Skip to main content

மாவட்ட ஆட்சியரின் உதவியாளர் மர்ம மரணம்; போலீசார் விசாரணை

Published on 16/11/2022 | Edited on 16/11/2022

 

District Collector Assistant passed away mysteriously

 

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவராக இருப்பவர் அமர் குஷ்வா. இவரின் நேர்முக உதவியாளராக (பொதுக்கணக்கு) மோகனகுமரன் இருந்து வந்தார். 53 வயதான இவரின் சொந்த ஊர் சேலம். பணிமாறுதலில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். தினசரி சேலம் சென்று வர முடியாது என்பதால் திருப்பத்தூரிலேயே வாடகை வீடு எடுத்து தனியே வசித்து வந்தார். இவரது மனைவி சேலத்தில் ஒரு கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவரது மகன் சேலத்தில் படித்து வருகிறார்.

 

கடந்த நவம்பர் 12 ஆம் தேதி பணிக்கு வந்தவர் மாலை வீடு சென்றுள்ளார். ஆனால், நவம்பர் 13 ஆம் தேதிக்கு பணிக்கு வரவில்லை. இவரது மொபைல் எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது சுவிட்ச்ஆப் என வந்துள்ளது. சேலத்தில் உள்ள அவரது மனைவிக்கு தொடர்பு கொண்டு ஊழியர்கள் கேட்ட போது ஊருக்கு வரவில்லை எனச் சொன்னதாகத் தெரிகிறது.

 

நவம்பர் 14 ஆம் தேதி மாலை அவரது அலுவலக ஊழியர்கள் அவர் தங்கியுள்ள வீட்டுக்குச் சென்று பார்த்த போது உள்ளிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. இதனால் திருப்பத்தூர் தாசில்தார் சிவப்பிரகாசம், திருப்பத்தூர் நகர காவல் ஆய்வாளர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது நிர்வாண நிலையில் இறந்து கிடந்துள்ளார். உடலைக் கைப்பற்றி திருப்பத்தூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர்.

 

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவித்தனர். நவம்பர் 15 ஆம் தேதி அவரது உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகளின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியதோடு அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினர். அதன் பின்னர் அவரது உடல் சேலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது இயற்கை மரணம் என தற்போது சொல்லப்பட்டாலும் அவரின் உடற்கூராய்வு முடிவு வந்த பிறகே மர்மம் விலகும் எனக் கூறப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.