Skip to main content

காவல்துறையை அவமானப்படுத்தியதால் மா.செ. சஸ்பெண்ட் - திருமாவளவன் எம்.பி

Published on 30/01/2023 | Edited on 30/01/2023

 

Dismiss vck district secretary from party for under-reporting of police

 

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கோட்டை வீதி அருகில் அரசு புறம்போக்கு இடத்தில் விடுதலைச் சிறுத்தை கட்சி அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகம் பக்கத்தில் அதே அரசு புறம்போக்கு இடத்தில் ஆரணி அருகே இரும்பேடு கிராமத்தைச் சேர்ந்த சின்னகண்ணன் என்பவரின் கடை உள்ளது. அந்தக் கடையை விடுதலைச் சிறுத்தை கட்சியினரால்  ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக சின்னகண்ணன் என்பவர் அவர்கள் மீது ஆரணி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

 

அதே போல சின்னகண்ணன் மீது தங்களை தரக்குறைவாக பேசியதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் புகார் தெரிவித்தனர். இரு தரப்பினர்களிடமும்  கடந்த 2ம் தேதி ஆரணி நகர காவல் நிலையத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது விடுதலைச் சிறுத்தை கட்சி திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் ம.கு.பாஸ்கரன் என்பவர் விசாரணையின் போது நகர காவல் நிலைய எஸ்.ஐ கிருஷ்ணமூர்த்தி என்ற அதிகாரியை பார்த்து நீ எஸ்.சி (தாழ்த்தப்பட்டவர்) தானே என்றும் மற்றொரு அதிகாரியான காவல் ஆய்வாளர் கோகுல்ராஜ் என்பவரை ஒருமையில் மிரட்டல் தொனியில் விசாரணையின் போது பேசும் வீடியோ 5 நாட்களாக சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தன. இந்நிலையில் இன்று வேலூர் எஸ்பி ராஜேஷ்கண்ணா தலைமையில் சுமார் 100க்கும் மேற்பட்ட போலீசார் ஆரணி நகர் முழுவதும் குவிக்கப்பட்ட நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் பாஸ்கரன் மற்றும் ஒன்றிய செயலாளர் ரமேஷ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

ஜனவரி 27 ஆம் தேதி பிணையில் வெளியே வந்தார். இதனைத் தொடர்ந்து  நேற்று விசிக கட்சியினர் 50க்கும் மேற்பட்டவர்கள் ஒன்று கூடி, நகர காவல் நிலையம் வழியாக ஊர்வலமாக வந்த விடுதலை சிறுத்தை கட்சியினர் பாஸ்கரன் சிறைக்குச் செல்ல காரணமாக இருந்த நகர காவல் நிலைய ஆய்வாளர் கோகுல்ராஜ் மற்றும்  துணை ஆய்வாளரை கிருஷ்ணமூர்த்தியை அவன், இவன் என்று கூறி தரக்குறைவாகப் பேசியபடி காவல் நிலையம் முன்பு கோஷங்கள் எழுப்பி மிரட்டல் விடுத்தனர். அப்போது பாதுகாப்பு பணியிலிருந்த அப்பகுதியிலுள்ள போலீசார் அமைதி காத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து வாட்ஸாப்பில் நெட்டிசன்கள் பரப்பிய அந்த வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 

 

இதையடுத்து, ஆரணி போலீசார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் பாஸ்கரன் மற்றும் விசிகவினர் 50 பேர் மீது ஒன்பது பிரிவின் கீழ் ஜாமீனில் வெளிவராத பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். வழக்கில் உள்ளவர்களின் வீடுகளுக்குச் சென்று கைது நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பாஸ்கர் தலைமறைவாகியுள்ளார். ஆரணி நகர் முழுவதும் 500க்கும் மேற்பட்ட போலீசார் திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இருந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், காவல்துறையினரை அவமதிக்கும் வகையில் மிரட்டல் விடுத்த விவகாரம் தொடர்பாக, வி.சி.க திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் ம.கு.பாஸ்கரன் என்ற பகலவன் 3 மாத காலத்துக்கு கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். அதோடு, இதுபற்றி முழுமையாக விசாரிக்க மாநிலப் பொறுப்பாளர் ஒருவர் தலைமையில் விசாரணைக்குழு நியமிக்கப்படும் என்றும் அந்தக் கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்திருக்கிறார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.