ''அக்காலத்தில் பெளத்த மடங்களில் தங்கியிருக்கும் அறவணடிகள் தங்களின் ஓய்வு காலங்களில் நேரத்தை வீணாக்காமல் பழங்களின் தன்மைகளையும், செடிகளின் தன்மைகளையும் மற்றும் உலோகங்களின் தன்மைகளையும் ஆராய்ந்து அதன் குணங்களையும் பயன்களையும் உறுதிசெய்த பின் அதை மன்னரிடத்தில் கூறி அவரின் ஒப்புதலுடன் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர். அப்படி புதியதாய் ஒரு பொருளை கண்டுபிடிக்கும் நாளை புத்தாடை உடுத்தி மற்றவர்களுக்கு ஈகை பண்புடன் உணவு பதார்த்தங்களை செய்து கொடுத்து கொண்டாடியதுதான் பின்னர் நாட்களில் பண்டிகையாக கொண்டாடப்பட்டது. தென்னிந்தியாவில் பள்ளி என்னும் நாட்டை பகுவன் என்னும் அரசன் ஆண்டு வந்தான். அரசனிடம் சென்ற அறவணடிகள் எள் எனும் தானியத்தின் மூலம் தயாரிக்கப்பட்டதை எண்ணையை கொடுத்து இது கபாலரோகம், சோமரோகம், மேகநோய், மலச்சிக்கல், எலும்புருக்கி, ஈளை ஆகிய நோய்களுக்கு இது மருந்தாக அமையும் மேலும்  சுவையான பல பலகாரங்கள் தயாரிக்க பயன்படும் என எடுத்துரைத்தனர்.

 

அதனை மன்னன் பகுவன் ஆய்வு செய்து உறுதிசெய்த பின் நாட்டில் அதிகமாக எள்ளை விளைவித்து நாட்டு மக்களை வரவழைத்து கண்டுபிடிக்கப்பட்ட எண்ணெய்யை கொடுத்து தலையில் தேய்க்கச் சொல்லியதோடு அந்நாட்டில் ஓடும் தீபவதி நதியில் நீராடச் செய்தான். மேலும் அந்த எள் நெய்யில் (நல்லெண்ணையில்) பலகாரங்கள் செய்து அனைவருக்கும் கொடுத்து மக்களை மகிழ்வித்தான். தீபவதி நதியில் நீராடிய அந்த நாளை மறவாமல் மக்கள் ஆண்டுதோறும் புத்தாடை உடுத்தி மற்றவர்களுக்கு ஈகை தானம் செய்து வழக்கம் போல் எள் எண்ணெயில் பலகாரங்கள் சமைத்து மகிழ்ச்சியாக கொண்டாடி வந்தனர். தீபவதி பண்டிகை காலப்போக்கில் மருவி தீபாவளி பண்டிகையானது.இந்த வரலாற்றை தாமாக சொல்லவில்லை. உறுதியான வரலாற்று தகவலை அயோத்திதாச பண்டிதர் பின்வரும் பெருந்திரட்டு பாடல் மூலம் உறுதி செய்கிறார்.

 

“பள்ளியம்பதிலூர்ந்த பகு வனார் கிழவகாலந் தெள்ளியலுழவிலூறுஞ் சேர்புநல் புஞ்சைவாவி எள்ளக வெண்ணெயாய்ந்த விடயமற்றவர்குறிப்ப வெள்ளியல்மற்றாகார மற்சிர மகிழ்வென்றாங்கே சிர முருவெள் நெய்மற்றுந் திரளொடு செந்நெலீய்ந்து கரமுகிலேந்திகங்கைக் கரை தீபவதியைநாடித் துரமுறத் தோய்ந்து நீரிற்று வைந்துமெய்யக நறப்ப பரவருமசதி மற்றும் பாயிலுமகலுமென்றான்” பெளத்தத்தின் வழிநின்று அயோத்திதாசர் கூறும் இச்செய்தி மூடத்தனம் ஏதுமின்றி பகுத்தறிவுக்கு உட்பட்டதாகும் விஞ்ஞான பூர்வமாகவும் உள்ளது.

 

பெளத்தத்தை பின்பற்றும் அண்டைய நாடுகளிலும் இதுபோன்ற இருப்பது இத்தகவலுக்கு மேலும் வலு சேர்க்கிறது. முன்னோர் வழி நின்று கொண்டாடி மகிழ்வோம் தீபாவளி திருநாளை'' என தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ட்ரோன்கள் கண்காணிப்பில் வெள்ளியங்கிரி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Drones are the key to surveillance

வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர். மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர்.

அண்மையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய வேலூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற இளைஞரும், சேலம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த கிரண் என்ற இளைஞரும் மலையேறும் போதே மூச்சுத்திணறி உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 25 ஆம் தேதி தெலுங்கானாவைச் சேர்ந்த சுப்பாராவ் (வயது 68). மருத்துவரான இவர் நான்காவது மலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அதேபோல் சேலத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் குரங்கு பாலம் என்ற பகுதியில் மயங்கி விழுந்து இறந்து போனார். மேலும் 26 ஆம் தேதி நான்கு மணி அளவில் மலையில் ஏறிக் கொண்டிருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவரும் மூச்சுத்திணறி உயிரிழந்தார். அதேபோல் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய ரகுராம் (வயது 50) என்பவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இப்படியாக வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இன்று சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வெள்ளியங்கிரியில் மலையேறும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் வனத்துறை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தற்போது கோடை காலம் என்பதால் காட்டுத்தீ ஏற்படும் சூழ்நிலைகளும் உருவாகியுள்ளது. பக்தர்கள் மலையேறுவதற்கான பாதையைத் தவிர்த்து வேறு பாதையைப் பயன்படுத்திவிடாமல் இருக்க கண்காணிக்கப்படுவதாற்காக ட்ரோன்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று காலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாரை சாரையாக மலையேற தொடங்கி வரும் நிலையில் சுழற்சி முறையில் தற்போது ட்ரோன்கள் மூலம் பக்தர்களின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Next Story

கள்ளழகர் திருவிழாவில் நிகழ்ந்த சோகம்; போலீசார் தீவிர விசாரணை!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tragedy at the Kalalhagar festival Police serious investigation

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமரிசையாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இதனை லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் நேரில் கண்டு களிப்பர்.  தங்கக் குதிரையில் கம்பீரமாக வலம் வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரைத் திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நேற்று (22.04.224) கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து பரவசம் அடைந்தனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அதே சமயம் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக கள்ளழகர் மதுரை வந்தடைந்தார். கள்ளழகர் உடன் பாரம்பரியமாகக் கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டது.

இதனையடுத்து மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று (23.04.2024) நடைபெற்றது. கள்ளழகரை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் குவிந்தனர். இதனையடுத்து பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றின் கரைக்கு வருகை புரிந்தார். கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவதற்கு முன்பு ஆற்றங்கரையில் மாலை அணிவித்து அழகருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களின் கோஷம் விண்ணை முட்ட, தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் இறங்கினார். 

Tragedy at the Kalalhagar festival Police serious investigation

இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவில் இளைஞர்கள் பட்டாக்கத்தியுடன் மோதிக்கொண்டதில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். சித்திரைத் திருவிழா நடந்த மதுரை மாவட்டம் ஆழ்வார்புரம் பகுதியில் ஏற்பட்ட மோதலில் கத்தியால் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். இதில் ஆழ்வார்புரத்தைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் சிவகங்கையைச் சேர்ந்த சோனையை மர்ம நபர்கள் கத்தியால் குத்தினர். இதனையடுத்து மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவம் குறித்து மதுரை மாநகர போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.