Skip to main content

திசைமாறும் கடத்தல் டெக்னிக்... கூரியர் வாகனத்தில் 350 கிலோ கஞ்சா

Published on 04/10/2022 | Edited on 04/10/2022

 

லாரிகள், சரக்கு வாகனங்கள், பேருந்துகள், டூவீலர் என்று சமயங்களில் கிடைத்த வாகனங்களில் போதைப் பொருட்கள் கடத்தப்படுவது உளவாளிகளின் தகவலால் போலீசார் வசம் சிக்கிவிடுகின்றன. ஆனாலும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டங்களும், கடத்தல்களும் தலை கவிழ்ந்த மாதிரி தெரியவில்லை. தற்போது கடத்தல் புள்ளிகள் போலீசாரின் பார்வை பதியாதவகையில் தங்களின் கடத்தல் ரூட்டை டெக்னிக்கலாக மாற்றியுள்ளனர்.

 

நேற்றைய தினம் மாலையில் தூத்துக்குடி மாவட்டத்தின் சூரங்குடி போலீசார் வேம்பார் சோதனைச் சாவடியில்  வாகனச் சோதனையில் இருந்திருக்கின்றனர். அப்பொழுது அந்த வழியாக வந்த கூரியர் வாகனம் ஒன்று சோதனைச் சாவடியில் நிற்காமல் கிழக்கு கடற்கரை சாலை வழியே தூத்துக்குடி நோக்கிப் பறந்திருக்கிறது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் கூரியர் வாகனத்தை விடாமல் தொடர்ந்து 15 கி.மீ. தொலைவு விரட்டி சென்றிருக்கிறார்கள். அவர்களின் துரத்தலைக் கண்டு பீதியானவர்கள் குளத்தூரையடுத்த பல்லாங்குளம் காட்டுப் பகுதியின் முள்வேலி புதருக்குள் கூரியர் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பியோடியுள்ளனர். பின் தொடர்ந்த போலீசார் கூரியர் வாகனத்தை சோதனையிட்டதில் 350 கிலோ கஞ்சா மூட்டைகள் இருப்பதைக் கண்டுபிடித்து அதனையும் வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

 

தகவலறிந்த எஸ்.பி.பாலாஜி சரவணன், ஏ.டி.எஸ்.பி.கார்த்திகேயன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து கஞ்சா கடத்தப்பட்ட கூரியர் வாகனத்தைப் பார்வையிட்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சூரங்குடி போலீசார் தப்பியோடியவர்களை தனிப்படை மூலம் தேடி வருகின்றனர். சிக்கிய கஞ்சாவின் இந்திய மதிப்பு 2 கோடி என்றாலும் இதன் சர்வதேச மதிப்பு 8 கோடி என்கிறார்கள். 24 மணி நேரத்திற்குள் குறையாது சரக்குகளை சப்ளை செய்கிற கூரியர் வாகனங்கள் இதுவரை சந்தேக வளையத்தில் இல்லை. தற்போதைய கடத்தல் மூலம் அவைகளும் கண்காணிக்கப்படுகின்றன. இலங்கைக்கு கடத்தும் பொருட்டு கொண்டுவரப்பட்டதா என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

நீரோடையில் மிதந்த சடலம்; போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
A body lying in a stream; Police investigation shocked

தந்தையைக் கொலை செய்தவரைப் பழிக்குப் பழி கொலை செய்து நீரோடையில் வீசிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் தெற்கு ஏறாந்தை கிராமத்தில் வசித்து வருபவர் தேவபாலன். லாரி ஓட்டி வந்த தேவபாலன் திடீரென காணாமல் போன நிலையில், உறவினர்கள் அவரைத் தேடி வந்தனர். இறுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நீரோடை ஒன்றில் சடலம் ஒன்று மிதப்பதாகத் தகவல் பரவியது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை போலீசார் ஆய்வு செய்ததில், வெட்டுக் காயங்களுடன் ஒருவர் கொலை செய்யப்பட்டு நீரோடையில் வீசப்பட்டது தெரிய வந்தது.

உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது காணாமல் போன தேவபாலன் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தேவபாலன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தூர் நீதிமன்றத்தில் உத்திரகுமார், சுரேஷ்குமார், சேர்மதுரை உள்ளிட்ட மூன்று பேர் சரணடைந்தனர். மூவரும் சகோதரர்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழிக்குப் பழியாக லாரி டிரைவரை கொலை செய்தது தெரியவந்தது.

2017 ஆம் ஆண்டு துரைபாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேவபாலனுக்கு தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபணம் ஆகாததால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், துரைபாண்டியனின் மகன்களான சுரேஷ்குமார், உத்திர குமார், சேர்மதுரை ஆகிய மூன்று பேரும் பல வருடங்கள் கழித்து தேவபாலனை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.