Skip to main content

போலீஸ் எஸ்ஐ பணியிடைநீக்கம்; அபராதம் வசூலில் மோசடி புகார்!!

Published on 12/12/2019 | Edited on 12/12/2019

சேலத்தில், போக்குவரத்து விதிகளை மீறுவோரிடம் வசூலிக்கப்பட்ட அபராதத் தொகையில் ரசீதில் பதிவு செய்யாமல் மோசடி செய்ததாக காவல்துறை உதவி ஆய்வாளர் வியாழக்கிழமை (டிச. 12) பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.


சாலைகளில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் போக்குவரத்து விதிகளை மீறினால் அவர்களுக்கு, அந்த இடத்திலேயே அபராதம் (ஸ்பாட் பைன்) விதிக்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இலகுரக, கனரக வாகன ஓட்டிகளைவிட ஹெல்மெட் அணியாமல், ஓட்டுநர் உரிமமின்றி செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளே பெரும்பாலும் போக்குவரத்துக் காவலர்களிடம் அபராதம் செலுத்தும் நிலைக்கு ஆளாகின்றனர்.

Dismissal of police SI; Fraud Complaint for Fines SALEM DISTRICT POLICE


அபராதம் வசூலிக்கும் தொகைக்கு உரிய ரசீதை அந்த இடத்திலேயே காவலர்கள், பிஓஎஸ் உபகரணத்தில் பதிவிறக்கம் செய்து கொடுத்து விடுகின்றனர். நிலைமை இவ்வாறு இருக்க, சேலம் மாநகர காவல்துறையில் போக்குவரத்துப் பிரிவில் பணியாற்றி வரும் உதவி ஆய்வாளர் கோவிந்தராஜ் (எஸ்ஐ), அபராதம் வசூல் தொகையில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்துள்ளது.


அண்மையில், தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த ஒருவரை எஸ்ஐ கோவிந்தராஜ் மடக்கிப் பிடித்தார். அவருக்கு 200 ரூபாய் அபராதம் விதித்துள்ளார். அதனால் வாகன ஓட்டிக்கும் அவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. என்றாலும் அபராதத் தொகையை செலுத்திவிட்ட அந்த வாகன ஓட்டி, அதற்கான ரசீது தொகையை கொடுக்கும்படி கேட்டுள்ளார். 


பிஓஎஸ் உபகரணத்தில் தகவல்களை உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்து ரசீது தாளை அந்த வாகன ஓட்டியிடம் வழங்கினார். ஆனால், அந்த ரசீதில் அபராதத் தொகை பெற்றுக்கொண்டதற்கான விவரங்கள் பதிவு செய்யப்படாமல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கேட்டதால் அவர்கள் இருவருக்கும் மீண்டும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இந்தக் காட்சிகளை அந்த வாகன ஓட்டியுடன் வந்த ஒருவர், கைபேசியில் பதிவு செய்து, சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தார். இந்த காணொலிக் காட்சி, காவல்துறை வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுகுறித்து காவல்துறை உயரதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில், அபராதக் கட்டண விவரங்கள், உரிய ரசீதில் பதிவு செய்யப்படவில்லை என்பது ஊர்ஜிதமானது. இதையடுத்து, எஸ்ஐ கோவிந்தராஜை பணியிடைநீக்கம் செய்து, மாநகர காவல்துறை ஆணையர் செந்தில்குமார் வியாழக்கிழமை (டிச.12) உத்தரவிட்டார். மேலும், குறிப்பிட்ட தொகைக்கு மேல் கூடுதலாக அபராதம் வசூலிக்கக்கூடாது என்றும், வசூலிக்கப்படும் தொகைக்கு உரிய ரசீது கொடுக்கப்பட வேண்டும் என்றும் போக்குவரத்துப் பிரிவு காவலர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.




 

சார்ந்த செய்திகள்

 

Next Story

கனமழை எதிரொலி; பள்ளி விடுமுறை தொடர்பான அறிவிப்பு

Published on 01/07/2024 | Edited on 01/07/2024
 Heavy rain echoes; Notification regarding school holidays

அண்மையில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது. இதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாகக் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் கடந்த ஒரு சில வாரங்களாக மழை பொழிந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

முன்னதாக வெளியிடப்பட்டிருந்த சென்னை வானிலை மைய அறிவிப்பில், ‘இன்று முதல் ஏழு நாட்கள் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவடங்களின் ஒரு சில இடங்களில் இரண்டு நாட்களுக்குக் கனமழை இருக்கும். அடுத்த ஐந்து நாட்களுக்குத் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மூன்று டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரவும் வாய்ப்பு உள்ளது. சென்னையைப் பொறுத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கனமழை எதிரொலி காரணமாக நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Next Story

என். ஐ.ஏ அதிரடி சோதனை; பென்டிரைவ், செல்போன்கள் பறிமுதல்

Published on 30/06/2024 | Edited on 30/06/2024
 N. AI Action Test; Confiscation of pen drives, cell phones

தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி உட்பட 12 இடங்களில் என்.ஐ.ஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை, கும்பகோணம், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட 12 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 'ஹிஜ்புத் தகர்' என்ற தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படுவோர் வீடுகளில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக புதுக்கோட்டையில் மாத்தூரில் உள்ள அப்துல்கான் என்பவரது வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆள்சேர்ப்பு மற்றும் உதவி புரிதல் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் என்.ஐ.ஏ சோதனைக்கு பிறகு வெளிவரும் என தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் தாம்பரம் அடுத்துள்ள முடிச்சூர் பகுதியில் உள்ள ஹமீத் அக்பர் அகமது என்பவர் வீட்டில் சோதனையில் நடைபெற்ற வருகிறது. அதேபோல ஈரோட்டில் நடைபெற்ற சோதனையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னை பட்டினம்பாக்கம் பகுதியில் சோதனையில் ஈடுபட்ட பொழுது ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்த என்.ஐ.ஏ அதிகாரிகள் பட்டினம்பாக்கம் காவல் நிலையத்தில் அந்த நபரை ஒப்படைத்துவிட்டு கொளத்தூர் பகுதிக்கு விசாரணைக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதேபோல் இந்த சோதனைகளில் பென்டிரைவ், செல்போன் உள்ளிட்ட ஆவணங்கள் பலரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.